இன்றைய காலக்கட்டத்தில் பல இளைஞர்களின் கனவே தொழில் செய்ய வேண்டும் என்பது தான். ஆனால் என்ன செய்வது? எப்படி செய்வது? யாரை அணுகுவது இப்படி பல கேள்விகள் எழும்.
அப்படி நினைப்பவர்களுக்கு இந்த கட்டுரை எனலாம். ஏனெனில் சுலபமாக நிரந்தரமாக ஒரளவு கணிசமான வருமானம் தரக்கூடிய, அஞ்சலகத்துடன் இணைந்து செய்யக் கூடிய வணிகம் பற்றித் தான் நாம் இந்த கட்டுரையில் பார்க்கவிருக்கின்றோம்.
அதுவும் முதலீடு என்பது வெறும் 5,000 ரூபாய் தான். அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது அஞ்சலகத்தின் ஃபிரான்ச்சைஸ் தான்.
அஞ்சலகத்தில் ஃபரான்ச்சைஸ்
இன்றைய காலகட்டத்தில் அஞ்சலகத்தின் தேவை என்பது அதிகமாகவே உள்ளது. எனினும் பல இடங்களில் அஞ்சலகங்கள் இருப்பதில்லை. ஆக அந்த மாதிரியான இடங்களில் நீங்கள் ஃபிரான்ச்சைஸ் எடுக்கலாம். அஞ்சலகங்களில் நீங்கள் போஸ்டல் ஏஜெண்டுகளாகவும் இருக்கலாம். ஆனால் அது நீங்கள் அஞ்சலகத்தில் வேலை பார்ப்பது போன்றதாகும் .
ஃபிரான்ச்சைஸ் மூலம் வருமானம்
நீங்கள் இருக்கும் பகுதியில் அஞ்சலக ஃபிரான்ச்சைஸ் எடுத்து அதன் மூலம் வருமானம் பார்க்கலாம். தற்போது நாடு முழுவதும் 1.55 லட்சம் அஞ்சலகங்கள் உள்ளன. ஆனால் அவற்றின் மூலம் நாட்டின் அனைத்து மூலை முடுக்கெங்கும் வேலை செய்ய முடிகின்றதா என்றால் இல்லை எனலாம். ஆக அஞ்சலகத்தில் ஃபிரான்ச்சைஸ் சலுகைகள் மூலம் பரவலாக அனைத்து இடங்களிலும் தங்களது சேவையினை கொடுக்க அஞ்சல் துறை முயற்சி மேற்கொண்டு வருகின்றது. இதற்காக நீங்கள் தனியாக மார்கெட்டிங் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
குறைந்த முதலீடு
இதற்காக நீங்கள் வெறும் 5,000 ரூபாய் செலவழித்தால் போதுமானது. ஒரு முறை இணைந்த பிறகு, நீங்கள் கமிஷன் மூலம் சம்பாதிக்கலாம். எனினும் உங்களுக்கு எவ்வளவு வருமானம் என்பது நீங்கள் செய்யக்கூடிய வேலையை பொறுத்தது. ஆக உங்களின் சேவை அதிகரிக்கும் பட்சத்தில் உங்களால் வருமானத்தினையும் அதிகரிக்க முடியும்.
வயது வரம்பு என்ன?
அஞ்சலகத்தின் இந்த ஃபிரான்ச்சைஸ் சேவையினை செய்ய ஒரு நபர், 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். எந்தவொரு இந்திய குடிமகனும் இந்த சேவையினை செய்யலாம். இவ்வாறு இந்த ஃபிரான்ச்சைஸ் உரிமம் பெறும் நபர் அங்கீகரிப்பட்ட பள்ளியில் இருந்து 8வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான படிவத்தில் பூர்த்தி செய்து, விண்ணப்பத்தினை சமர்பிக்க வேண்டும்.
எப்படி தேர்வு செய்வார்கள்
இதன் பின்னர் உங்களது விவரங்கள் சரிபார்க்கப்பட்டு நீங்கள் தேர்தெடுக்கப்பட்டால், நீங்கள் இந்தியா போஸ்ட்டுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியிருக்கும். இதன் பிறகு இறுதி தேர்வு முறையை 14 நாட்களுக்குள் தலைமை அஞ்சலக அதிகாரிகள் தேர்வு செய்வார்கள். அதெல்லாம் சரி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் என்னவெல்லாம் இடம்பெற்றிருக்கும் வாருங்கள் பார்க்கலாம்.
என்னென்ன செய்யலாம்?
இந்த ஃபிரான்ச்சைஸ் மூலம் மணி ஆர்டர் அனுப்பலாம். தபால் அனுப்பலாம். சேமிப்பு திட்டங்களை தொடங்கலாம். பில் கலெக்ஷன்ஸ், ஸ்டாம்ப்ஸ் சேல்ஸ், ஸ்பீடு போஸ்ட், இன்சூரன்ஸ், பார்சல் புக்கிங் எடுக்கலாம். மொத்தத்தில் இதன் மூலம் உங்களுக்கு நல்ல வருமானம் இருக்கிறது எனலாம்.
என்னென்ன தேவை?
இந்த ஃபிரான்ச்சைஸ் அலுவலகம் 200 - 500 சதுர அடியில் இருக்க வேண்டும். கணினி அறிவு வேண்டும். ஒரு தனி நபர், நிறுவனம் வைத்திருப்பவர்கள், கடை வைத்திருப்பவர்கள் என யார் வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம்.
இந்த ஃபிரான்ச்சைஸிக்கு தேர்தெடுக்கப்பட்டால், உங்களுக்கு பயிற்சியும் கொடுக்கிறார்கள்.
எதற்கு எவ்வளவு கமிஷன்?
இந்த ஃபிரான்ச்சைஸில் உங்களுக்கு எதற்கு கமிஷன், எவ்வளவு வருமானம் பார்க்கலாம் வாருங்கள்.
ஒரு ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தால் - ரூ.3 கமிஷனாக கிடைக்கும்.
ஒரு ஸ்பீடு போஸ்ட் புக் செய்தால் - ரூ.5 கிடைக்கும்
மணி ஆர்டர் 100 - 200 ரூபாய் வரை அனுப்ப, 3.50 ரூபாய் கமிஷனாக கிடைக்கும்.
இதே 200 ரூபாய்க்கு மேல் மணி ஆர்டர் செய்தால் 5 ரூபாய் கிடைக்கும்.
நீங்கள் 1000 புக்கிங்கிற்கும் மேல் புக் செய்தால், கூடுதலாக 20% வருவாய் கிடைக்கும்.
போஸ்டல் ஸ்டாம்ப் மற்றும் போஸ்டல் கவர்கள் மற்றும் மணி ஆர்டர் பார்கள் விற்பனை செய்தால் அதன் மூலம் வருமானம் கிடைக்கும்.