வருமான வரிப் படிவங்களை நிரப்பி, தாக்கல் செய்ய வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.
2019 - 20 நிதி ஆண்டில் சம்பாதித்த பணத்துக்கு, வரும் 30 நவம்பர் 2020-க்குள், வருமான வரிப் படிவங்களை முழுமையாக நிரப்பி தாக்கல் செய்ய வேண்டும்.
இப்போதே பலரும் தங்கள் வருமான வரிப் படிவங்களை சரியாக நிரப்பி சமர்பித்து, ரீஃபண்டுகளே வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். வருமான வரித் துறையினர், யாருக்கு எவ்வளவு ரீஃபண்ட் கொடுத்து இருக்கிறார்கள் என்பதைத் தான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம்.
மொத்தக் கணக்கு என்ன
கடந்த ஆறு மாத காலத்தில் (01 ஏப்ரல் 2020 - 29 செப்டம்பர் 2020), சுமாராக 1.18 லட்சம் கோடி ரூபாயை, சுமாராக 33.54 லட்சத்துக்கும் மேற்பட்ட வரிதாரர்களுக்கு ரீஃபண்ட் தொகை கொடுத்து இருப்பதாகச் சொல்லி இருக்கிறது மத்திய வருமான வரித் துறை.
தனி நபர்களுக்கு
வருமான வரித் துறையிடம் தனி நபர்கள் (Individual), கூடுதலாக வரியைச் செலுத்தி இருந்தால், அவைகளை, ரீஃபண்ட் கொடுப்பது வருமான வரித் துறையினரின் வழக்கம். அப்படி தனி நபர்கள், கூடுதலாகச் செலுத்தி இருக்கும் 32,230 கோடி ரூபாய் வருமான வரியை, 31,75,358 வரி தாரர்களுக்கு ரீஃபண்டாகக் கொடுத்து இருக்கிறார்களாம்.
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு
தனிநபர்களுக்கு எப்படி கூடுதலாக வசூலித்த தொகை அல்லது கூடுதலாகச் செலுத்திய தொகையை, வருமான வரித் துறை திருப்பிச் செலுத்துகிறதோ, அதே போல, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் திருப்பிச் செலுத்துகிறது வருமான வரித் துறை. இந்த ஏப்ரல் - செப் 2020 வரையான 6 மாத காலத்தில் 86,094 கோடி ரூபாயை, 1,78,540 கார்ப்பரேட் வரிதாரர்களுக்கு, ரீஃபண்டாகத் திருப்பிச் செலுத்தி இருக்கிறதாம்.
விரைவாகக் கிடைக்கிறது
முன்பை விட, வருமான வரி ரீஃபண்டுகள் விரைவாகக் கிடைப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. எனவே, வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியவர்கள், நவம்பர் மாதம் இறுதி வரை இழுத்தடித்துக் கொண்டு இருக்காமல், சட்டென ஐடிஆர் படிவத்தை சரியாக நிரப்பி, சமர்பித்து ரீஃப்ண்ட் பெறும் வழியைப் பாருங்கள். தாமதிக்க வேண்டாம்.