கடந்த மார்ச் 2020-ல், மத்திய ரிசர்வ் வங்கி, 3 மாத இ எம் ஐ தவணைகளை ஒத்தி வைக்க, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து எஸ்பிஐ போன்ற பெரிய வங்கிகள், "தன்னிச்சையாக, தங்கள் வாடிக்கையாளர்களின் டேர்ம் லோன்களின் இ எம் ஐ ஒத்திவைக்கப்படும்" எனச் சொன்னது.
எஸ்பிஐயைத் தொடர்ந்து பல வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கடனுக்கான இஎம்ஐ ஒத்தி வைக்க அனுமதிக்கத் தொடங்கினார்கள்.
6 மாதம் ஒத்திப் போடுங்கள்
ஆனால், சில வங்கி அதிகாரிகளோ, கொரோனா லாக் டவுனைக் காரணம் காட்டி, 6 மாதங்களுக்காவது இஎம்ஐ (EMI) தவணைகளை ஒத்திப் போட வேண்டும் எனச் சொல்வதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைதளத்தில் செய்திகள் வெளியாயின. காரணம் கார்ப்பரேட் மற்றும் தொழில் துறையினருக்கு கடன் கொடுத்திருப்பதைப் போல ஒரு பெரிய தொகை தனி நபர்களுக்கு கடன்களாகக் கொடுத்து இருக்கிறார்களாம். லாக் டவுனால் பல தனி நபர்களுக்கு சம்பளமே பிரச்சனையில் இருக்கிறது. எனவே கடனைத் திருப்பிச் செலுத்துவதிலும் பிரச்சனை இருக்கிறது.
சில்லறைக் கடன்கள்
இந்தியாவில் சில்லறை தனி நபர் கடன்கள் (வீட்டுக் கடன், வாகனக் கடன், கல்விக் கடன், ஃபிக்ஸாட் டெபாசிட்டுக்கு எதிரான கடன்) மட்டும் சுமார் 24.97 லட்சம் கோடி ரூபாய்க்கு கொடுத்து இருக்கிறார்களாம். இது ஜனவரி 2020 கணக்கு. ஆக இந்த 24.97 லட்சம் கோடி ரூபாயை தனி நபர்கள் தான் திருப்பிச் செலுத்த வேண்டும்.
உதாரணம்
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ கொடுத்திருக்கும் மொத்த கடன்களில் சுமார் 37 % கடன்கள் சில்லறைக் கடன்கள் தான். எஸ்பிஐ கொடுத்திருக்கும் மொத்த கடனில், சில்லறைக் கடன்கள், கடந்த ஆண்டில் 33 %-மாக இருந்தது, இந்த 2019 - 20 நிதி ஆண்டில் (பிப்ரவரி 2020 வரை) 37 % ஆக ஆதிகரித்து இருக்கிறது. சில்லறைக் கடன்கள் தான் சுமார் 17 % வளர்ச்சி கண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒட்டு மொத்தமாக இந்தியாவில் கடன் வளர்ச்சி 6%-மாக இருப்பதாகச் சொல்கிறது ஆர்பிஐ தரவுகள். ஆக வங்கிகள் தங்கள் கடன் வியாபாரத்தை பெருக்க சில்லறை கடன்களை அதிகம் பயன்படுத்தி இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
6 மாதம் ஒத்தி வைத்தால்
வங்கிகள் தங்கள் கடன்கள் வாரா கடன்கள் ஆகிவிடக் கூடாது என நினைக்கிறார்கள். எனவே 6 மாத கடன் தவணைகளை ஒத்திப் போடச் சொல்கிறார்கள். ஒருவேளை ஆர்பிஐ 6 மாத கடன் தவணைகளை ஒத்திப் போடுகிறது என வைத்துக் கொள்வோம். அந்த 6 மாத கடன் தவணை ஒத்திவைப்பை பயன்படுத்திக் கொண்டால் நமக்கு என்ன நஷ்டம்? வாருங்கள் கணக்கு போடுவோம்.
வட்டி
மத்திய ரிசர்வ் வங்கி, ஏற்கனவே சொல்லி இருப்பது போல, இ எம் ஐ ஒத்திவைக்கலாம். ஆனால் அதற்கான வட்டியும் அதிகரிக்கத் தான் செய்யும் எனச் சொல்லி இருக்கிறார்கள் வங்கி தரப்பினர்கள். இந்த இ எம் ஐ ஒத்திவைப்பால், வாடிக்கையாளர்களுக்கு வட்டிச் சுமை பயங்கரமாக அதிகரிக்கும். எவ்வளவு அதிகரிக்கும்?
உதாரணம்
சனா ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். மாதம் 1 லட்சம் சம்பளம். ஆனால் அவர் வங்கியில் 10 % வட்டிக்கு, 20 ஆண்டுகளில் (240 மாத தவணை) திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் 55 லட்சம் ரூபாய் பாக்கி இருக்கிறது என வைத்துக் கொள்வோம். தற்போது மாதம் 53,076 ரூபாய் மாத இஎம்ஐ கடன் தவணையாக செலுத்திக் கொண்டு இருப்பார். இப்போது மேலே சொன்னது போல 6 மாத தவணைகளை ஆர்பிஐ ஒத்திப் போட்டுவிட்டார்கள் எனவும் வைத்துக் கொள்வோம். அதை சனா பயன்படுத்திக் கொண்டால் எவ்வளவு கூடுதலாக வட்டி செலுத்துவார் என்பதை பார்ப்போம்.
மாதம் 1
ஏப்ரல் 01, 2020 தேதிப் படி, மொத்த கடன் நிலுவைத் தொகை 55,00,000 ரூபாயாக இருக்கும். 55 லட்சம் ரூபாய்க்கு வட்டியை கணக்கிடுவார்கள். ஆக 35 லட்சம் ரூபாய்க்கு 45,833 ரூபாய் வட்டி வரும். முதல் மாதம் இஎம்ஐ (EMI) செலுத்தவில்லை என்பதால், இந்த வட்டித் தொகையை 55 லட்சம் ரூபாயுடன் சேர்த்து விடுவார்கள். ஆக 30 ஏப்ரல் 2020 தேதி நிலவரப்படி, சனாவின் மொத்த கடன் நிலுவைத் தொகை 55,45,833 ரூபாயாக இருக்கும்.
மாதம் 2
மே 01, 2020 தேதிப் படி, மொத்த கடன் நிலுவைத் தொகை 55,45,833 ரூபாயாக இருக்கும். இதற்கு வட்டி கணக்கிட்டால் 46,215 ரூபாய் வட்டி வரும். இரண்டாம் மாதமும் இஎம்ஐ (EMI) செலுத்தவில்லை என்பதால், இந்த வட்டித் தொகையை 55,45,833
ரூபாயுடன் சேர்த்து விடுவார்கள். ஆக, 31 மே 2020 தேதி நிலவரப்படி, சனாவின் மொத்த கடன் நிலுவைத் தொகை 55,92,049 ரூபாயாக அதிகரித்து இருக்கும்.
மாதம் 3
ஜூன் 01, 2020 தேதிப் படி, மொத்த கடன் நிலுவைத் தொகை 55,92,049 ரூபாயாக இருக்கும். இதற்கு வட்டி கணக்கிட்டால் 46,600 ரூபாய் வட்டி வரும். 3-ஆம் மாதமும் இஎம்ஐ (EMI) செலுத்தவில்லை என்பதால், இந்த வட்டித் தொகையை 55,92,049
ரூபாயுடன் சேர்த்து விடுவார்கள். ஆக 30 ஜூன் 2020 தேதி நிலவரப்படி, சனாவின் மொத்த கடன் நிலுவைத் தொகை 56,38,649
ரூபாயாக அதிகரித்து இருக்கும்.
மாதம் 4
ஜூலை 01, 2020 தேதிப் படி, மொத்த கடன் நிலுவைத் தொகை 56,38,649 ரூபாயாக இருக்கும். இதற்கு வட்டி கணக்கிட்டால் 46,989 ரூபாய் வட்டி வரும். 4-ஆம் மாதமும் இஎம்ஐ (EMI) செலுத்தவில்லை என்பதால், இந்த வட்டித் தொகையை 56,38,649
ரூபாயுடன் சேர்த்து விடுவார்கள். ஆக 31 ஜூலை 2020 தேதி நிலவரப்படி, சனாவின் மொத்த கடன் நிலுவைத் தொகை 56,85,638
ரூபாயாக அதிகரித்து இருக்கும்.
மாதம் 5
ஆகஸ்ட் 01, 2020 தேதிப் படி, மொத்த கடன் நிலுவைத் தொகை 56,85,638
ரூபாயாக இருக்கும். இதற்கு வட்டி கணக்கிட்டால் 47,380 ரூபாய் வட்டி வரும். 5-ஆம் மாதமும் இஎம்ஐ (EMI) செலுத்தவில்லை என்பதால், இந்த வட்டித் தொகையை 56,85,638
ரூபாயுடன் சேர்த்து விடுவார்கள். ஆக 31 ஆகஸ்ட் 2020 தேதி நிலவரப்படி, சனாவின் மொத்த கடன் நிலுவைத் தொகை 57,33,018
ரூபாயாக அதிகரித்து இருக்கும்.
மாதம் 6
செப்டம்பர் 01, 2020 தேதிப் படி, மொத்த கடன் நிலுவைத் தொகை 57,33,018 ரூபாயாக இருக்கும். இதற்கு வட்டி கணக்கிட்டால் 47,775 ரூபாய் வட்டி வரும். 6-ஆம் மாதமும் இஎம்ஐ (EMI) செலுத்தவில்லை என்பதால், இந்த வட்டித் தொகையை 57,33,018
ரூபாயுடன் சேர்த்து விடுவார்கள். ஆக 30 செப்டம்பர் 2020 தேதி நிலவரப்படி, சனாவின் மொத்த கடன் நிலுவைத் தொகை 57,80,793
ரூபாயாக அதிகரித்து இருக்கும்.
ரூ. 2,80,793 அசல் அதிகரிப்பு
ஆறு மாதங்களுக்கு முன் 55 லட்சம் ரூபாயாக இருந்த கடன் அசல் தொகை, 6 மாதங்களுக்குப் பின் 57.80 லட்சமாக அதிகரித்து இருக்கும். இப்போது இந்த கூடுதல் அசலுக்கு வட்டி, வட்டிக்கு குட்டி என பயங்கரமாக நாம் வங்கிக்குச் செலுத்த வேண்டி இருக்கும்.
இஎம்ஐ கூடும்
மேலே சொன்னது போல 57,80,793 ரூபாய் அசலுக்கு அதே 240 மாதங்களில் கடனை அடைக்க வேண்டும் என்றால் இஎம்ஐ தவணைகள் 53,076 ரூபாயில் இருந்து 55,786 ரூபாயாக அதிகரிக்கும். அதோடு சனா 6 மாத இஎம்ஐ தவணைகளை ஒத்திப் போடவில்லை என்றால் 72.38 லட்சம் வட்டியாகச் செலுத்துவார். ஆனால் இப்போது 6 மாத தவணைகளை ஒத்திப் போட்டதால் 76.07 லட்சம் செலுத்துவார். 3.69 லட்சம் வட்டி கூடுதலாகச் செலுத்துவார்.
அதே இஎம்ஐ-க்கு எவ்வளவு
தற்போது சனா செலுத்தும் 53,076 ரூபாய் இஎம்ஐ தொடர வேண்டும் என்றால், சனா 240 மாதங்களுக்கு பதிலாக, 288 மாதங்களுக்கு இஎம்ஐ செலுத்த வேண்டும். இந்த புதிய இஎம்ஐ 53,032 ரூபாயாக இருக்கும். சனா 6 மாத இஎம்ஐ தவணைகளை ஒத்திப் போடவில்லை என்றால் 72.38 லட்சம் வட்டியாகச் செலுத்துவார். ஆனால் இப்போது 6 மாதம் ஒத்திப் போட்டு, 288 மாதங்களுக்கு இஎம்ஐ நீட்டித்து இருப்பதால் 94.92 லட்சம் வட்டி செலுத்துவார். 22.54 லட்சம் ரூபாய் கூடுதலாக வட்டியைச் செலுத்துவார் நம் சனா.
ஒத்தி வைப்பு வேண்டாம்
எனவே மக்களே, இஎம்ஐ தவணைகளை ஒத்திப் போடுவதற்கு முன், இந்த கணக்கீடுகளை ஒரு முறை பார்த்துவிடுங்கள். கையில் பணம் இருந்தால் எப்படியாவது சமாளித்துவிடலாம் எனத் தோன்றினால் தயவு செய்து கடன் தவணைகளைச் செலுத்துங்கள். 6 மாத தவணை ஒத்திப் போட்டு பின் லட்சக் கணக்கில் கூடுதலாக வட்டி செலுத்தாதீர்கள்.