எல்லோருக்கும் முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் எங்கு முதலீடு செய்யலாம். எங்கு பாதுகாப்பானது? எதில் வருமானம் அதிகம் என யோசிப்பதில்லை.
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது அஞ்சலகத்தின் முக்கிய திட்டங்களில் என்ன வட்டி விகிதம், எந்த திட்டம் எத்தனை ஆண்டுகளில் இரண்டு மடங்கு ஆகும், இதில் லாபம் குறைவாக இருந்தாலும், மிக பாதுகாப்பான ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், அவற்றில் அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு என்றுமே தனி இடம் உண்டு.
அஞ்சலக சேமிப்பு கணக்கு
அஞ்சலக சேமிப்பு கணக்கு என்பது வங்கி சேமிப்பு கணக்கு போன்றது. வங்கி கணக்கில் பெறும் பெரும்பாலான சேவைகளை நாம் இந்த அஞ்சல கணக்கிலும் பெற முடியும். இந்த கணக்கின் மூலம் சேமிக்கப்படும் தொகைக்கு 4% வட்டி கொடுக்கப்படுகிறது. இந்த கணக்கில் செய்யப்படும் முதலீடு 18 ஆண்டுகளில் உங்களது தொகை இரட்டிப்பாகிறது.
அஞ்சலக தொடர் வைப்பு நிதி
அஞ்சலத்தில் உள்ள தொடர்ச்சியான வைப்பு நிதி திட்டத்திற்கு வட்டி விகிதம் 5.8% வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யும்போது 12.41 வருடங்களில் உங்களது முதலீடு இருமடங்காகிறது. இது மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது அதிகமாகும்.
அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்
அஞ்சலகத்தின் மாதாந்திர வருமான திட்டத்தில், தற்போது வட்டி விகிதம், 6.6% வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் உங்கள் தொகையானது 10.91 ஆண்டுகளில் இருமடங்காக மாறும். இந்த திட்டத்தில் மாத மாதம் எனக்கு ஒரு வருமானம் வேண்டும் என நினைப்பவர்கள் முதலீடு செய்து கொள்ளலாம். குறிப்பாக மூத்த குடி மகக்ளுக்கு ஏற்ற ஒரு முதலீட்டு திட்டமாக பார்க்கப்படுகிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
அஞ்சலகத்தில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் (SCSS), 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மிகச்சிறந்த சேமிப்பு திட்டமாகும். இந்த சேமிப்புத் திட்டத்தினை ஓய்வூதிய சலுகைகள் கிடைத்த ஒரு மாதத்திற்குள் கணக்கு திறக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை உண்டு.
இந்த SCSS திட்டத்தின் முதிர்வுகாலம் 5 ஆண்டுகள் தான். இருப்பினும் இந்த திட்டத்தினை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். இதில் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் வரை வரி விலக்கு கோரலாம். இந்த SCSS திட்டத்தில் தற்போது வட்டி விகிதம் 7.4% ஆக உள்ளது. இந்த திட்டத்தில் 9.73 ஆண்டுகளில் உங்கள் முதலீடு இருமடங்காக மாறும்.
பொது வருங்கால வைப்பு நிதி
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்ய நினைப்போருக்கு நல்ல திட்டம். இந்த திட்டமானது 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் திட்டத்தில் 80சியின் கீழ் வரிச்சலுகை உண்டு. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் தற்போதைய வட்டி விகிதம் 7.1% ஆகும். இதில் 10.14 ஆண்டுகளில் உங்களது முதலீடு இரட்டிப்பாகும்.
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்
அஞ்சலகத்தின் டைம் டெபாசிட்டுகளில் 6.7% வரை வட்டி கிடைக்கின்றது. இது மிக பாதுகாப்பான ஒரு முதலீடாகவும் சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 1 - 3 வருட திட்டங்களில் வட்டி விகிதம் தற்போது 5.5% வட்டி விகிதமாகும். இதே 5 ஆண்டு டைம் டெபாசிட் திட்டத்திற்கு 6.7% வட்டி வழங்கப்படுகின்றது. இதில் குறைந்தபட்சம் டெபாசிட் 1000 ரூபாயாகும். அதிகபட்ச வரம்பு என்பது கிடையாது. இதில் 1.5 லட்சம் ரூபாய் வரையில் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும்போது 10.75 வருடங்களுக்கு பிறகு உங்களது முதலீடு இருமடங்காக மாறுகின்றது.
சுகன்யா சமிரிதி யோஜனா
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக, பெற்றோரை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக மைனர் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு திட்டம். இந்த திட்டத்தில் பிறப்பு முதல் 10 வயது வரை எந்த நேரத்திலும், இந்த சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தினை தொடங்க முடியும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகளாகும்.
இந்த சுகன்யா சம்ரிதி திட்டத்தின் கீழ் செய்யப்படும் டெபாசிட் தொகைக்கு வருமான வரி சட்டத்தின் கீழ் 80சி-ன் படி அதிகபட்சமாக, 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு தற்போது 7.6% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகையானது 9.47 மாதங்களில் இரு மடங்காக மாறும்.
தேசிய சேமிப்பு பத்திரம்
தேசிய சேமிப்பு பத்திர திட்டம் நாட்டில் உள்ள அனைத்து அஞ்சலகத்திலும் பெறக்கூடிய அரசின் திட்டமாகும். இது ஒரு நிலையான வருமானத்தை தரக்கூடிய சிறு சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடாக 100 ரூபாயும், அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு ஏதும் இல்லை. தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவர், அதற்கான வரி சலுகையையும் வருமான வரிச்சட்டம் 80சி பிரிவின் கீழ் சலுகை பெறலாம்.
இந்த திட்டத்திற்கு தற்போது 6.8% வட்டியாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 10.59 ஆண்டுகளில் உங்களது முதலீடு இருமடங்காகும்.