எனக்கு 25 வயதாகிறது. நான் 20 வருடங்கள் கழித்து 50 லட்சம் ரூபாயில் வீடு கட்ட நினைக்கிறேன். அதற்காக இன்றிலிருந்து முதலீடு செய்ய நினைக்கிறேன். எதில் முதலீடு செய்யலாம். எவ்வளவு முதலீடு செய்யலாம். எப்படி செய்தால் என் இலக்கினை என்னால் அடைய முடியும்? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர். வாருங்கள் பார்க்கலாம்.
இன்று இருக்கும் காலகட்டத்தில் பலரும் நினைக்கும் ஒரு விஷயம் என்னவெனில், கூரை வீடானாலும் ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது தான்.
ஏனெனில் வாடகை கட்டணமானது ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே போகிறது. சம்பாதிக்கும் சம்பாதியத்தில் கால்வாசி அதற்கே போய்விடும். இது தவிர மின்சார கட்டணம், தண்ணீர் கட்டணம், அக்கம் பக்கம் பிரச்சனை என பலவற்றையும் சொல்லி மாளாது. ஆக இதற்கெல்லாம் ஒரு தீர்வு சொந்த வீடு தான்.
விலைவாசி அதிகரிக்கலாம்
இன்றைய காலகட்டத்தில் ஒரு சிறிய வீட்டை கட்ட வேண்டுமெனில் கூட, குறைந்தபட்சம் 10 - 20 லட்சம் வரையில் செலவாகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில் 20 வருடம் கழித்து கட்ட வேண்டும் எனில், 50 லட்சம் ரூபாய் என்பது முதலீடு செய்யப்பட வேண்டிய ஒன்று தான். கண்டிப்பாக விலை வாசி என்பது அதிகரிக்கத் தான் செய்யும்.
மியூச்சுவல் ஃபண்ட் தான் சிறந்த ஆப்சன்
ஆக இதற்கு சிறந்த ஆப்சன் மியூச்சுவல் ஃபண்டுகள் தான். மாதம் 5000 ரூபாய் வீதம் எஸ் ஐ பி (SIP) முதலீடுகளில் பிரித்து செய்யலாம். வருடத்திற்கு 12% வருமானம் என்று கணக்கில் கொண்டால் உங்களது கார்பஸ் தொகை சுமார் 49.5 லட்சம் ரூபாய் வரும். மேற்கண்ட இந்த 5000 ரூபாய் என்பதை படிப்படியாக அதிகரிக்கலாம்.
என்னென்ன ஃபண்டுகளில் முதலீடு?
அதே போல நீங்கள் செய்யும் எஸ்ஐபி முதலீட்டினை இரண்டாக பிரித்து முதலீடு செய்யலாம். குறிப்பாக மிட் கேப் ஃபண்ட் மற்றும் ஒரு மல்டிகேப் ஃபண்டினையும் தேர்வு செய்யலாம். இவை குறிப்பிட்ட காலங்களில் ஒரு நிலையான வருமானத்தினை கொடுக்கலாம். அதோடு முதலீடு செய்தததோடு உங்கள் கடமை முடிந்தவிட்டது என அமைதியாக இருந்துவிடக்கூடாது. வருடத்திற்கு வருடம் உங்களது போர்ட்போலியோவினை மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
பிபிஎஃப்பில் முதலீடு செய்யலாம்
ஒரு வேளை நீங்கள் எதிர்பார்த்த அளவு வருமானம் கிடைக்கவில்லை எனில், வேறு ஃபண்டுகளுக்கு மாற்றலாம். கூடுதலாக நிலையான வருமானம் தரக்கூடிய அரசு திட்டங்களில் முதலீடு செய்யலாம். உதாரணத்திற்கு பிபிஎஃப் எனப்படும் அரசின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதற்கு முன்பு பல கட்டுரைகளில் நாம் இதனை பற்றி பார்த்துள்ளோம். இது அரசின் ஒரு திட்டமாகும்.
எவ்வளவு கிடைக்கும்
உங்களுக்கு 25 வயதாகும்போது பிபிஎஃப் திட்டத்தில் மாதம் 5000 ரூபாய் வீதம், வருடத்திற்கு 60,000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்ளலாம். இன்றைய காலகட்டத்தில் வட்டி விகிதம் 7.1% ஆகும். இந்த திட்டம் 15 ஆண்டுகள் திட்டம் என்பதால், 15 ஆண்டுகள் முடிவில் 9 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். ஆக உங்களுக்கு வட்டியுடன் சேர்த்து 16,27,284 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். இதனை 5 ஆண்டு தொகுதிகளாக நீட்டித்துக் கொள்ளலாம் என்பதால் 20 ஆண்டுகள் கழித்து பார்த்தால் உங்களிடம் 26,63,315 ரூபாய் இருக்கும்.
முதலீட்டு போர்ட்போலியோ
இதில் லாபம் எதிர்பார்பினை விட குறைவு என்றாலும் நிலையான வருமானம் தரக்கூடிய ஒரு திட்டமாகும். ஆக உங்கள் முதலீட்டினை வேறு வேறு திட்டங்களில் பிரித்தும் முதலீடு செய்யலாம். குறிப்பாக எஸ்ஐபி என்பது கட்டாயம் இருக்க வேண்டும். அதே போல உங்களது முதலீட்டு போர்ட்போலியோவில் பிபிஎஃப் இருப்பது லாபகரமானது. எல்லாவற்றிற்றுக்கும் மேலாக இதில் சந்தை அபாயங்கள் இல்லை.
இதனை தகுந்த முதலீட்டு ஆலோசகரிடம் ஆலோசித்து முதலீடு செய்யலாம். எப்படி இருந்தாலும் இறுதி முடிவு என்பது உங்களுடையதாக இருக்க வேண்டும்.