நாளுக்கு நாள் விலைவாசி, செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், மக்களும் முதலீட்டாளர்களும் ஓய்வு பெற்ற பின்பு தேவைப்படும் செலவுகளுக்கான நிதியை அதிகளவில் சேமிக்கத் தயாராகி வருகிறார்கள்.
ஆம், உண்மையில் தற்போது மருத்து செலவுகள், கல்வி, விலைவாசி என அனைத்தும் கடந்த சில வருடத்தில் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
ஒரு காலத்தில் ஓய்வு பெற்ற பின்பு குடும்ப செலவுகள், பிள்ளைகளின் திருமணம், கல்வி ஆகியவற்றுக்கும் 80 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரையிலான தொகை போதுமானதாக இருந்தது. ஆனால் தற்போது இந்த தொகை போதாது என்ற நிலையை அடைந்துள்ளோம்.
ஓய்வு நிதி அல்லது நீண்ட கால முதலீடு
ஓய்வுபெற்ற பின்பு தேவைப்படும் நிதி அல்லது நீண்ட கால முதலீடுகளை நீங்கள் உருவாக்க வேண்டும் என்றால் முதலில் தற்போது கிடைக்கும் முதலீட்டு வாய்ப்புகளில் அதிகப்படியான தொகையை முதலீடு செய்வது தான்.
காரணம் துவக்கத்திலேயே அதிகப்படியான தொகையை முதலீடு செய்யும் போது அதிக லாபமும், அதிகப் பணமும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.
மியூச்சுவல் பண்ட் SIP திட்டம்
உதாரணமாக தற்போது சந்தையில் இருக்கும் மிகவும் சிறப்பான முதலீட்டுத் திட்டத்தில் ஒன்று மியூச்சுவல் பண்ட் திட்டத்தின் SIP திட்டம். இத்திட்டத்தில் நிலையாகவும், தொடர்ந்து முதலீடு செய்வது மூலம் அதிகப்படியான லாபம் கிடைக்கும்.
பெரிய வித்தியாசம்
இதேபோல் ஒவ்வொரு வருடமும் உங்கள் சம்பள உயர்வுக்கு ஏற்ப முதலீட்டை அதிகரிப்பது மூலம் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு லாபத்தைப் பெற முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா..?
20 கோடி ரூபாய் ஓய்வு நிதி
சரி, 20 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய தொகையை மியூச்சுவல் பண்ட் SIP திட்டத்தின் வாயிலாகச் சம்பாதிக்க வேண்டும் என்றால் எவ்வளவு விரைவாகச் சம்பாதிக்க முடியும்? இதேபோல் நிலையான முதலீட்டுக்கும், ஒவ்வொரு வருடமும் முதலீட்டு அளவீட்டை அதிகரிப்பதில் இருக்கும் வித்தியாசம் என்ன? என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
மாதம் 15000 ரூபாய் முதலீடு
நீங்கள் 25 வயது முதல் மியூச்சுவல் பண்ட் SIP திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் தவறாமல் மாதம் 15000 ரூபாய் அளவிலான தொகையை 35 வருடம் தொடர்ந்து முதலீடு செய்து வரும் பட்சத்தில், வருடத்திற்கு 11 சதவீத வட்டி வருமானம் கிடைக்கும் என வைத்துக்கொள்வோம்.
நிலையான முதலீடு திட்டம்
இந்த முதலீட்டு முறையின் கீழ் நீங்கள் 35 வருடத்திற்கு சுமார் 63 லட்சம் ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்திருப்பீர்கள், வருடத்திற்கு 11 சதவீதம் வட்டி வருமானம் பெறுவது மூலம் சுமார் 7.39 கோடி ரூபாய் அளவிலான தொகையைப் பெற முடியும். இது கட்டாயம் ஓய்வுக்குப் பின்பு போதுமானது தான்.
10% கூடுதல் முதலீட்டு வகை
ஆனால் சில சிறிய மாற்றங்கள் மூலம் கிட்டதட்ட 3 மடங்கு அதிக லாபம் பெற முடியும் என்றால் எப்படி இருக்கும்..?! ஆம் இதே உதாரணத்தோடு 25 வயதில் துவங்கப்படும் முதலீட்டில் திட்டத்தில் மாதம் 15,000 ரூபாய் தொகையை ஒவ்வொரு வருடத்திற்கும் 10 சதவீதம் கூடுதல் முதலீட்டுடன் நீங்கள் முதலீடு செய்யும் போது நினைத்துப் பார்க்க முடியாத லாபம் கிடைக்கும்.
20.83 கோடி ரூபாய் வருமானம்
முதல் வருடம் முழுவதும் மாதம் 15,000 ரூபாய் என்றால் 2வது வருடம் 16,500 ரூபாய், 3வது வருடம் 18,150 ரூபாய் எனத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் 10 சதவீத கூடுதல் முதலீட்டுடன் முதலீடு செய்யும் திட்டத்திற்கு நீங்கள் 35 வருடத்திற்குப் பிறகு கிடைக்கும் தொகை 20.83 கோடி ரூபாய். இந்த முறையின் கீழ் நீங்கள் முதலீடு செய்திருந்தால் 35 வருடத்தில் நீங்கள் 4.88 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள்.