ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை அளிக்கும் விதமாக, அதன் புதிய கட்டண முறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
கடந்த மாதமே இது குறித்தான அறிவிப்புகள் வெளியான நிலையில், இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது கிரெடிட் கார்டு கட்டணங்கள் மற்றும் செக் ரிட்டர்ன் கட்டணம் பற்றிய அறிவிப்புகள் தான்.
இந்த கட்டணங்கள் வாடிக்கையாளர்களுக்கு எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்தலாம் வாருங்கள் பார்க்கலாம்.
கட்டணம் அதிகரிப்பு
ஐசிஐசிஐ வங்கி அதன் கிரெடிட் கார்டு கட்டணங்களை (பிப்ரவரி 10 ) இன்று முதல் அதிகரித்துள்ளது. இந்த கட்டண அதிகரிப்பின் படி வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை கட்டணமாக 2.50% செலுத்த வேண்டியிருக்கும். இது குறைந்தபட்சம் 500 ரூபாயாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
செக் ரிட்டர்ன் கட்டணம்
மேலும் செக் ரிட்டர்ன்ஸ், ஆட்டோ டெபிட்டுக்கும் மொத்த நிலுவைத் தொகையில் 2% கட்டணத்தினை நிர்ணயம் செய்துள்ளது. இதற்கும் குறைந்தபட்ச கட்டணம் என்பது 500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் எமரால்டு கார்டினை தவிர (ICICI Emerald Card), மற்ற அனைத்து கார்டுகளுக்கும் தாமதமாக செலுத்தும் தவணைக்கும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.எனினும் 100 ரூபாய்க்குள் நிலுவை இருந்தால் கட்டணம் ஏதும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் எவ்வளவு?
நிலுவைத் தொகை ரூ.100-க்குள் இருந்தால் - கட்டணம் ஏதும் இல்லை
நிலுவைத் தொகை ரூ.100 - ரூ.500 - தாமத கட்டணம் ரூ.100
நிலுவைத் தொகை ரூ.501 - ரூ.5000 - தாமத கட்டணம் ரூ.500
நிலுவைத் தொகை ரூ.5001 - ரூ.10000 - தாமத கட்டணம் ரூ.750
நிலுவைத் தொகை ரூ.10,001 - ரூ.25,000 - தாமத கட்டணம் ரூ.900
நிலுவைத் தொகை ரூ.25,011 - ரூ.50,000 - தாமத கட்டணம் ரூ.1000
நிலுவைத் தொகை ரூ.50,000 மேல் - தாமத கட்டணம் ரூ.1200
இந்த கட்டணங்களுடன் ஜிஎஸ்டி கட்டணமும் சேரும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மற்ற வங்கிகளில் என்ன நிலவரம்?
இதே ஹெச்.டி.எஃப்.சி வங்கி, எஸ்பிஐ கார்டு, ஆக்ஸிஸ் வங்கிகளில் கட்டண விகிதம் முறையே, நிலுவை 50,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் 1300 மற்றும் 1300, 1000 ரூபாயாக உள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் இந்த கட்டண அதிகரிப்பால், வாடிக்கையாளர்கள் இனி கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.