இன்றைய காலகட்டத்தில் சம்பாதிப்பது கூட எளிதாக இருந்தாலும், அதனை சேமிப்பது என்பது மிக கடினமான விஷயமாகவே உள்ளது.
பலரும் அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில், இருக்கும் காசையெல்லாம் முதலீடு செய்து விட்டு, பின்னர் முதலீட்டினையே இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அதிலும் மூத்த குடிமக்கள் எனும்போது இன்னும் 100/100 பாதுகாப்பான திட்டமாக இருக்க வேண்டும். அப்படி நினைப்பவர்களுக்கு அஞ்சலக திட்டங்கள் என்றுமே வரப்பிரச்சாதம் தான்.
மிக பாதுகாப்பானது
அதிலும் தற்போதைய காலகட்டத்தில் வங்கி வட்டியும் குறைவாக உள்ள நிலையில், அதனை விட லாபம் கொடுக்கும் ஒரு லாபகரமான திட்டம் எனில் அது அஞ்சலக டைம் டெபாசிட் தான். அதோடு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு முதலீட்டு அம்சமாகும். ஆக மிக பாதுகாப்பானது. எல்லாவற்றிற்கும் மேலாக சந்தை அபாயம் இல்லை.
முதலீட்டு வரம்பு?
அரசின் இந்த டைம் டெபாசிட் திட்டத்தில் வட்டி விகிதம் வருடத்திற்கு ஒரு முறை கொடுக்கப்படுகிறது. எனினும் காலாண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாயில் இருந்து டெபாசிட் செய்யலாம். அதிகபட்சம் என்பது வரம்பு இல்லை.
வட்டி விகிதம் எவ்வளவு?
அஞ்சலகத்தின் இந்த டைம் டெபாசிட் திட்டத்தில் 1 வருட கால திட்டத்திற்கு வட்டி விகிதம் - 5.5% ஆகும்.
2 வருட திட்டத்திற்கும் - 5.5%
3 வருட திட்டத்திற்கு - 5.5%
5 வருட திட்டத்திற்கு வட்டி விகிதம் - 6.7%
யாரெல்லாம் தொடங்கலாம்?
18 வயது நிரம்பிய எந்தவொரு இந்திய குடிமகனும் தொடங்கிக் கொள்ளலாம்.
இதனை ஜாய்ண்ட் அக்கவுண்டாகவும் தொடங்கிக் கொள்ளலாம். (3 பேர் வரை இணைந்து தொடங்கலாம்)
இதே குழந்தைகள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் துணையுடன் தொடங்கிக் கொள்ளலாம்.
ஒருவர் எத்தனை கணக்கு வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம்.
வங்கி டெபாசிட் Vs போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகளோடு ஒப்பிடும்போது, அஞ்சலகத்தில் வட்டி விகிதம் அதிகம் ஆகும்.
எனினும் வங்கிகளில் பல்வேறு விதமான கணக்குகள் இருந்தாலும், அஞ்சலகத்தில் 1 வருடம், 2 வருடம், 3 வருடம், 5 வருட திட்டங்கள் தான் உள்ளன.
5 வருட டெபாசிட் திட்டத்திற்கு பிரிவி 80சி படி வசி சலுகை உண்டு.
முதிர்வுக்கு பிறகு
இந்த திட்டத்தில் உங்களது டெபாசிட்டுக்கு வட்டி விகிதம் கிடைக்கும். எனினும் முதிர்வு காலத்திற்கு பிறகு உங்களது டெபாசிட் தரப்படும்.
அதே போல முதிர்வு காலத்திற்கு பிறகும் நீட்டித்துக் கொள்ளலாம்.
முன் கூட்டியே கணக்கினை முடித்துக் கொள்ள நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.
உண்மை நிலவரம் இது தான்
உங்களது டைம் டெபாசிட்டுகளை முன்னதாக எடுத்தால் வட்டி விகிதம் என்பது குறைவாகவே இருக்கும். உதாரணத்திற்கு 2/3/5 வருட கணக்கில் 1 வருடத்திற்கு பிறகு மூடப்பட்டால், வட்டி விகிதம் 2% குறைவாக இருக்கும். 1 வருடத்திற்கும் குறைவான காலத்திற்குள் எடுக்கப்பட்டால் சேமிப்பு கணக்கிற்கு உண்டான வட்டி கொடுக்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
சம்பந்தப்பட்ட அஞ்சலகத்தில் பாஸ் புத்தகத்துடன் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பத்தினை சமர்பிக்கும்போது, டைம் டெபாசிட்டினை முன் கூட்டியே முடித்துக் கொள்ளலாம்.
அதே போல பாதுகாப்பாக வேறு கிளைகளுக்கு மாற்றிக் கொள்ளும் வசதி உண்டு.
பிணையமாக வைத்து கடன்
இந்த டைம் டெபாட்சிட் கணக்கினை பிணையமாக வைத்து கடன் பெற்றுக் கொள்ள முடியும். மொத்தத்தில் வங்கிகளோடு ஒப்பிடும்போது வட்டி விகிதம் அதிகம் என்பதால் மூத்த குடிமக்களுக்கு ஏற்ற ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.