இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான கவலையே, இன்று கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, வயதான காலத்தில் ஆவது நன்றாக இருக்க வேண்டும். நாம் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை குழந்தைகளாவது நன்றாக இருக்க வேண்டும் என்பது தான்.
ஆனால் இதனை நிவர்த்தி செய்ய ஒரு பெஸ்ட் ஆப்சன் என்பது முதலீடு தான். சிறந்த சேமிப்புகள் தான். இதன் மூலம் உங்களது பிரச்சனைகளை நீங்களே ஓரளவு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
ஏனெனில் இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பது உங்கள் கையில் போதிய நிதி இருந்தால் ஓரளவு தணித்துக் கொள்ள முடியும். அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் தான்.
நல்ல திட்டம்
இந்தியாவினை பொறுத்தவரையில் பல ஆயிரம் முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், அரசின் முதலீட்டு திட்டங்கள் என்றாலே அதற்கு தனி இடம் உண்டு. ஏனெனில் பாதுகாப்பானது. கணிசமான வருவாய் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக முதலீட்டுக்கு எந்த பங்கமும் இல்லை. அதிலும் பிபிஎஃப் திட்டம் என்பது மக்கள் மத்தியில் மிக வரவேற்பை பெற்ற ஒரு திட்டமாகும்.
பிபிஎஃப் (PPF)
இந்த திட்டம் 15 ஆண்டுகால திட்டம். ஆக இந்த திட்டத்தின் மூலம் மாத மாதம் 30,000 ரூபாய் வருமானம் பெறுவது சாத்தியமானதா? அதற்காக நான் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும். அதற்கு 15 வருடம் முதலீடு செய்தால் போதுமா? இதில் வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது.
15 வருடம் கழித்து எவ்வளவு கிடைக்கும்?
தற்போதைய நிலவரப்படி, இந்த திட்டத்தில் வட்டி விகிதம் 7.1% ஆகும். இந்த திட்டத்தில் முதிர்வுக்கு பின்னரும் 5 வருட தொகுப்புகளாக மீண்டும் தொடரலாம் என்பதால், இது இன்னும் கூடுதல் நன்மையாக பார்க்கப்படுகிறது.
அதோடு இந்த கணக்கினை வங்கிக் கணக்கு மூலமாகவோ அல்லது அஞ்சலகம் மூலமாகவோ தொடங்கிக் கொள்ளலாம்.
குறைந்தபட்ச முதலீடு எவ்வளவு?
பிபிஎஃப் கணக்கில் வருடத்திற்கு குறைந்தபட்சம், 500 ரூபாய் முதல் செலுத்திக் கொள்ளலாம், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம். ஒரு ஆண்டில் அதிகபட்சம் 12 பங்களிப்புகள் இருக்கலாம். அதாவது 12 தவணைகளாக உங்களது தொகையை செலுத்திக் கொள்ளலாம். ஒரு தனி நபர் கட்டாயம் 1.5 லட்சத்திற்கு மேல் செலுத்த முடியாது. அப்படி அதிகமாக செலுத்த வேண்டும் எனில், நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் கணக்கினை தொடங்கி செலுத்திக் கொள்ளலாம்.
எப்படி தொடங்குவது?
அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை அஞ்சலகம், பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில முன்னணி தனியார் வங்கிகள் மூலமும் தொடங்கிக் கொள்ளலாம். துரதிஷ்டவசமாக பிபிஎஃப் அக்கவுண்ட் ஹோல்டர் இறந்து விட்டால், அவரது மனைவியோ அல்லது சட்டபூர்வமாக யார் வாரிசுதாரரோ அவர்கள் க்ளைம் செய்து கொள்ளலாம்.
இடையில் எடுக்கலாமா?
உங்களது கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து 7வது நிதியாண்டில் உங்களது பிபிஎஃப் கணக்கில் இருந்து ஓரளவு தொகையினை பெறலாம். சில வங்கிகள் 5 ஆண்டுகளுக்கு பிறகும் பணம் எடுக்க அனுமதிக்கின்றன.
அவ்வாறு எடுக்கப்படும் தொகையானது ஒரு நிதியாண்டில் ஒரு முறை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது. அதுவும் நடப்பு ஆண்டின் முந்தைய ஆண்டின் நிலுவையில் 50% மட்டும் எடுக்க அனுமதிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு பிணையமாக வைத்துக் கொண்டு கடன் பெற்றுக் கொள்ள முடியும்.
எவ்வளவு முதலீடு?
பிபிஎஃப் திட்டத்தில் மாதம் 12,500 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம்.
இதன் மூலம் நீங்கள் வருடத்திற்கு 1,50,000 ரூபாய் முதலீடு செய்வீர்கள்.
15 வருடத்தில் நீங்கள் 22,50,000 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள்.
தற்போதைய வட்டி விகிதம் - 7.1%
வட்டி வருமானம் - ரூ.18,18,209
மொத்த முதிர்வு தொகை - ரூ.40,68,209
இதனை 5 வருட காலம் நீடித்தால் உங்கள் கைக்கு - ரூ.66,58,288 ரூபாய் கிடைக்கும்.
மாதம் ரூ.30,000 எப்படி சாத்தியம்
இந்த பணத்தினை முதிர்வுக்கு பிறகு வங்கி பிக்ஸட் டெபாசிட்டிலோ அல்லது லிக்விட் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். மேற்கண்ட முதிர்வு தொகையில் 60 லட்சம் ரூபாயினை, நீங்கள் மீண்டும் முதலீடு செய்யலாம்.
அதன் மூலம் மூலம் கிடைக்கும் வருமானம் 7% என கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட, மாதம் 30,000 ரூபாய் வருமானத்தினை எடுத்துக் கொள்ளலாம். அதோடு உங்களது முதலீடும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே தான் இருக்கும். ஆக நான் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் ஒரு அருமையான வாய்ப்பு எனலாம்.