நாளை முதல் ஊழியர்களின் சம்பள விகிதத்தில் பல பெரிய மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 1 முதல் புதிய ஊதிய விதிகள் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இந்த விதிகள் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்பட இருந்த நிலையில், அப்போது அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்படுவதாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை முதல் இந்த விதிகள் அமல்படுத்தப்படலாம் என்ற நிலை இருந்து வருகின்றது.
சமூக வலைதளங்கள், பல செய்திகள் நாளை முதல் அமல்படுத்தப்படலாம் என்று கூறி வரும் நிலையில், இதனால் ஊழியர்களின் சம்பளத்தில் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்தும். இது ஊழியர்களுக்கு சாதகமாகுமா? இது பலன் அளிக்குமா? வாருங்கள் பார்க்கலாம்.
வரவிருக்கும் மாற்றங்கள்
புதிய ஊழியர்கள் விதிப்படி (New Wage Code Bill) மசோதா மூலமாக, வருங்கால வைப்பு நிதி, கிராஜ்விட்டி, டிஏ (Dearness Allowance), பயணப்படி (Travel Allowance) மற்றும் வீட்டு வாடகை கொடுப்பனவு (House Rent Allowance) என அனைத்திலும் மாற்றம் ஏற்படலாம். புதிய தொழிலாளர் சட்டத்தின் மூலமாக வருங்கால வைப்பு நிதி, கிராஜ்விட்டி, டிஏ, பயணப் படி மற்றும் ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ் என அனைத்தும் 50%க்கு மேல் இருக்காது.
அடிப்படை சம்பளம் அதிகரிக்கும்
புதிய தொழிலாளர் விதியின் படி, அடிப்படை சம்பளத்தின் பங்கு 50% அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் 50%-க்கு குறைவாக இருந்தால் அவை மாறிவிடும், பல நிறுவனங்களும் அடிப்படை சம்பளத்தினை மிகக் குறைவாக கொடுத்து, மற்ற அலவன்சுகளை அதிகமாக கொடுத்து வருகின்றன. இனி அதெல்லாம் குறையும். மாறாக உங்களது அடிப்படை சம்பளம் அதிகரிக்கும்.
சேமிப்பு தொகை அதிகரிக்கும்
இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தால், அதன் பின்னர் வீட்டிற்கு எடுத்து செல்லும் சம்பளம் (Take Home Salary) குறைலாம். மாறாக சேமிப்பு அதிகரிக்கும். அடிப்படை சம்பளம் 50%-க்கு கீழ் இருக்கும் போது, அந்த சம்பளத்தில் தான் 12 + 12 = 24% வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கு மாற்றம் செய்யப்படும். ஆனால் புதிய விதிகளின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். ஆக அடிப்படை சம்பளம் அதிகரிக்கும்போது, பிஎஃப் தொகை செலுத்துவதும் அதிகரிக்கும். இதனால் வருங்கால வைப்பு நிதிக்கு செல்லும் தொகை அதிகரிக்கும். இதனால் உங்கள் சேமிப்பு பெருகும். எனினும் ஊழியர்களின் கையில் கிடைக்கும் சம்பளம் முன்னரை விட தற்போது குறையலாம்.
அலவன்ஸ்கள் குறையும்
உதாரணத்திற்கு ஒரு ஊழியரின் சம்பள விகிதம் 1 லட்சம் ரூபாய் என வைத்துக் கொண்டால், அதில் சம்பளதாரரின் மற்ற அலவன்ஸ்கள் 50,000 ரூபாய்க்கு மேல் இருக்க முடியாது. ஆனால் அவரின் அடிப்படை சம்பளம் 50,000 ரூபாயாக அல்லது அதற்கு அதிகமாக இருக்கும். ஏனெனில் இந்த அடிப்படை சம்பளத்தினை அதிகரிக்கும்பொருட்டு நிறுவனங்கள் மற்ற அலவன்ஸ்களை குறைக்க முயலும்.
கையில் கிடைக்கும் சம்பளம் குறையும்
இந்த புதிய விதிகளால் உங்களது சேமிப்புகள் அதிகரிக்கும் என்பது நல்ல விஷயமாக பார்க்கப்படாலும், கையில் கிடைக்கும் சம்பளம் என்பது குறையும். உதாரணத்திற்கு ஒரு நபரின் சம்பளம் தற்போது 1 லட்சம் ரூபாய் என வைத்துக் கொள்வோம். தற்போது அவரின் அடிப்படை சம்பளம் 40,000 எனில், ஊழியரும், ஊழியருக்காக நிறுவனமும் தலா பிஎஃப்க்கு 4800 ரூபாய் கொடுப்பார்கள். ஆக தற்போது அந்த ஊழியரின் கையில் கிடைக்கும் சம்பளம் என்பது 90,400 ரூபாயாக இருக்கும்.
கிராஜ்விட்டி அதிகரிக்கும்
ஆனால் புதிய சட்டத்தின் படி, அடிப்படை சம்பளம் 50,000 ரூபாயாக ஆக உயர்ந்தால், அவரின் பிஎஃப் பங்களிப்பு தலா 6,000 ரூபாயாக அதிகரிக்கும். இதனால் ஊழியரின் கையில் கிடைக்கும் சம்பளம் என்பது 88,000 ரூபாயாக இருக்கும். ஆக முன்பை விட கையில் கிடைக்கும் சம்பளம் 2,400 ரூபாய் குறையும். எனினும் அடிப்படை சம்பளம் அதிகரிக்கும்போது கிராஜ்விட்டியும் அதிகரிக்கும். ஏனெனில் ஒவ்வொரு வருட சேவைக்கும் கடைசியாக கொடுக்கப்பட்ட அடிப்படை ஊதியத்தின் 15 நாட்களுக்கு சமமான தொகையாக நிறுவனங்கள் கிராஜ்விட்டியாக கொடுக்கும். ஆக அடிப்படை சம்பளம் அதிகரிக்கும் என்பதால், கிராஜ்விட்டி தொகையும் அதிகரிக்கும்.
பலருக்கும் கிராஜ்விட்டி சலுகை கிடைக்கும்
புதிய தொழிலாளர் சட்டங்களில் கிராஜ்விட்டியும் புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. ஏற்கனவே இருந்த விதிகளின் படி 5 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கிராஜ்விட்டி வழங்கப்படும். ஆனால் புதிய தொழிலாளர் சட்டத்தின் படி, 1 ஆண்டு பணிபுரிந்தாலே கிராஜ்விட்டி வழங்கப்படும். ஆக இதனால் பெரும்பாலான ஊழியர்கள் பயன்பெறுவர்.
வரி சலுகை குறையலாம்
பட்ஜெட் 2021ல் ஒரு ஆண்டில் ஒரு ஊழியரின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்யப்பட்டிருந்தால், அதற்கு வரி விதிக்கப்படும். பொதுவாக இந்த திட்டம் வரி சலுகை உண்டு என்பதால் தான் பலரையும் ஈர்க்கிறது. ஆக சம்பளதாரர்கள் இதனை கவனத்தில் கொண்டு செயல்படலாம். ஆனால் தற்போது புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் அடிப்படை ஊதியம் அதிகரிப்பதால், அதிக சம்பளம் வாங்குவோருக்கு இது தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
வரி விலக்கு குறையும்
ஊழியர்களின் அடிப்படை ஊதியம் அதிகரிக்கும் என்பதால், வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) குறையும். இதனால் HRAந் கீழ் கோரப்படும் வரி விலக்கு குறையும். ஆக மொத்தத்தில் ஊழியர்களின் வருங்கால ஓய்வூதியம் அதிகரிக்கும் என்பது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. எனினும் அதிகளவில் சம்பளம் வாங்கிவோருக்கு வரி சலுகை குறையும். மேலும் டேக் ஹோம் ஊதியமும் குறையும்.
வேறு என்னென்ன மாற்றங்கள் வரலாம்
புதிய ஊதிய விதியின் படி ஊழியர்களின் வேலை நேரம் ஒரு நாளைக்கு 12 மணி நேரமாகவும், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாகவும் இருக்கலாம். மீதமிருக்கும் 3 நாட்கள், சம்பளத்துடன் கூடிய கட்டாய விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட வேண்டும். இது தொழிலாளர்களின் ஒப்புதலுடன் நடைபெற வேண்டும். ஏனெனில் அனைவராலும் ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை செய்ய இயலாது என்பதையும், இந்த புதிய ஊதிய விதிகள் வளியுறுத்துகிறது.
விடுமுறை அதிகரிக்கலாம்
உடல் நலம் பாதிப்பு, பிரசவம் போன்ற காரணங்களுக்காக அதிகபட்சம் 240 நாட்கள் விடுமுறை எடுக்கலாம் என்று இருந்து வரும் நிலையில், இனி 300 நாட்களாக உயர்த்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் இந்த விதிமுறைகள் எந்தளவுக்கு சாதகமாக இருக்கும் என்பது, இந்த விதிகள் அமலுக்கு வந்து, முதல் மாத சம்பளம் வாங்கும்போது தான் தெரியும்.