பொதுவாக கிரெடிட் கார்டு என்றாலே பயந்து ஒதுங்குபவர்கள் தான் அதிகம். ஏனெனில் சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால், அதனை விட மோசமான கடன் பிரச்சனை என்பது ஏதும் கிடையாது.
அப்படிப்பட்ட கிரெடிட் கார்டு, மூலமாக நீங்கள் ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணத்தை எடுக்க முடியும். ஆனால் அதற்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதால், பெரும்பாலானோர் அதைப் பயன்படுத்துவதில்லை.
மேலும் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், கிரெடிட் கார்டில் நீங்கள் பணத்தை எடுத்த நேரத்திலிருந்து வட்டி கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது. நீங்கள் ஏடிஎம் மூலமாக எடுத்த பணத்தில் 3.5 சதவீதம் வரையில் கூட கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் தான் கிரெடிட் கார்டுகளை வைத்து பெரும்பாலும் ஏடிஎம்மில் பணம் எடுப்பதில்லை.
வட்டி இல்லாமல் பணம்
தனது கிரெடிட் கார்டு வணிகத்தினை மேம்படுத்தும் விதமாக, ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி கிரெடிட் கார்டிலும் பல வகையான சலுகைகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக 48 நாட்களுக்கு வட்டியில்லாமல் முன் கூட்டியே பணம் எடுத்துக் கொள்ளலாம். கிரெடிட் கார்டில் இவ்வாறு வட்டியில்லா பணம் எடுத்துக் கொள்ளும் வசதியானது முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுள்ளதாக ஐடிஎஃப்சி வங்கியின் தலைமை இயக்க அதிகாரி பி மதிவானன் கூறியுள்ளார்.
பணம் எடுப்பது குறைவு தான்
தற்போதைய காலகட்டங்களில், இப்படி முன் கூட்டியே கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பணம் எடுக்கும் விகிதம் மிக குறைவு. உதாரணத்திற்கு கடந்த நவம்பரில் வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு மூலம் ஏடிஎம்களில் இருந்து, வெறும் 231.3 கோடி ரூபாய் பணத்தினை எடுத்துள்ளனர். இதே காலகட்டத்தில் விற்பனை மையங்களில் 62,349.7 கோடி ரூபாய் செலவிட்டுள்ளனர்.
எவ்வளவு கட்டணம்?
வங்கிகள் தற்போது கிரெடிட் கார்டு மூலம் ஒவ்வொரு முறையும் பணம் எடுப்பதற்கும், 250 - 450 ரூபாய் வரையில் கட்டணம் வசூலிக்கின்றன. அதோடு வட்டி விகிதம் மாதாத்திற்கு 2.5 - 3.5 சதவீதம் வரை, பணம் எடுக்கும் நாளில் இருந்து, பணத்தினை திரும்ப செலுத்தும் நாள் வரை வசூலிக்கின்றன. ஆனால் ஐடிஎஃப்சியில் POP உபயோகப்படுத்தும் போது, கிடைக்கும் வட்டியில்லா காலத்தினை போல, பணம் எடுத்தாலும் வட்டியில்லா கால அவகாசத்தினை பெற முடியும்.
குறைந்த கட்டணம் மட்டும் தான்
தற்போது இந்த சேவையை வாடிக்கையாளர்களுக்கு அழைப்பிதழ் மூலம் விரிவுபடுத்தி வரும் நிலையில், மார்ச் மாதத்திற்கு பிறகு மற்ற வாடிக்கையாளர்களுக்கும் விரிவுபடுத்தும் என்றும் இவ்வங்கி கூறியுள்ளது. அதோடு இவ்வாறு பரிவர்த்தனை செய்யப்படும் பண பரிவர்த்தனைக்கு 250 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் இவ்வங்கி தெரிவித்துள்ளது. எனினும் இது தற்போது சோதனைக்காக இந்த திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், இந்த எந்தளவுக்கு கைகொடுக்கும் என்பதனை பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது வாடிக்கையாளர்களை ஈர்க்கும்
ஐடிஎஃப்சியின் இந்த திட்டம் வாடிக்கையாளர்களை கவர உதவும். அதோடு வட்டி விகிதம் மற்ற வங்கிகளில் 36 - 40% என்ற விகிதத்தில் இருக்கும் நிலையில், ஐடிஎஃப்சியில் 9 - 36% இருக்கும் என்றும் கூறியுள்ளது. அதோடு வருட கட்டண விகிதம் வாடிக்கையாளர்களின் திரும்ப செலுத்தும் நடவடிக்கையை பொறுத்து இருக்கும் என்றும் இவ்வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.