இந்தியாவினை பொறுத்த வரையில் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், அரசின் முதலீட்டு திட்டங்களுக்கு என்றுமே தனி இடம் உண்டு.
ஏனெனில் பாதுகாப்பு உண்டு. கணிசமான வருவாய் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக முதலீட்டுக்கு எந்த பங்கமும் இல்லை. அந்த வகையில் நாம் பார்க்கவிருப்பது நீங்கள் கோடீஸ்வரர் ஆக எந்த திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்?
எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? எத்தனை ஆண்டுகாலம் முதலீடு செய்ய வேண்டும்? வரி சலுகை உண்டா? இந்த திட்டத்தில் முதலீடு செய்வதால் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்? யார் யார் இணையலாம்? வாருங்கள் பார்க்கலாம்.
மக்களின் எதிர்பார்ப்பு
இன்றைய காலகட்டத்தில் மக்களிடம் சேமிக்க வேண்டும், முதலீடு செய்ய வேண்டும்? அதன் மூலம் குழந்தைகளின் வருங்காலத்தில் எந்த பிரச்சனையும் இருக்க கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக லாபம் அதிகம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால் எதில் சேமிக்கலாம், எது பாதுகாப்பானது? எது லாபகரமானது? என்பதில் தான் குழப்பமே. இது தான் பலருக்கும் பிரச்சனையே. ஆக இதற்கெல்லாம் ஒரே பதில் பிபிஎஃப் தான். ஏனெனில் மக்கள் கேட்கும் அனைத்தும் இந்த திட்டங்களில் கிடைக்கும். இதே மற்ற முதலீடுகளில் இதனை விட லாபம் கிடைக்கும் என்றாலும், அதே அளவு ரிஸ்கும் உண்டு. முதலீட்டுக்கு பாதுகாப்பில்லை.
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்
பாதுகாப்பாக, முதலீட்டுக்கு பங்கமில்லாத ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய நினைப்போருக்கு, அரசின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பது ஒரு சரியான திட்டம் தான். ஏனெனில் முதலீட்டிற்கு பங்கம் இல்லாத ஒரு சிறந்த முதலீடு. இந்த திட்டமானது 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது. தற்போது இந்த விகிதம் 7.1% ஆக உள்ளது.
தற்போது வட்டி விகிதம்?
அதெல்லாம் சரி, இன்று பிபிஎஃப் மூலம் கோடிஸ்வரர் ஆக வேண்டும்? அப்படி எனில் இந்த திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும். எத்தனை ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். தற்போதைய நிலவரப்படி, இந்த திட்டத்தில் வட்டி விகிதம் 7.1% ஆகும். இந்த திட்டத்தின் கால வரம்பு 15 வருடம் என்றாலும், இந்த திட்டத்தின் முதிர்வுக்கு பின்னரும் 5 வருட தொகுதிகளாக தொடரலாம் என்பதால், இது இன்னும் கூடுதல் நன்மையாக பார்க்கப்படுகிறது.
எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?
அரசின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாதம் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம். (பைசாபஜார் கால்குலேட்டர் அடிப்படையில் எடுக்கப்பட்டது) நீங்கள் மாதம் 12,500 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இதன் மூலம் நீங்கள் வருடத்திற்கு 1,50,000 ரூபாய் முதலீடு செய்வீர்கள். இதனை 30 வருட காலத்திற்கு முதலீடு செய்யும்போது 1,54,50,907 ரூபாய் உங்கள் கைக்கு கிடைக்கும்.
மொத்த முதலீடு எவ்வளவு?
ஆக 7.1% வட்டி விகிதத்துடன் கணக்கீடு செய்யும்போது, 1 வருட முடிவில், உங்களது கணக்கில் 1,60,650 ரூபாயாக இருக்கும். இதே இண்டாவது ஆண்டின் முடிவில் உங்களது கணக்கில் 3,32,706 ரூபாயாக இருக்கும். ஆக மொத்தத்தில் 30 ஆண்டுகள் இந்த திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அப்படி செய்யும் பட்சத்தில் 45,00,000 ரூபாய் முதலீடு செய்திரூப்பீர்கள். வட்டியுடன் சேர்த்து 1,54,50,907 ரூபாயாக உங்களது தொகை இருக்கும்.
எப்படி இந்த கணக்கினை எப்படி தொடங்குவது?
அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை அஞ்சலகம், பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில முன்னணி தனியார் வங்கிகள் மூலமும் தொடங்கிக் கொள்ளலாம். ஒரு வேளை துரதிஷ்டவசமாக பிபிஎஃப் அக்கவுண்ட் ஹோல்டர் இறந்து விட்டால், அவரது மனைவியோ அல்லது சட்டபூர்வமாக யார் வாரிசுதாரரோ அவர்கள் க்ளைம் செய்து கொள்ளலாம். உங்களது பிபிஎஃப் கணக்கு தொடங்கி முதிர்வு அடைந்துவிட்டால், 15 வருடத்தின் நிதியாண்டின் முடிவில் க்ளைம் செய்து கொள்ளலாம்.
பணம் எடுக்கலாமா?
உங்களது கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து 7வது நிதியாண்டில் உங்களது பிபிஎஃப் கணக்கில் இருந்து ஓரளவு தொகையினை பெறலாம். சில வங்கிகள் 5 ஆண்டுகளுக்கு பிறகும் பணம் எடுக்க அனுமதிக்கின்றன. சில 7 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதிக்கின்றன. அவ்வாறு எடுக்கப்படும் தொகையானது ஒரு நிதியாண்டில் ஒரு முறை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது. அதுவும் நடப்பு ஆண்டின் முந்தைய ஆண்டின் நிலுவையில் 50% மட்டும் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும் இந்த திட்டத்தினை முழுமையாக தொடரும்போது மட்டுமே முழுபலனையும் பெற முடியும்.
முதிர்வுக்கு பிறகு என்ன செய்யலாம்?
இந்த பொது வருங்கால வைப்பு நிதி வாடிக்கையாளருக்கு நிதி உடனடியாக தேவைப்படாத பட்சத்தில், இந்த வைப்பு நிதி திட்டத்தின் முதிர்வு காலம் 15 வருடம் ஆகும். எனினும் முதிர்வு காலத்திற்கு பிறகும் 5 ஆண்டுகள் தொடர்ந்து கொள்ளலாம். இதற்காக நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளையிலோ அல்லது அஞ்சலகத்திலோ பார்மினை கொடுத்து நீட்டித்துக் கொள்ளலாம்.