2019 - 20 நிதி ஆண்டில் சம்பாதித்த பணத்துக்கு, வருமான வரிப் படிவங்களைத் தயார் செய்து, அரசிடம் செலுத்துவதற்கான காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.
இந்த நேரத்தில் 2018 - 19 நிதி ஆண்டில் சம்பாதித்த பணத்துக்கு, வருமான வரிப் படிவங்களைச் சமர்பிக்க வேண்டிய கடைசி தேதியை, வருமான வரித் துறையினர் நீட்டித்து இருக்கிறார்கள்.
எதற்கு எல்லாம் கால அவகாசத்தை நீட்டித்து இருக்கிறார்கள்? கடைசி தேதி என்ன? என்பதை எல்லா உள்ளே கட்டுரையில் பார்ப்போம்.
2018 - 19 வரி தாக்கல்
நிதி ஆண்டு 2018 - 19 கால கட்டத்தில் சம்பாதித்த பணத்துக்கு, 31 மார்ச் 2020-க்குள் வருமான வரிப் படிவங்களைச் சமர்பிக்க வேண்டி இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை வந்ததால், 31 ஜூலை 2020 வரை காலக் கெடுவை நீட்டித்து இருந்தது அரசு. தற்போது இந்த தேதியையும் நீட்டித்து 30 செப்டம்பர் 2020 வரை அவகாசம் கொடுத்து இருக்கிறார்கள்.
எப்போதுமே முடியாது பாத்துக்குங்க
யாராவது 2018 - 19 நிதி ஆண்டுக்கு இன்னமும் வருமான வரிப் படிவத்தை சமர்பிக்கவில்லை என்றால், அடுத்த 2 மாத காலத்துக்குள் சரியாக வரிப் படிவங்களை நிரப்பி சமர்பித்துவிடுங்கள். 2018 - 19 நிதி ஆண்டுக்கான வருமான வரிப் படிவத்தை, இப்போது இந்த 2 மாதங்களுக்குள் நீங்கள் சமர்பிக்கவில்லை என்றால், இனி எப்போதும் சமர்பிக்க முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
திருத்தப்பட்ட வரிப் படிவம் 2018 - 19
2018 - 19 நிதி ஆண்டுக்கான வருமான வரிப் படிவத்தை எப்போதோ நிரப்பி சமர்பித்துவிட்டீர்கள். ஆனால் அதில் தவறு இருப்பது உங்களுக்கு இப்போது தான், தெரிய வருகிறது. ஆக 2018 - 19 நிதி ஆண்டுக்கு, புதிதாக திருத்தப்பட்ட வருமான வரிப் படிவத்தை சமர்பிக்க 30 செப்டம்பர் 2020 தான் கடைசி தேதி. இந்த வாய்ப்பை தவறவிட்டால் அதன் பின், 2018 - 19 நிதி ஆண்டுக்கு திருத்தப்பட்ட வருமான வரிப் படிவத்தை சமர்பிக்க வாய்ப்பு கிடைக்காது.
பயன்படுத்திக் கொள்ளுங்கள்
வருமான வரிப் படிவங்களை முறையாக நிரப்பி சமர்பிப்பதால், வங்கிக் கடன் கிடைப்பது போன்ற பல நிதி சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு உதவியாக இருக்கும். எனவே இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக் கொண்டு, 2018 - 19 நிதி ஆண்டுக்கு வருமான வரிப் படிவங்களைச் சமர்பிக்காதவர்கள், இப்போது சமர்பித்துவிடுங்கள்.