இன்று உலகம் முழுக்க சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்ளிட்டு பலரும் தங்களது வாழ்த்துகளை மகளிருக்கு கூறி வருகின்றனர்.
அந்த வகையில் நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, மகளிருக்கு சர்வதேச மகளிர் தின வாழத்துகளோடு, சில சலுகையையும் அறிவித்துள்ளது.
அது என்ன சலுகை? இதனால் அவர்களுக்கு என்ன பயன்? இந்த சலுகையினை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம்? வாருங்கள் பார்க்கலாம்.
பெண்களுக்கு வட்டி சலுகை
பொதுவாக எஸ்பிஐ-யில் பெண்களுக்கு சில கடன்களில் கூடுதல் சலுகைகள் இருக்கும். அந்த வகையில் இன்று வீட்டு கடனுக்கு சலுகையை அறிவித்துள்ளது. நடப்பு மாத தொடக்கத்தில் தான் எஸ்பிஐ வீட்டு கடனுக்கான வட்டியை குறைத்தது. இந்த நிலையில் இன்று சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, பெண் வாடிக்கையாளார்களுக்கு கூடுதலாக வட்டி சலுகையை அளித்துள்ளது.
எவ்வளவு வட்டி குறையும்?
பெண் வாடிக்கையாளர்கள் வட்டியில் 5 அடிப்படை புள்ளிகள் குறைவாக இருக்கும். வட்டி விகிதம் 6.70%ல் இருந்து தொடங்கும் என்றும் அறிவித்துள்ளது. இதன் மூலம் உங்களது கனவு வீட்டினை நனவாக்க முடியும். ஆக வாடிக்கையாளர்கள் இந்த கூடுதல் சலுகைகளை பெற்று பயன் பெறுங்கள் என்று எஸ்பிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
செயல்பாட்டு கட்டணம் தள்ளுபடி
நாட்டில் வீட்டு கடன் சந்தையில் 34% பங்கினை எஸ்பிஐ கொண்டுள்ளது. இந்த நிலையில் எஸ்பிஐயின் இந்த அறிவிப்பு பல ஆயிரம் வாடிக்கையாளார்களுக்கு மேலும் கைகொடுக்கும். வட்டி குறைப்போடு, எஸ்பிஐ ஏற்கனவே செயல்பாட்டுக் கட்டணத்தையும் 100 சதவீதம் வரை தள்ளுபடி செய்துள்ளது.
இஎம்ஐ குறையும்
எஸ்பிஐ-யின் இந்த சலுகையினால் மாத மாதம் செலுத்தும் இஎம்ஐ தொகை குறையும். நல்ல கிரெடிட் ஸ்கோர் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 75 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக்கடனுக்கு 6.70% வட்டியும், இதே 75 லட்சம் ரூபாய்க்கு மேலாக வீட்டு கடனுக்கு 6.75 சதவீத வட்டி என்று ஏற்கனவே எஸ்பிஐ அறிவித்திருந்தது. கூடுதலாக வாடிக்கையாளர்கள் தங்களது கடனை எஸ்பிஐ-யின் யோனோ ஆப் மூலமாக விண்ணப்பித்தால், கூடுதலாக 5 அடிப்படை புள்ளிகளை வட்டியில் சலுகையை பெற முடியும் என எஸ்பிஐ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் உங்கள் கனவு வீட்டை நனவாக்க இது சரியான நேரமே.