பணம் மீது யாருக்குத் தான் ஆசையில்லை, ஆனால் அதை முறையான தளத்தில் முதலீடு செய்து பாதுகாப்பாகப் பணத்தை லாபத்துடன் திரும்ப எடுக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
இந்நிலையில் வெறும் 50 ரூபாய் முதலீட்டில் 34 லட்சம் ரூபாய் என்ற பெரும் தொகையை மிகவும் பாதுகாப்பான வழியில் வரிச் சலுகை உடன் சம்பாதிப்பது எப்படி என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
பாதுகாப்பான முதலீட்டுத் திட்டம்
வங்கி டெப்பாசிட் முதல் இன்று மிகவும் பிரபலமாக விளங்கும் கிரிப்டோ முதலீடு வரை பல முதலீட்டுத் திட்டங்கள் இருந்தாலும் பாதுகாப்பான முதலீடாகவும், அதேநேரம் வருமான வரி லாபத்தையும் அளிக்கக்கூடிய ஒரு முக்கியமான முதலீடாக விளங்குகிறது NPS திட்டம்.
தினமும் 50 ரூபாய்
தினமும் 50 ரூபாய் என்பது பெரிய சுமையாக இருக்காது, அதேவேளையில் உங்கள் குடும்பப் பட்ஜெட்டிலும் இது கட்டாயம் பாதிக்காது. இப்படித் தினமும் உங்களால் 50 ரூபாய் முதலீடு செய்ய முடியுமானால் ஓய்வு பெரும் காலத்தில் சுமார் 34 லட்சம் ரூபாய் உங்கள் கையில் இருக்கும். இதைவிட வேறு என்ன வேண்டும் சொல்லுங்க.
NPS திட்டம்
பொதுவாக NPS திட்டத்தில் நம் விருப்பத்திற்கு ஏற்ப முதலீடு செய்ய முடியும், உதாரணமாக நீங்கள் கணிசமான ரிஸ்க் எடுக்கத் தயாராக இருந்தால் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம், இல்லை ஓய்வு பெறும் காலத்தில் கிடைக்கும் பணத்தில் ரிஸ்க் எடுக்க மனம் இல்லாமல் இருந்தால் கடன் சந்தையிலேயே பாதுகாப்பாக முதலீடு செய்யலாம்.
இளம் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம்
குறிப்பாக இந்தத் திட்டம் புதிதாக வேலைக்குச் சேர்வோர்க்கு மிகவும் சிறந்த முதலீட்டுத் திட்டமாக விளங்கும். இன்றைய இளைஞர்கள் படிப்பை முடிக்கும் முன்பே வேலையைப் பெறும் வாய்ப்பு உள்ளது. இன்னும் சில பல திறன்களை வளர்ந்து கொண்டு படிக்கும் போதே பார்ட் டைம் வேலை மூலம் சம்பாதிக்கத் துவங்குகின்றனர்.
ஓய்வூதிய திட்டங்கள்
எனவே NPS போன்ற திட்டத்தில் முதலீடு செய்யும் எவ்வளவு விரைவாக முதலீடு செய்யத் துவங்குகிறோமோ, அந்த அளவிற்கு விரைவாகத் துவங்க வேண்டும். ஓய்வூதிய திட்டங்களுக்கு அப்படியொரு நெருக்கடியும், அதேவேளையில் சாதகமான வாய்ப்பும் உள்ளது.
25 வயதில் முதலீட்டுத் துவக்கம்
சரி உதாரணமாக 25 வயதில் ஒருவர் NPS திட்டத்தில் முதலீடு செய்கிறார் என வைத்துக்கொள்வோம். 25 வயதில் ஒருவர் தினமும் 50 ரூபாய் முதலீடு செய்யத் துவங்குகிறார்கள் என்றால் ஓய்வு பெறும் 60 வயதான 60ல் 10 சதவீத வட்டி வருமானத்துடன் 34 லட்சம் வரையில் கிடைக்கும். மேலும் பங்குச்சந்தையில் அதிகப்படியாக 75 சதவீதம் முதலீடு செய்ய முடியும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
முதலீட்டு உதாரணம்
வயது - 25
முதலீட்டுத் தொகை - தினமும் 50 ரூபாய் என்றால் மாதம் 1500 ரூபாய்
முதலீட்டுக் காலம் - 35 வருடம் (ஒய்வு பெறும் வயது 60)
மொத்த முதலீட்டுத் தொகை - 6.30 லட்சம் ரூபாய்
வட்டியாகக் கிடைக்கும் தொகை - 27.9 லட்சம் ரூபாய்
இத்திட்டத்தின் முடிவில் கிடைக்கும் தொகை: 34.19 லட்சம் ரூபாய்
வருமான வரிச் சேமிப்பு மூலம் கிடைக்கும் தொகை: 1.89 லட்சம் ரூபாய்
60% தொகை மட்டுமே கிடைக்கும்
நீங்கள் ஓய்வு பெறும் 60 வயதில் மொத்த 34.19 லட்சம் ரூபாய் தொகையில் 60 சதவீதம் மட்டுமே மொத்தமாகக் கையில் பெற முடியும், ஆதாவது 20.51 லட்சம் மட்டுமே கிடைக்கும். மீதமுள்ள தொகை 8 சதவீத வட்டியில் பென்ஷனாகக் கிடைக்கும்.
மீதமுள்ள தொகையை 8 சதவீத வட்டியில் மாத பென்ஷனாக 9,111 ரூபாய் கிடைக்கும்.
முதிர்வு தொகையில் மாறுபடும்
மேலும் நீங்கள் முதலீட்டைத் துவங்கும் வயது, முதலீட்டுத் தொகை, முதலீட்டுப் பங்கீடு அளவு (பங்குச்சந்தை, கடன் சந்தை) ஆகியவற்றை அடிப்படையில் முதிர்வு தொகை முற்றிலும் மாறுபடும் என்பதை மறந்துவிட வேண்டாம்.