வருங்கால வைப்பு நிதி என்பது சேமிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் வரிச் சலுகையும் இருந்ததால் சிறந்த வரி சேமிப்பு திட்டமாகவும் இருந்தது. மொத்தத்தில் ஓய்வுகாலத்திற்கு ஏற்ற சிறந்த முதலீட்டு திட்டமாகவும் பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த திட்டத்திற்கு வரிச்சலுகை அளிக்கப்பட்ட வரையில் இதெல்லாம் இருந்தது. ஆனால் கடந்த பட்ஜெட்டில் ஒரு ஆண்டில் 2.5 லட்சத்திற்கும் அதிகமாக வருங்கால வைப்பு நிதி கணக்கில் பணம் செலுத்தப்பட்டால், அதற்கும் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஊழியரின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் உங்களின் பங்களிப்பு அதிகமாக வேண்டுமானால், நீங்கள் உங்களது விருப்பப்படி தன்னார்வ வருங்கால வைப்பு நிதியாக (VPF) பங்களிப்பு செய்யலாம்.
விபிஎஃப்-க்கு வரம்பில்லை
வழக்கமாக சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதியானது, இபிஎஃப் ஒரு வரம்புக்குள் உட்பட்டதாகவே இருக்கும். ஆனால் இத்தகைய வரம்பு என்பது விபிஎஃப் கணக்கிற்கு இல்லை. இதன் மூலம் நீங்கள் அதிக தொகையினை ஓய்வுக்காலத்திற்கு சேமிக்க முடியும். ஆனால் விபிஎஃப் அதிகரித்தாலும், நிறுவனத்தின் பங்களிப்பு அதிகரிக்காது என்பது நினைவுகூறத்தக்கது.
என்ன காரணம்?
மற்ற சேமிப்பு திட்டகளோடு ஒப்பிடும்போது இது சிறந்த முதலீடு எனலாம். ஏனெனில் இந்த இபிஎஃப்க்கு 2019 - 20ம் நிதியாண்டு நிலவரப்படி வட்டி விகிதம் 8.50% ஆகும். குறிப்பாக வங்கி டெபாசிட்டுகளோடு ஒப்பிடும்போது இதற்கான வட்டி விகிதம் மிக அதிகம். இந்த திட்டத்திற்கு வரிச்சலுகையும் உண்டு.
வரி சலுகை இல்லை
நீங்கள் செலுத்தும் இபிஎஃப், விபிஎஃப் தொகைக்கும் பிரிவு 80சின் படி 1.50 லட்சம் வரையில் வரி சலுகை உண்டு. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உங்களது பிஎஃப் தொகையை வித்ட்ரா செய்தால் அதற்கு வரி உண்டு. அதாவது ஐந்தாண்டுகள் தொடர்ச்சியான சேவையை முடிக்கும் முன்பு நீங்கள் நிதிகளைத் திரும்ப பெற விரும்பினால், சேமித்த தொகை மற்றும் வட்டிக்கு வரி கட்ட வேண்டியிருக்கும்.
எப்போது வரி?
அதோடு கடந்த பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 2021ல் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ஒரு புதிய திருத்தத்தினை கொண்டு வந்தது. அது, ஒரு ஆண்டில் ஒரு ஊழியரின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்யப்பட்டிருந்தால், அதற்கு வரி விதிக்கப்படும் என்பது தான்.
அரசு ஊழியர்களுக்கு என்ன வரம்பு?
எனினும் இந்த 2.5 லட்சம் ரூபாய் வரம்பானது தனியார் ஊழியர்களுக்கானது மட்டுமே. அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு வருங்கால வைப்பு நிதி மற்றும் தன்னார்வ வைப்பு நிதி என இரண்டும் சேர்த்து 5 லட்சத்திற்கும் மேல் பங்களிப்பு இருந்தால் வரி விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இனி யோசிக்கலாம்
ஆக மேற்கண்ட இந்த வரம்புகளுக்கு மேல் பிஎப் செலுத்தும் சந்தாதாரர்கள், இனி குறிப்பிட்ட வரம்புகளுக்கு மேல் வரி செலுத்திய பிறகு தங்களது முதலீடுகளை பற்றி யோசிக்க வேண்டியிருக்கும்.
தேசிய பென்ஷன் திட்டத்தில் சலுகை
பி.எப். எனப்படும் வருங்கால வைப்பு நிதியில், பயனாளியின் கணக்கில், நிறுவனங்கள் செலுத்தும் தொகை, ஆண்டுக்கு, 7.5 லட்சம் ரூபாய் வரை வரிச் சலுகை பெறலாம். அதேபோல், என்.பி.எஸ்., எனப்படும் தேசிய பென்ஷன் திட்டத்தில், நிறுவனங்கள் செலுத்தும் தொகைக்கு வரிச் சலுகை பெறலாம். ஆண்டுக்கு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ளவர்களே, இந்த வகையில், வரி செலுத்த நேரிடும்.