உங்கள் வீட்டு பெண் குழந்தைக்கு பாதுகாப்பான சேமிப்பை தேடுகிறீர்கள் என்றால், அரசால் வழங்கப்படும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். சுகன்யா சம்ரித்தி யோஜனா என்று சொல்லப்படுகிற செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் உங்கள் குழந்தையின் உயர்கல்வி மற்றும் வாழ்க்கையின் பிற முக்கிய தேவைகளுக்கு சிறுக சிறுக சேமித்து பெரிய தொகையை உருவாக்க முடியும். அரசின் உத்தரவாதத்தோடு வழங்கப்படும் திட்டம் என்பதால் உங்களுடைய முதலீட்டுக்கு பாதுகாப்பான வருமானம் கிடைக்கும்.
தற்போது செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. சேமிப்பு திட்டங்களிலேயே அதிகபட்ச வட்டி விகிதம் இதுவாகும். இந்தப் பதிவில் உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்கு ரூ.72 லட்சம் சேமிப்பது எப்படி? என்பதை தான் பார்க்கப் போகிறோம்.
மொத்தமாக முதலீடு செய்ய முடியாதவர்கள் வருடா வருடம் முதலீடு செய்து அதிகபட்ச வருமானத்தை பெற முடியும். கூட்டு வட்டியின் மூலம் வருமானம் கிடைப்பதால் நீங்கள் வருடா வருடம் செய்யும் முதலீட்டுக்கு முதலில் வட்டி வழங்கப்படும். பின்னர் அந்த வட்டிக்கும் சேர்த்து வட்டி வழங்கப்படும். இப்படியே உங்களுடைய தொகை காலப்போக்கில் பன்மடங்காக அதிகரிக்கும்.

யாரெல்லாம் கணக்கு தொடங்கலாம்?: செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் தங்கள் வீட்டு பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் கணக்கு தொடங்கலாம். அனால் குழந்தைக்கு 10 வயது ஆவதற்கு முன்பாகவே கணக்கு திறக்க வேண்டும்.
முதலீடு: இந்தத் திட்டத்தில் ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 250 ரூபாய் கூட சேமிக்கலாம். அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை வரவு வைக்கலாம். செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கை அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள் மூலம் தொடங்க முடியும்.
எவ்வளவு ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும்?: இது ஒரு நீண்ட கால முதலீட்டு திட்டம். இந்தத் திட்டத்தின் முதிர்வுக் காலம் 21 ஆண்டுகள். ஆனால் தொடர்ந்து 15 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள 6 ஆண்டுகளுக்கும் தொடர்ந்து வட்டி வந்து கொண்டே இருக்கும். அதற்குப் பிறகு, கூடுதல் தொகை எதுவும் செலுத்தத் தேவையில்லை. இதற்கு கூட்டு வட்டி கிடைப்பதால் மீதமுள்ள 6 ஆண்டுகளுக்கு தொடர்ந்து வருமானம் அதிகரித்துகொண்டே இருக்கும்.
ரூ. 72 லட்சம் சேமிப்பது எப்படி?: ஒரு பெற்றோர் தங்கள் பெண் குழந்தைக்காக மாதந்தோறும் ரூ.12,500 என்ற வீதத்தில் சேமிக்கின்றனர் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்ச முதலீட்டுத் தொகையான ரூ.1.50 லட்சத்தை செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வரவு வைக்கலாம். இப்படியே தொடர்ந்து முதலீடு செய்தால் 15 ஆண்டுகள் கழித்து மொத்தமாக ரூ.22.50 லட்சத்தை முதலீடு செய்திருப்பார்கள். மீதமுள்ள 6 ஆண்டுகளுக்கு வட்டி செலுத்தத் தேவையில்லை.
முதலீட்டு காலம் முழுவதற்கும் தற்போது அரசு வழங்கும் 8.2% வட்டி கிடைத்தால், முதிர்வு காலத்தில் மொத்தமாக ரூ.71.82 லட்சம் வருமானம் கிடைக்கும். இதில் கூட்டு வட்டி மூலம் கிடைத்த ரிட்டன்ஸ் மட்டும் ரூ.49.32 லட்சம். இந்தத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீடுகளுக்கு வருமான வரி சட்டம் பிரிவு 80சி-யின் கீழ் வரிச் சலுகைகள் கிடைக்கும். ஒவ்வொரு குடும்பத்தினரின் நிதி சூழலுக்கும் ஏற்ப இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் மகளுக்கு பிறகு, இரண்டாவது பெண் குழந்தை பிறந்தால் தற்போதைய விதிமுறைகளின் படி அந்த இரண்டாவது குழந்தையின் வரி சலுகைகள் கிடைக்கும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications