டெல்லி: கொரோனா பரவலுக்கு மத்தியில் வளர்ச்சி கண்ட சில துறைகளில் இன்சூரன்ஸ் துறையும் ஒன்று.
சொல்லப்போனால் கொரோனா கொடுத்த பரிசு என்று கூட கூறலாம். ஏனெனில் இன்சூரன்ஸ் என்றாலே ஒதுங்கி போகும் பலர், இன்று தேடிப்போய் இன்சூரன்ஸ் எடுக்க ஆரம்பித்துள்ளனர்.
ஏனெனில் நாட்டில் கொரோனா வைரஸின் பரவல் மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், ஹெல்த் இன்சூரன்ஸ்களுக்கான தேவை மிக அதிகரித்துள்ளது.
மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, மருத்துவ பிரச்சனைகளையும் சமாளிக்கும் பொருட்டு, விரிவான மருத்துவ காப்பீடுகளை தேர்தெடுத்து வருகின்றனர்.
ஹெல்த் இன்சூரன்ஸ் வணிகம்
இதற்கு மத்தியில் தான் பொது காப்பீட்டாளர்களின் மொத்த வணிகத்தில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஹெல்த் இன்சூரன்ஸ் வளர்ச்சியானது, 25% அதிகரித்துள்ளதாக கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. அதோடு ரீடெயில் ஹெல்த் மற்றும் அரசு வணிகங்களும் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போதும் 40% அதிகரித்துள்ளதாக கோடக் அறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் அதே சமயத்தில் குழும ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டமானது 12% குறைந்துள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
இன்சூரன்ஸ் எடுக்க தூண்டுதல்
கொரோனாவினால் நுகர்வோர் மத்தியில் அதிகரித்து வரும் ஆபத்து, பலரையும் இன்சூரன்ஸ் எடுக்க தூண்டியுள்ளது. அதோடு புதியதாக தொடங்கப்பட்ட ஆரோக்கிய சஞ்சீவினி திட்டங்கள் இந்த வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் மக்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களில் இருந்து, தங்களுக்கான பாலிசிகளை எடுக்க விரும்புகின்றனர் என்கிறது இந்த அறிக்கை.
ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமிய வளர்ச்சி
இதன் படி சில்லறை ஹெல்த் இன்சூரன்ஸ் வணிகம் கடந்த ஆண்டை விட 51% அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியமும், கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, 39% அதிகரித்துள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.
இதில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் வணிகத்தில் 16% வளர்சியையும், இதே பொதுத்துறை நிறுவனங்கள் 21% வளர்ச்சியினையும் காட்டியுள்ளன. அதோடு ஆன்லைனில் பாசிலிகள் புதுபித்தலிலும் ஹெல்த் இன்சூரன்ஸ் துறையில் பலன் அளித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
எந்தெந்த நிறுவனங்கள்
அதே போல, ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியங்கள் வளர்ச்சியில் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் 40% வளர்ச்சி கண்டுள்ளன. இதில் குறிப்பாக ரிலையன்ஸ் ஜெனரல் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 66% வளர்ச்சியினையும், டாடா ஏஐஜி 65% வளர்ச்சியினையும், சோலா எம் எஸ், ஐசிஐசிஐ லம்பார்டு இன்சூரன்ஸ் மற்றும் பஜாஜ் ஜெனரல் நிறுவனங்கள் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, முறையே 62% வளர்ச்சி, 28% மற்றூம் 35 வளர்ச்சியினையும் கண்டுள்ளன. ஒட்டுமொத்தமாக பொது காப்பீட்டாளர்கள் ஆகஸ்ட் 2020ல் 10% பிரீமிய வளர்ச்சி கண்டுள்ளனர்.