இன்றைய தேதிக்கு, இந்தியாவில் ஒரு தனி நபர், 2.5 லட்சம் ரூபாய்க்கு கீழ் சம்பாதித்தால், அரசுக்கு ஒரு ரூபாய் கூட வரி செலுத்தத் தேவை இல்லை.
கடந்த 2019 - 20 நிதி ஆண்டில் மொத்தம் 6.77 கோடி வருமான வரிப் படிவங்கள் சமர்பிக்கப்பட்டு இருப்பதாக வருமான வரித் துறையின் வலை தளம் சொல்கிறது.
ஆனால் ஒட்டு மொத்த இந்தியாவில் சுமாராக 1.5 கோடி பேர் தான் வருமான வரி செலுத்துவதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆக 130 கோடி பேர் வாழும் நாட்டில் சுமாராக 1.5 கோடி பேர் தான் வரி செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
வருமான வரித் துறை
இந்த நிலையை மாற்ற வேண்டும், அரசுக்குத் தெரியாமல், முறைகேடாக வருமான வரி செலுத்தாமல் இருப்பவர்களை, முறையாக வரி செலுத்த வைக்க வேண்டும் என்கிற நோக்கில் வருமான வரித் துறை சில விஷயங்களை ஆலோசித்துக் கொண்டு இருக்கிறது. அது தான் பெரிய பணப் பரிமாற்றங்களைக் கண்காணிப்பது.
கண்காணிப்பு விளக்கம்
இது பழைய விஷயம் தானே என ஒதுக்கி விட முடியாது. இந்த முறை சாதாரண மக்களின் பணப் பரிமாற்றங்களையும் பர்சேஸ்களையும் கண்காணிக்க வருமான வரித் துறை ஆலோசித்துக் கொண்டு இருக்கிறார்கள். உதாரணமாக ஒரு நபர் 50,000 ரூபாய்க்கு டிவி வாங்குகிறார், 20,000 ரூபாய்க்கு ஹோட்டல்களில் செலவழித்து இருக்கிறார் என்றால், அவரிடம் ஏதோ ஒரு வகையில் பணம் வந்திருக்க வேண்டும்.
இது தான் லாஜிக்
ஆக, எந்த ஒரு தனி நபருக்கும், ஒரு இடத்தில் இருந்து வருமானம் வராமல், அவர்களால் செலவழிக்க முடியாது. எனவே செலவுகளை கண்காணித்து, வரி செலுத்தாதவர்களை கண்டு பிடித்துவிடலாம் என்கிற லாஜிக்கில் தான் சாமானிய மக்கள் செய்யும், பெரிய பணப் பரிமாற்றங்களைக் கண்காணிக்கப் போகிறார்களாம்.
எவை எல்லாம் கண்காணிப்புக்குள் ரூ.1 லட்சத்துக்கு மேல்
ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல், நகைகள், டிவி, குளிர் சாதனப் பெட்டி, வாசிங் மிஷின், ஏசி... போன்ற வொயிட் கூட்ஸ், ஓவியங்கள், கல்விக் கட்டணங்கள், டொனேஷன்கள், மின்சார வாரியத்துக்கு செலுத்தும் கட்டணம் போன்றவைகளுக்கு செலவழிக்கும் பணம், இனி வருமான வரித் துறையினர்களின் கண்காணிப்பு வளையத்துக்குள் வர வாய்ப்பு இருக்கிறதாம்.
எவை எல்லாம் கண்காணிப்புக்குள் 20,000 ரூபாய்க்கு மேல்
ஹோட்டல்களில் 20,000 ரூபாய்க்கு மேல் செலுத்தும் பேமெண்ட்கள்,
20,000 ரூபாய்க்கு மேல் சொத்து வரி செலுத்துவது,
50,000 ரூபாய்க்கு மேல் லைஃப் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்துவது,
20,000 ரூபாய்க்கு மேல் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்துவது... போன்றவைகள் எல்லாம் கூட வருமான வரித் துறையினரின் கண்காணிப்பின் கீழ் வரலாம் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
உஷார் மக்களே
எனவே இனி, மேலே சொன்ன விஷயங்களைச் செய்யும் போதும், பெரிய பணப் பரிவர்த்தனைகள் & பர்சேஸ்களைச் செய்யும் போதும் வங்கி வழியாக பேமெண்ட் செய்துவிடுங்கள். அப்படி இல்லை என்றால் முறையாக ரசீதுகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். நாளை வருமான வரித் துறையில் இருந்து ஏதாவது கேள்வி எழுப்பினால், ரசீதைக் காட்டிக் கொள்ளலாம்.