தனியார் துறையை சேர்ந்த முன்னணி வங்கியான ஐசிஐசிஐ வங்கியானது, ரிசர்வ் வங்கியின் வட்டி அதிகரிப்புக்கு பின்னர், கடனுக்கான வட்டி விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது.
இதனால் கடன்களுக்கான வட்டி விகிதம் இனி அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா நேற்று ரெப்போ விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 4.90% ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து பல்வேறு வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்க ஆரம்பித்துள்ளன.
EBLR விகிதம் அதிகரிப்பு
அந்த வகையில் ஐசிஐசிஐ வங்கி தனது எக்ஸ்ட்டர்னல் பெஞ்ச்மார்க் லெண்டிங் ரேட்-னை அதிகரித்துள்ளது.
இந்த EBLR விகிதம் என்பது என்ன? EBLR என்பது ரெப்போ வட்டி விகிதம் போல வெளிப்புற அளவுகோல்களின் அடிப்படையில் வங்கிகளால் நிர்ணயிக்கப்பட்ட கடன் விகிதமாகும். வணிக வங்கிகள் கடன் வழங்கக்கூடிய குறைந்தபட்ச வட்டி விகிதம் இதுவாகும்.
எவ்வளவு அதிகரிப்பு?
தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள இந்த EBLR விகிதமானது ஜூன் 8, 2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இது ஆண்டுக்கு 8.60% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது முன்னதாக 8.10% ஆக இருந்தது. இது கடைசியாக மே 5 அன்று 40 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மே மாதத்தில் ரிசர்வ் வங்கி திடீரென 40 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்து, 4.40% ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
எம் சி எல் ஆர் அதிகரிப்பு
இந்த தனியார் வங்கியானது ஜூன் 1 முதல் ஏற்கனவே எம்சிஎல்ஆர் விகிதத்தினையும் அதிகரித்துள்ளது.
இது ஓவர் நைட் - 7.30%
ஒரு மாதம் - 7.35%
மூன்று மாதம் - 7.35%
6 மாதங்கள் - 7.50%
1 வருடம் - 7.55%
இஎம்ஐ அதிகரிக்கும்
ஐசிஐசிஐ வங்கியின் இந்த வட்டி அதிகரிப்பினால் இனி வாடிக்கையாளர்களுக்கு, மாத மாதம் செலுத்த வேண்டிய தவணை தொகையானது அதிகரிக்கலாம். இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் முன்பு செலுத்தியதை விட கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.