இன்றைய காலக்கட்டத்தில் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், அரசின் சில திட்டங்களுக்கு என்றுமே வரவேற்புண்டு. குறிப்பாக அஞ்சலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் மிக லாபகரமான ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது.
சம்பளதாரர்களுக்கு வருங்கால வைப்பு நிதி என்பது இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓய்வூதிய திட்டமிடலாகும். இந்த சேமிப்பு திட்டம் வரி சேமிப்புக்கும் உதவும் ஒரு சிறந்த திட்டமாக உள்ளது.
அரசின் அம்சமான பிபிஎஃப் திட்டம்
நீண்டகால நோக்கங்களுக்காக, ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்ய நினைப்போருக்கு, நிச்சயம் இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம் தான். ஏனெனில் முதலீட்டிற்கு பங்கம் இல்லாத ஒரு சிறந்த முதலீடு. இந்த திட்டமானது 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது.
யார் இதற்கு தகுதியானவர்?
இந்தியரான எந்தவொரு தனிப்பட்ட நபரும் இந்த வைப்பு நிதி கணக்கினை தொடங்க தகுதியானவர் தான். என்ஆர்ஐ-களுக்கு இந்த கணக்கு தொடங்க அனுமதியில்லை. ஒரு வேளை இந்த கணக்கினை தொடங்கும்போது இந்தியாவில் இருந்து, பின்னர் வெளி நாடுகளுக்கு சென்றிருந்தால், அவர்கள் இந்த வைப்பு நிதி கணக்கு முதிர்வடையும் வரை தொடர்ந்து கொள்ளலாம். இதே மைனர் குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரோ இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை தொடங்கிக் கொள்ள முடியும்.
குறைந்தபட்சம் எவ்வளவு பங்களிப்பு?
பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் வருடத்திற்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் செலுத்திக் கொள்ளலாம், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம். ஒரு ஆண்டில் அதிகபட்சம் 12 தவணைகளாக, உங்களாது முதலீட்டு தவணையை செய்து கொள்ளலாம்.
எப்படி தொடங்குவது?
இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை அஞ்சலகம், பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில முன்னணி தனியார் வங்கிகள் மூலமும் தொடங்கிக் கொள்ளலாம். குறிப்பாக தனியார் வங்கிகளில் ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட சில வங்கிகளில் தொடங்கி கொள்ள முடியும். இதனை உங்களது வங்கி இணைய வங்கிகள் மூலமாக எளிதில் தொடங்கிக் கொள்ளலாம்.
இதற்காக அடையாள அட்டை, முகவரி சான்றிதழ், போட்டோ உள்ளிட்ட ஆவணங்கள் கொடுக்க வேண்டியிருக்கும்.
வங்கி கணக்கு அவசியம்?
நீங்கள் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை தொடங்க கட்டாயம் ஒரு வங்கிக் கணக்கு வேண்டும். உங்களது இணைய வங்கியினை லாகின் செய்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள பிபிஎஃப் என்ற ஆப்சனை கிளிக் செய்யலாம். அதில் Relevant account மற்றும் minor account என்று காண்பிக்கும். அதில் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்து, அதில் உங்களது விவரங்கள் நாமினி விவரங்கள், வங்கி விவரங்கள் அனைத்தும் கேட்கும்.
டெபாசிட் எவ்வளவு?
உங்களது பான் நம்பரை வெரிபை செய்து கொண்டு, இதன் பிறகு நீங்கள் எவ்வளவு டெபாசிட் செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்கும். அதனை பூர்த்தி செய்த பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும். அதனை கொடுத்து ஒரு முறை இந்த வெரிபிகேஷன் செய்யப்பட்ட பின்பு, உங்களது பிபிஎஃப் கணக்கு தொடங்கப்படும். சில வங்கிகளில் இந்த கணக்கினை தொடங்க ஆவணங்களை பிசிகலாகவும் கேட்கின்றன. ஆக் மேற்கண்ட இந்த வழிமுறைகள் பொதுவானவையே. இது வங்கிகளுக்கு வங்கி சற்று வித்தியாசப்படுகின்றன.
பாஸ்புக் உண்டு
இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு தொடங்கப்பட்ட பின்னர், உங்களுக்கு வங்கிகள் பாஸ்புக்கினை கொடுக்கின்றன. இதன் மூலம் நீங்கள் உங்களது கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என தெரிந்து கொள்ளலாம். ஆன்லைனில் இந்த கணக்கினை தொடங்குபவர்கள் ஆன்லைனிலேயே உங்களது இருப்பு மற்றும் மற்ற விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
கணக்கினை மற்றொரு வங்கிக்கு மாற்ற முடியுமா?
உங்களது வைப்பு நிதி கணக்கினை ஒரு வங்கி கிளையில் இருந்து, மற்றொரு வங்கி கிளைக்கு மாற்றிக் கொள்ள முடியும். அதே போல அஞ்சலகத்தின் ஒரு கிளையில் இருந்து, இன்னொரு கிளைக்கு மாற்றிக் கொள்ள முடியும். அதோடு கணக்கினை தொடங்கி 5 ஆண்டுகளுக்குள் மூடுவதற்கு அனுமதி இல்லை. ஆனால் அதன் பிறகு சில காரணங்களினால் கணக்கினை மூடிக்கொள்ளலாம். அக்கவுண்ட் ஹோல்டருக்கு உயிருக்கு ஆபத்தான நோய் உள்ளிட்ட சில காரணங்களினால் மட்டுமே மூடிக் கொள்ளலாம். இதற்காக நீங்கள் சரியான ஆவணங்களை சமர்பிக்க வேண்டியிருக்கும்.
அக்கவுண்ட் ஹோல்டர் இறந்து விட்டால்?
ஒரு வேளை துரதிஷ்டவசமாக பிபிஎஃப் அக்கவுண்ட் ஹோல்டர் இறந்து விட்டால், அவரது மனைவியோ அல்லது சட்டபூர்வமாக யார் வாரிசுதாரரோ அவர்கள் க்ளைம் செய்து கொள்ளலாம்.
உங்களது பிபிஎஃப் கணக்கு தொடங்கி முதிர்வு அடைந்துவிட்டால், 15 வருடத்தின் நிதியாண்டின் முடிவில் க்ளைம் செய்து கொள்ளலாம்.
உங்களது கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து 7வது நிதியாண்டில் உங்களது பிபிஎஃப் கணக்கில் இருந்து ஓரளவு தொகையினை பெறலாம். எனினும் ஒரு பகுதி மட்டுமே திரும்ப பெற அனுமதிக்கப்படும். சில வங்கிகள் 5 ஆண்டுகளுக்கு பிறகும் பணம் எடுக்க அனுமதிக்கின்றன. அவ்வாறு எடுக்கப்படும் தொகையானது ஒரு நிதியாண்டில் ஒரு முறை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது.
முதிர்வுக்கு பிறகு என்ன செய்யலாம்?
இந்த பொது வருங்கால வைப்பு நிதி வாடிக்கையாளருக்கு நிதி உடனடியாக தேவைப்படாத பட்சத்தில், இந்த வைப்பு நிதி திட்டத்தின் முதிர்வு காலம் 15 வருடம் ஆகும். எனினும் முதிர்வு காலத்திற்கு பிறகும் 5 ஆண்டு தொகுப்புகளாக தொடர்ந்து கொள்ளலாம். இதற்காக நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளையிலோ அல்லது அஞ்சலகத்திலோ பார்மினை கொடுத்து நீட்டித்துக் கொள்ளலாம்.
மாதம் ரூ.7,000 முதலீடு
மாதம் 7,000 ரூபாய் முதலீட்டின் மூலம், வருடத்திற்கு 70,000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். 15 வருடம் முதலீடு செய்தால், 10,50,000 முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு வட்டி விகிதம் தற்போது 7.1% ஆகும். வட்டி விகிதம் 8,48,498 ரூபாயாகும். ஆக மொத்தம் 15 வருடம் கழித்து உங்களது மொத்த முதிர்வு தொகையானது 18,98,498 ரூபாயாகும்.
இதே தொகையை 20 வருடத்திற்கு நீட்டித்தால், 20 வருடம் கழித்து, உங்களது முதிர்வு தொகை 31,07,201 ரூபாயாகும்.
இதே தொகையை 30 வருடத்திற்கு நீட்டித்தால், 30 வருடம் கழித்து, உங்களது முதிர்வு தொகை 72,10,425 ரூபாயாகும்.