மாதம் 1,000 ரூபாய் போதுமா? 1 கோடி ரூபாய் இலக்கினை எட்ட முடியுமா? அது எப்படி சாத்தியம்? எந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
பொதுவாக மிகப்பெரிய இலக்கினை அடைய மியூச்சுவல் ஃபண்டுகள் தான் பெஸ்ட் ஆப்சன் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது எஸ் ஐ பி முதலீடு பற்றி தான். இதன் மூலம் மிகப்பெரிய அளவிலான கார்ப்பஸினை அடைய முடியுமா? என்றால் நிச்சயம் முடியும்.
இளம் வயதில் முதலீடு
பொதுவாக சம்பளத்தில் 10% தொகையையாவது எஸ் ஐ பியாக முதலீடு செய்ய வேண்டும். மேலும் இந்த 10% தொகை என்பது நீங்கள் உங்களது 25 வயதில் முதலீடு செய்ய ஆரம்பிக்கிறீர்கள் எனில், அது போதுமானதாக இருக்கலாம். ஆனால் 40 வயதில் உள்ள ஒருவர் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்தால் அது போதுமானதா? என்றால் நிச்சயம் கிடையாது. பொதுவாக மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்த வரையில் எந்தளவுக்கு இளம் வயதில் முதலீடு செய்கிறீர்களோ? அந்தளவுக்கு பலனை கொடுக்கும்.
பங்கு சந்தை ரிஸ்க்
பொதுவாக ஈக்விட்டிகளில் குறைந்த தொகையை முதலீடு செய்தால் அது ரிஸ்கானது என்பார்கள். உண்மை தான், நீங்கள் நேரடியாக பங்கு சந்தைகளில் நேரடியாக குறைந்த தொகையை முதலீடு செய்வது என்பது மிக ரிஸ்கானதாக இருக்கும். ஆனால் அதே சமயம் அதே குறைந்த தொகையை மாத மாதம் எஸ் ஐ பியில் முதலீடு செய்யலாம். ஏனெனில் ஃபண்ட் மேனேஜர்கள் உங்களை போன்ற பலரின் முதலீடுகளையும் திரட்டி, பல்வேறு துறைகளில், பல்வேறு பங்குகளில் முதலீடு செய்வர். இதனால் ஒரு துறை சரிந்தாலும், ஒரு துறை ஏற்றம் காணும்.
எவ்வளவு முதலீடு?
பொதுவாக நீண்டகால நோக்கில் முதலீடு செய்யும்போது உங்களுக்கு சராசரியாக, குறைந்தபட்சம் 12% லாபம் கிடைக்கலாம். இதே நீண்டகால நோக்கில் 15 - 16% லாபம் கிடைக்கலாம். இதற்கு அதிகமாகவும் லாபம் கிடைக்கலாம். அது நீங்கள் தேர்தெடுக்கும் பங்கினை பொறுத்து இருக்கும்.
நீங்கள் 25 வயதில் மாதம் 1,000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இதில் சராசரியாக 15% வருமானம் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். 35 வருடம் முதலீட்டு காலம்.
லாபம் எவ்வளவு?
இதே 1000 ரூபாய் முதலீடு, சராசரியாக 15% வருமானம் என எடுத்துக் கொண்டால், 35 ஆண்டுகளுக்கு பிறகு 1,48,60,645 ரூபாயாக இருக்கும். இதில் நீங்கள் முதலீடு செய்த தொகையானது 4,20,000 ரூபாயாகும். இதே வருமானம் 1,44,40,645 ரூபாயாக இருக்கும்.
இதே தொகையை 12% வருமானம் என கணக்கிட்டால் உங்களுக்கு, 35 வருடம் கழித்து 64,95,269 ரூபாயாக இருக்கும்.
இதே 10% எனக் கொண்டால், 38,28,277 ரூபாயாக இருக்கும்.
முதலீட்டினை அதிகரிக்கலாம்
நீங்கள் ஆரம்பத்தில் செய்யும் முதலீடு 1,000 ரூபாய் எனில், அது இறுதி வரைக்கும் அப்படியே செய்ய வேண்டியதில்லை. சம்பளம் அதிகரிக்க, அதிகரிக்க உங்களது முதலீட்டினையும் அதிகரிக்கலாம். அதே போல நிலையான வருமானம் தரக்கூடிய பிபிஎஃப், மருத்து செலவுகளுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் என போட்டு வைத்துக் கொள்ளலாம். இதுவும் எதிர்காலத்தில் உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.