கோடிக்கணக்கான பிஎஃப் சந்தாதாரர்களுக்கு பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து பயன்படுத்தும் வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. விரைவில் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை யுபிஐ மற்றும் ஏடிஎம் வாயிலாக எடுக்கும் வசதி கொண்டு வரப்பட உள்ளது.
பிஎஃப் கணக்கை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் 2026 அண்மையில் நடைமுறைக்கு வந்தது. இதில் வேலையில் இருக்கும் காலத்தில் பிஎஃப் கணக்கிலிருந்து பகுதியளவு தொகையை எடுக்கும்போது, கணக்கில் உள்ள மொத்த தொகையில் குறைந்தது 25 சதவீத தொகையை கட்டாய குறைந்தபட்ச இருப்பாக விட்டுவிட வேண்டும் என்ற விதிமுறை குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய பிஎஃப் திட்டம் இதற்காக இரண்டு புதிய வரையறைகளை வெளியிட்டுள்ளது. முதலில் குறைந்தபட்ச இருப்பு (Minimum Balance), அதாவது பணத்தை எடுக்கும் தேதி வரை, ஊழியர் பங்களிப்பு, நிறுவன பங்களிப்பு மற்றும் அதற்கு திரண்டுள்ள வட்டி ஆகிய அனைத்தும் சேர்ந்த மொத்த இருப்பில் 25% தொகை குறைந்தபட்ச இருப்பு என வரையறுக்கப்படுகிறது.
மேலும் மொத்த கணக்கு இருப்பில் இருந்து மேற்கூறிய 25% குறைந்தபட்ச இருப்பை கழித்த பிறகு மீதமுள்ள 75% தொகையே தகுதியான உறுப்பினர் இருப்பு தொகை என அறிவிக்கப்பட்டுளது. உதாரணமாக 2 லட்சம் ரூபாய் பிஎஃப் கணக்கில் இருந்தால் அதில் 25% அதாவது 50,000 ரூபாயை நீங்கள் எடுக்க முடியாது மீதமுள்ள 1.5 லட்சத்தில் இருந்து தான் பணம் எடுக்க முடியும்.
ஒருவர் பணியில் இருக்கும் வரை, அவரது பி.எஃப் சேமிப்பில் நான்கில் ஒரு பங்கு அதாவது 25% கட்டாயம் குறைந்த பட்ச இருப்பாக லாக் செய்யப்பட்ட வேண்டும். இந்த தொகைக்கு தொடர்ந்து ஆண்டு வட்டி கிடைத்து கொண்டே இருக்கும்.இது வேலையில் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே பொருந்தும். வேலையை விட்டவர்கள், பணி ஓய்வு பெற்றவர்களுக்கான செட்டில்மெண்ட்களில் வழக்கம் போல 100% தொகை கிடைக்கும்.
எனவே நீங்கள் வேலையில் இருக்கிறீர்கள் திடீர் தேவைக்காக பிஎஃப் பணத்தை எடுக்கிறீர்கள் என வைத்து கொண்டால் உங்களின் தகுதியான உறுப்பினர் இருப்பில் அதாவது மொத்த தொகையில் 75% தொகை சில காரணங்களுக்காக முழுமையாக பெறலாம். மருத்துவச் சிகிச்சை , கல்வி , திருமணம் , வீடு/மனை வாங்குதல் அல்லது கட்டுதல் ஆகிய தேவைகளுக்கு முழு பணம் கிடைக்கும். மற்ற தேவைகளுக்கு 75% தொகையில் கணிசமான பணம் மட்டுமே கிடைக்கும்.
அதாவது மேற்கூறிய 2 லட்சம் ரூபாய் கணக்கில் 1.5 லட்சம் ரூபாயை மேலே கூறிய தேவைகளுக்கு முழுமையாக கேட்டு விண்ணப்பம் செய்யலாம். மற்ற தேவைகளுக்கு இந்த முழு பணமும் பிஎஃப்பில் இருந்து எடுக்க முடியாது ஒரு பகுதியளவு பணமே கிடைக்கும்.
முன்பெல்லாம் அவசர தேவைகளுக்காக தொடர்ந்து முன்பணம் எடுத்து, ஓய்வூதிய காலத்திற்கான சேமிப்பை ஊழியர்கள் கணிசமாக குறைத்துவிடும் நிலை இருந்தது. ஆனால், புதிய விதியின் மூலம், எப்போதும் 25% தொகை பாதுகாப்பாக பிஎஃப் கணக்கிலேயே இருக்கும். இதனால் ஓய்வுபெறும் காலம் வரை அந்த தொகை கூட்டு வட்டி மூலம் தொடர்ந்து வளர்ந்து, குறிப்பிட்ட ரொக்கம் கிடைப்பதை உறுதி செய்யும்.
எனவே பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க நினைத்தால் நீங்கள் வேலையில் இருக்கிறீர்கள் எனும் போது மொத்த இருப்பில் 75% தொகைக்கு மட்டுமே விண்ணப்பம் செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications

