உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில், இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடு இந்தியா. இந்தியாவில் கூலி ஏழைகள் மற்றும் சம்பள ஏழைகள் எண்ணிக்கை தான் அதிகம்.
வியாபாரிகள், பெரிய பெரிய கம்பெனிகளின் மிகப் பெரிய நிர்வாகிகளாக இருப்பவர்கள், பெரிய அளவில் சுய தொழில் செய்து தங்கள் வாழ்கையை நடத்துபவர்களின் எண்ணிக்கை, மொத்த இந்திய மக்கள் தொகையில் 5 சதவிகிதம் இருந்தாலே பெரிய விஷயம்.
இந்த பெரும்பகுதியான கூலித் தொழிலாளர்களுக்கு, வருமான வரி பற்றிய கவலை இல்லை. ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வருமான வரி வரம்பை கணக்கில் எடுத்துக் கொண்டு வருமான வரிப் படிவத்தைக் கூடச் செலுத்தாமல் விட்டு விடலாம்.
நடுத்தர மக்கள்
ஆனால் ஏழை எனவும் ஏற்றுக் கொள்ள முடியாமல், பணக்காரனும் ஆக முடியாமல், பணக்காரன் ஆக வேண்டும் என்கிற முயற்சியிலேயே மறித்துப் போகும் புனிதவான்கள் தான் இந்த மாத சம்பளம் வாங்கும் ஏழைகள். மாதம் 25,000 ரூபாய் முதல் 3,00,000 வாங்குபவர்கள் வரை, இந்த சம்பள ஏழைகளாக எடுத்துக் கொள்ளலாம்.
வருமான வரி
பொதுவாக, மாத சம்பளம் வாங்குபவர்கள், வருமான வரியில் பெரிய தவறுகளை எல்லாம் செய்ய முடியாது. காரணம், சம்பளம் போடுவதற்கு முன்பே வருமான வரிப் பிடித்தங்கள் எல்லாம் கழித்துக் கொண்டு தான் சம்பளமே போடுவார்கள். எனவே இவர்களுக்கு எல்லாம் வருமான வரி என்றாலே ஒரு வித அலர்ஜி தான். விஷயத்துக்கு வருவோம்.
ஆலோசனை
2020 - 21 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தயாரிக்கும் வேலையில் இறங்கி இருக்கிறது மத்திய நிதி அமைச்சகம். இந்த முறை வருமான வரிச் சலுகைகளைக் கொடுக்கலாமா..? வருமான வரி வரம்புகளில் (Income Tax slab) ஏதாவது மாற்றம் கொண்டு வரலாமா..? என தீர ஆலோசித்து வருகிறார்களாம்.
வேண்டாமே
வருமான வரிச் சலுகை அல்லது வருமான வரி வரம்புகளில் மாற்றம் கொண்டு வந்தால் அது ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே (அதிகபட்சம் 3 கோடி பேருக்கு) நன்மைகள் சென்று சேரும். எனவே பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (அதாங்க விவசாயிகளூக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் திட்டம்) போன்ற திட்டங்கள் வழியாக மக்கள் கையில் நேரடியாக நிறைய பணம் கொடுக்கலாம் எனச் சொல்கிறார்களாம்.
கட்டுமானம்
அப்படி புதிய திட்டங்கள் வழியாக மக்கள் கையில் கூடுதல் பணம் கொடுக்க முடியவில்லை என்றால் கூட, இன்ஃப்ராஸ்ட்ரக்சர் திட்டங்கள் வழியாக செலவுகளை அதிகப்படுத்தலாம் எனவும் கருத்துக்களைச் சொல்லி இருக்கிறார்களாம். இன்ஃப்ராஸ்ட்ரக்சர் எனும் போது, அது Multiplier Effect ஆக, மற்ற துறைகளுக்கும் பரவும் என்கிறார்களாம்.
நஷ்டம்
ஏற்கனவே கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு, கார்ப்பரேட் வரியைக் குறைத்ததால், சுமார் 1.4 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு இழந்து இருக்கிறது. அதோடு ஜிஎஸ்டி-ல் இருந்து வர வேண்டிய பணமும் ஒழுங்காக வருவதில்லை. எனவே வருமான வரியைக் குறைப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை என நிதி அமைச்சக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்ததாக எகமானிக் டைம்ஸ் பத்திரிகை சொல்லி இருக்கிறது.
தற்போதைய வரி வரம்பு
தற்போது ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்குள் வருமானம் ஈட்டுபவர்கள் வரி செலுத்த வேண்டாம்.
2.5 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய்க்குள் வருமானம் ஈட்டுபவர்கள் 5% வரி செலுத்த வேண்டி இருக்கிறது.
5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரைக்கும் வருமானம் ஈட்டுபவர்கள் 20% வரி செலுத்த வேண்டி இருக்கிறது.
10 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள் 30% வரி செலுத்த வேண்டி இருக்கிறது. அனைவரும் 4% செஸ் வரி வேறு கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கிறது.
பரிந்துரை வரம்புகள்
புதிய கமிட்டி ஒன்று
01 ரூபாய் - 10 லட்சம் ரூபாய் வரை = 10 % வரி
10 லட்சம் - 20 லட்சம் ரூபாய் வரை = 20 % வரி
20 லட்சம் - 200 லட்சம் ரூபாய் வரை = 30 % வரி
200 லட்சம் (2 கோடி) க்கு மேல் = 35 % வரி... என வருமான வரி வரம்புகளை நிர்ணயிக்க, பரிந்துரை செய்து இருக்கிறதாம்.
கருத்து
ஆனால் இந்த புதிய கமிட்டி பரிந்துரைத்து இருக்கும் வரம்புகளில், வரிச் சலுகை வரம்பை இதுவரை குறிப்பிட்டவில்லையாம். அதோடு திடீரென அடிப்படை வரி வரம்பை மாற்றினால் வருவாய் இழப்பு ஏற்படலாம் எனவும் பேசிக் கொண்டு இருக்கிறார்களாம். எனவே இந்த ஆண்டு பட்ஜெட்டில் வருமான வரிச் சலுகைகள் ஏதாவது இருக்குமா..? என உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எதற்கும் வருமான வரியை முழுமையாகச் செலுத்த தயாராக இருங்கள்.