நம்மில் பலருக்கும் இன்றைய காலகட்டத்திலும் இருக்கும் முக்கிய கவலையே, நாம் கஷ்டப்பட்டாலும் நம் குழந்தைகளாவது நன்றாக இருக்க வேண்டும் என்பது தான். அதிலும் தற்போது நிலவி வரும் நெருக்கடியான நேரத்தில் அடுத்த என்ன நடக்கும் என்று யாராலும் கூற இயலாது.
ஏனெனில் எதிர்காலத்தில் இதைவிட மோசமான நெருக்கடியான நிலை கூட ஏற்படலாம். அப்போது நீங்கள் எதிர்கொள்ளும் நிதி ரீதியிலான பிரச்சனைகளை உங்கள் குழந்தைகளும் எதிர்கொள்ள வேண்டுமா? என்ன?
ஆக குழந்தைகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு, தேவையான சேமிப்பினை இப்போதே சேமிக்க ஆரம்பித்திட வேண்டும். பல தாய்மார்களும், அப்பாக்களும் நினைப்பார்கள். ஆனால் செயல் என வரும்போது கோட்டை விட்டு விடுவார்கள். அப்படியானவர்களுக்கு எந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்? எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பது தெரிவதில்லை.
என்ன விதி இது?
அதிலும் குறிப்பாக தாய்மார்கள் மட்டும் இருக்கும் குடும்பத்தில் நிச்சயம் நிதி ரீதியிலான திட்டத்தினை பின்பற்ற வேண்டும். இதற்காக தாய்மார்கள் 50:30:20 விதிகளை பின்பற்றலாம். இது மிகச் சிறந்த வழியே. இந்த விதிப்படி தனி நபர்கள் தங்களது மொத்த வருமானத்தில் 50% மளிகைப் பொருட்கள், வாடகை அல்லது மாத தவணை தொகைக்காக ஒதுக்க வேண்டும்.
சேமிப்பு எவ்வளவு?
இதே 30% வருமானத்தினை உணவு, ஆடை, விடுமுறைகளுக்காக ஒதுக்க வேண்டும். மீதமுள்ள வருமானமான 20% தொகையை சேமிப்பாக கட்டாயம் சேமிக்க வேண்டும். இந்த தொகையில் முதலில் அவசர தேவைக்காக நிதியை உருவாக்க வேண்டும். இது அவர்களது மாத வருமானத்தில் குறைந்தது ஆறு மடங்காவது இருக்க வேண்டும்.
எதற்காக 20% சேமிப்பு
இவ்வாறு அவசர காலத்திற்காக சேமிக்கப்படும் நிதியை மிக அவசரமான நெருக்கடியான காலகட்டத்தில், அதாவது மருத்துவ தேவை, வருமான இழப்பு காலங்களில் பயன்படுத்தலாம். இதனை லிக்விட் பண்டுகளாகவும் வைக்கலாம். அல்லது உங்களது வேறு சேமிப்பு கணக்குகள் மூலம் சேமிக்கலாம். மொத்தத்தில் அவசர காலத்தில் உதவும் வகையில் சேமிக்கலாம்.
முதலீட்டினை தொடர வேண்டும்
இதற்காக உங்களது தேவையில்லாத செலவுகளை குறைத்து, அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்வது நல்லது. ஏனெனில் நீங்கள் அதிகம் சேமிக்கும்போது, அதிக தொகையை முதலீடு செய்யலாம். அவசர கால சேமிப்பு என்பதை சேமித்த பின்னர், தொடர்ச்சியாக உங்கள் முதலீட்டினை தொடர வேண்டும்.
முதல் ஆப்சன் இது தான்
அந்த வகையில் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கிய முதலீடுகளில் ஒன்று பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி. இது ஓரு 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் குறைந்தபட்சம் 500 முதல் அதிகபட்சம் 1,50,000 ரூபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம். முதிர்வுக்கும் பிறகு ஐந்து ஆண்டு தொகுப்புகளாக தொடர்ந்து கொள்ளலாம். இதி வரி சலுகையும் உண்டு. இன்றைய நிலவரப்படி இந்த திட்டத்தில் வட்டி விகிதம் 7.1% ஆகும்.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்
இரண்டாவதாக நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியது மியூச்சுவல் ஃபண்டுகள். பல வகையான திட்டங்கள் உள்ளன. அதில் உங்களது இலக்கிற்கு ஏற்ற ஒன்றினை, சரியான ஆலோசனையை பயன்படுத்திக் எடுத்துக் கொள்ளலாம்.
குறிப்பாக நீண்ட கால முதலீடு எனில் ஈக்விட்டி பண்டுகள் (லார்ஜ் கேப் அல்லது ப்ளூசிப் பண்டுகள், மீடியம் ஃபண்டுகளில்) முதலீடு செய்து கொள்ளலாம். எஸ் ஐ பி மூலமாக கூட முதலீடு செய்து கொள்ளலாம்.
வங்கி டெபாசிட் அல்லது அரசு திட்டங்கள்
ரிஸ்கே வேண்டாம் என நினைப்பவர்கள் வங்கி டெபாசிட்டுகளை செய்யலாம். ஆனால் இதில் வட்டி விகிதம் என்பது மிக குறைவு. எனினும் மிகப்பெரிய தொகைகளில் எனில் இதில் போட்டு வைக்கலாம்.
அப்படி இல்லாவிட்டால் அரசு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம். உதாரணத்திற்கு அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி மூலம் முதலீடு செய்யலாம். அல்லது அஞ்சலகத்தின் மாத வருவாய் திட்டத்திலும் முதலீடு செய்யலாம்.
இதனையும் தேர்வு செய்யலாம்
இது தவிர சுகன்யா சம்ரிதி திட்டம், கிஷான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்பு பத்திரம், தேசிய ஓய்வூதிய திட்டம், என பல அரசு திட்டங்கள் உள்ளன அவற்றில் முதலீடு செய்யலாம். அரசு பத்திரங்கள், தங்க பத்திரம், அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் இப்படி பல பாதுகாப்பான திட்டங்கள் உள்ளன. அவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.
எவ்வளவு முதலீடு?
திட்டங்கள் எல்லாம் சரி? எவ்வளவு முதலீடு செய்யலாம். உங்களது இலக்கினை தீர்மானித்திக் கொண்டு அதற்கேற்ப முதலீட்டினை தீர்மானிக்கலாம். உதாரணத்திற்கு பிபிஎஃப் திட்டத்தில் வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். 15 ஆண்டுகள் கழித்து உங்கள் கையில் 27,12,138 ரூபாய் முதிர்வாக கிடைக்கும். இதே தொகையை தேசிய ஓய்வூதிய திட்டம் எனில் உங்கள் கையில் 15 ஆண்டுகள் கழித்து சுமார் 21 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆக இதனை தகுந்த ஆலோசனையுடன், உங்கள் தேவைக்கு ஏற்ப முதலீடு செய்யலாம். எப்படியிருப்பினும் இறுதி முடிவு உங்களுடையதாக இருக்க வேண்டும்.