இந்தியாவில் முதியோர்களின் நலனை காக்கும் வகையில் பல வகையான முதலீட்டு திட்டங்கள், சேமிப்பு திட்டங்கள், இன்சூரன்ஸ் என பல வகையான திட்டங்கள் உள்ளன. ஆக அரசு ஊழியர்கள் மட்டும் அல்ல அனைத்து தரப்பு மக்களும் பின்னாளில் கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை.
அதற்காக தங்களின் இளமை காலத்தில் இருந்தே சற்று சேமித்தால் போதுமானது. இதன் மூலம் பிற்காலத்தில் யாரையும் எதிர்பார்த்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை.
ஏனெனில் பெற்ற பிள்ளையானாலும், வருங்காலத்தில் சூழ்நிலைகள் எப்படி இருக்கும் என்பது யாராலும் கணிக்க முடியாது. ஆக கடைசி நேரத்தில் புலம்பி கஷ்டப்படுவதைக் காட்டிலும், இன்றே அதற்கான அஸ்திவாரத்தினை போட்டு வைக்கலாம். ஏனெனில் இன்று பலருக்கும் சோறு போடுவதே அவரவர் சிறுசேமிப்பும், பிஎஃப் தொகையும் தான்.
கஷ்டமான காலம்
அதிலும் கொரோனா போன்ற நெருக்கடியான காலகட்டங்களில் மக்கள் அவஸ்தைபடுவதை நாம் கண் கூட பார்த்திருக்கிறோம். குறிப்பாக முதுமையில் வயதானவர்கள் எந்தளவுக்கு கஷ்டப்பட்டார்கள் என்பதையும் கண் கூடாக பார்த்திருக்கலாம். ஆக அப்படி ஒரு நிலைமை உங்களுக்கும் வர வேண்டுமா? என்ன? தற்போதைய நடைமுறையில் பலரும் வங்கி பிக்ஸட் டெபாசிட்டுகளையே பலரும் நாடுகின்றனர். எனினும் அதனையும் தாண்டி பல பாதுகாப்பான முதலீட்டு திட்டங்கள் உள்ளன.
விலை வாசி அதிகரிப்பு
அதிலும் இனி வரவிருக்கும் காலக்கட்டங்களில் பணவீக்கம் என்பது எந்தளவுக்கு அதிகரிக்கும் என்பது, ஒரு மிகப்பெரிய அச்சமாகவே உள்ளது. இன்றே சாதாரணமாக ஒரு சாப்பாட்டின் விலை 100 ரூபாய் எனில், இன்னும் 10 - 30 வருடங்களில் அதன் விலை 300 - 500 ரூபாயாக கூட அதிகரிக்கலாம். அந்தளவுக்கு விலை வாசி அதிகரித்து வருகின்றது. அப்படியிருக்கையில் அதற்கேற்ப நாமும் நமது ஒய்வுகாலத்தினை திட்டமிட வேண்டும்.
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு தான் எல்ஐசி ஒரு ஓய்வூதிய திட்டத்தினை அறிவித்தது. இது LIC-யின் சாரல் பென்ஷன் திட்டம். இது தவிர இன்னும் சில திட்டங்களைத் பற்றித் தான் நாம் இன்று பார்க்கவிருக்கிறோம்.
எல்ஐசி சாரல் பென்ஷன் திட்டம்
எல்ஐசி சாரல் பென்ஷன் திட்டத்தினை ஜூலை 1 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாலிசியின் சிறப்பம்சமே ஒரு முறை பிரீமியம் செலுத்தினால் போதும். பாலிசியினை தொடங்கும்போது ஆண்டுத்தொகை விகிதம் உத்தரவாதம் அளிக்கப்படும். இந்த பாலிசியினை 40 வயது முதல் 80 வயது வரையில் எடுத்துக் கொள்ளலாம்.
இதன் மூலம் பாலிசிதாரர் அவரின் வாழ் நாள் முழுவதும் ஒரு வருமானத்தினை பெறலாம். இதில் பங்கு சந்தை சார்ந்த ரிஸ்க் இல்லை. இது குறித்து https://tamil.goodreturns.in/personal-finance/lic-launches-saral-pension-plan-check-deails-here-024154.html என்ற கட்டுரையில் விரிவாக ஏற்கனவே பார்த்தோம்.
NPS - தேசிய ஓய்வூதிய திட்டம்
ஓய்வுகால திட்டங்களில் தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) ஒரு சிறந்த திட்டமாகவே பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் சிறப்பே முறைசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் பயனளிக்கும் ஒரு திட்டமாகும். கடந்த 2004ம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்காக தேசிய ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் இது பின்னர் 2009க்கு பிறகு தனியார் ஊழியர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள், இல்லத்தரசிகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது.
இடையில் பணம் எடுக்க முடியுமா?
அரசின் இந்த ஓய்வூதிய திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர், கணக்கு முடிவு பெறும் வரையில் அல்லது ஒய்வு பெறும் வரையில் நிதியினை திரும்ப பெற முடியாது. எனினும் இந்த தேசிய ஓய்வூதிய திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளியேறும் போது மட்டுமே, இக்கணக்கினை முடித்து பணத்தை திரும்ப பெற முடியும்.
அடல் பென்ஷன் யோஜனா (APY)
மத்திய அரசின் திட்டங்களில் ஒய்வுகாலத்திற்கு ஏற்ற திட்டங்களில் ஒன்று, அடல் பென்ஷன் யோஜனா (Atal pension Yojana - APY). இந்த திட்டமும் அமைப்பு சாரா துறையில் வேலை செய்பவர்களுக்கும், ஓய்வுக்காலத்திற்கு பின்பு பயனளிக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட ஒரு அம்சமான திட்டமாகும்.
APY- வயது வரம்பு
அடல் பென்ஷன் திட்டத்தின் கீழ், 18 முதல் 40 வயது வரையிலான எந்தவொரு இந்திய குடிமகனும் ஒரு கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்துள்ள வங்கி கிளை அல்லது தபால் நிலையத்திலிருந்து ஒரு கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம்.
மாத மாதம் ஓய்வூதியம் (APY)
இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இணைந்த சந்தாதாரர் தனது கணக்கில் அளிக்கும் பங்களிப்பின் அடிப்படையில் 60 வயதிலிருந்து ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையில் உத்தரவாத ஓய்வூதியம் பெறலாம். ஒரு வேளை சந்தாதாரர் இறந்துவிட்டால், நாமினிக்கு இந்த ஓய்வூதியம் கிடைக்கும்.
எவ்வளவு வருமானம் (APY)
உதாராணத்திற்கு 18 வயதில் நீங்கள் இந்த திட்டத்தில் இணைகிறீர்கள் எனில். தினசரி 7 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள். மாதம் 210 ரூபாய் முதலீடு செய்வீர்கள். பணம் செலுத்த வேண்டிய வருடம் 42 வருடங்களாகும். இதன் மூலம் உங்கள் 61 வயதில் இருந்து மாதம் தோறும் 5,000 ரூபாய் ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளலாம். இதே மாதம் 42 ரூபாய் செலுத்தினால், மாதம் 1000 ரூபாயும், மாதம் 64 ரூபாய் செலுத்தினால் 2,000 ரூபாயும், மாதம் 126 ரூபாய் செலுத்தினால் மாதம் 3000 ரூபாயும், மாதம் 168 ரூபாய் செலுத்தினால், மாதம் 4,000 ரூபாயும் உங்களுக்கு ஓய்வூதியமாக கிடைக்கும். ஆக உங்களது வயது, முதலீட்டு அடிப்படையில் இந்த தொகையானது வேறுபடும்.
பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா
பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா திட்டத்தின் (PMVVY) கீழ் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு, 10 ஆண்டுகள் வரையில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் காலம் அதாவது மாத மாதம், ஒவ்வொரு காலாண்டும், ஒவ்வொரு அரையாண்டும் அல்லது ஒவ்வொரு ஆண்டும் என நான்கு கால அளவில் ஒன்றைத் தேர்வு செய்து ஓய்வூதியம் பெற முடியும். இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்கள் கண்டிப்பாக 60 வயதினை பூர்த்தி செய்து இருக்க வேண்டும்.
PMVVY நாமினிகளுக்கும் ஓய்வூதியம்
எல்ஐசி-காப்பீடு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தப் பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா திட்டத்தின் கீழ் ஓய்வூதியதார்களைச் சார்ந்து உள்ள மனைவி அல்லது கணவன் அல்லது பிறருக்கு இந்த ஓய்வூதியத்தின் கீழ் தவணை முடிய 10 ஆண்டுகள் இருக்கும் போது இறக்க நேர்ந்தால் தொடர்ந்து ஓய்வூதியம் பெற அனுமதி உண்டு.
இந்த திட்டத்தினை வாங்கிய மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, பிணையமாக வைத்துக் கடன் வாங்கிக் கொள்ள முடியும். தற்போது வட்டி விகிதம் 7.4% ஆக வழங்கப்படுகிறது.
SCSS - மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
அஞ்சலகத்தில் உள்ள மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் (SCSS ) இது அரசின் திட்டம் என்பதால் மிக பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது. இந்த சேமிப்பு திட்டத்தில் சேர ஒரு நபர் 55 வயது அல்லது 60 வயது, அதற்கு மேற்பட்டவராக இருக்கவேண்டும். 50 வயதுக்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்பு பணியாளர்களும் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய தகுதியானவர்கள் தான். அரசின் இந்த சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரையில் இருக்கலாம். எனினும் பணியில் இருந்து ஓய்வுபெற்றபோது பெறப்பட்ட தொகைக்கு மேல் இருக்கக் கூடாது.
SCSS எத்தனை ஆண்டுகால திட்டம்
இந்த சேமிப்பு திட்டத்திற்கு காலாண்டுக்கு ஒரு முறை அரசு வட்டியை மாற்றியமைக்கிறது. கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 7.40% ஆக இருந்தது. இந்த SCSS திட்டத்தின் முதிர்வுகாலம் 5 ஆண்டுகள் தான். இருப்பினும் இந்த திட்டத்தினை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். மூத்த குடி மக்களுக்கான இந்த சேமிப்பு திட்டத்தில் வரி சலுகைகளும் உண்டு.