ஒவ்வொரு நாளும் விலைவாசி உயர்வு விண்ணை எட்டி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் எதிர்காலத்திற்கு ஏற்ப உத்தரவாதத்துடன் கூடிய முதலீட்டு திட்டங்களில் சேமித்தால் பிற்காலத்தில் கடன் பெறாமல் வாழ்நாளை கழிக்க முடியும். அப்படி ஒரு திட்டத்தை போஸ்ட் ஆபீஸ் வழங்குகிறது. அந்த திட்டத்தின் பெயர் கிசான் விகாஸ் பத்ரா (KVP). இந்தத் திட்டம் ஒரே ஒருமுறை முதலீடு செய்யும் திட்டம் ஆகும். இதில் நீங்கள் போடும் முதலீடு அப்படியே டபுள் ஆகும். உதாரணமாக ரூ.10 லட்சத்தை முதலீடு செய்தால் ரூ.20 லட்சம் பெறலாம்.
போடும் பணம் அப்படியே இரட்டிப்பாக வேண்டும் என்பதுதான் இன்றைய முதலீட்டாளர்களின் விருப்பமாக இருக்கிறது. அதற்காக சிலர் ஆன்லைன் மோசடிகளில் போய் சிக்கிக் கொண்டு பணத்தை இழக்கின்றனர். அதற்கு பதிலாக இதுபோன்ற அரசாங்கத் திட்டங்களை தேர்வு செய்தால் பணம் பத்திரமாக இருப்பதோடு உத்தரவாதமான வருமானத்தையும் பெற முடியும்.

வட்டி விகிதம்: 2026-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 15 நிலவரப்படி கிசான் விகாஸ் பத்திரா திட்டத்திற்கு 7.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஆனால் இது போன்ற சிறுசேமிப்பு திட்டங்களுக்கு அரசு காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதத்தை மாற்றியமைக்கும். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்திற்கு மட்டும்தான் இந்த வட்டி விகிதம்.
அதன் பிறகு மாற்றம் செய்யப்பட்டால் அந்த வட்டி விகிதத்தின் அடிப்படையில் வட்டி வழங்கப்படும். சில நேரங்களில் தொடர்ந்து இரண்டு காலாண்டுகள், மூன்று காலாண்டுகள் வரை வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாமலும் இருந்திருக்கிறது. இந்த முறை வட்டி மாற்றப்படுமா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
முதிர்வு காலம்: ஒவ்வொரு சிறுசேமிப்பு திட்டத்திற்கும் சேமிப்பு காலம் இருக்கும். அதுவரை தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். ஆனால் இது மொத்த முதலீட்டு திட்டம். ஒரே ஒருமுறை முதலீடு செய்தால் போதுமானது. அதிலிருந்து 115 மாதங்கள் வரை உங்கள் முதலீட்டை எடுக்க முடியாது. அதாவது 9 ஆண்டுகள் 7 மாதங்கள் லாக்கின் காலம்.
அதன் பிறகு அசலையும் வட்டியையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். இந்தத் திட்டம் உங்கள் பணத்தை டபுளாக்கும் திட்டம் என்பதால் நீங்கள் எவ்வளவு தொகையை போட்டீர்களோ அதை அப்படியே டபுள் ஆக்கிப் பெறலாம். ரூ.10 லட்சம் போட்டிருந்தால் ரூ.20 லட்சமாகக் கிடைக்கும். ரூ.5 லட்சம் போட்டிருந்தால் ரூ.10 லட்சமாகக் கிடைக்கும்.
எங்கு கணக்கு தொடங்குவது?: தனி நபர்கள் இந்தியாவில் உள்ள எந்த ஒரு போஸ்ட் ஆபீஸ் கிளையில் வேண்டுமானாலும் கணக்கு தொடங்கலாம். ஒரு போஸ்ட் ஆபீஸ் கிளையிலிருந்து மற்றொரு போஸ்ட் ஆபீஸ் கிளைக்கு உங்கள் கணக்கை மாற்றம் செய்யலாம். அதேபோல போஸ்ட் ஆபீஸில் இருந்து வங்கிக்கும் மாற்றலாம். வங்கியில் இருந்து போஸ்ட் ஆபீஸிற்கும் மாற்றலாம்.
மக்கள் எந்த வித இடையூறும் இன்றி தங்களுடைய கணக்கை நிர்வகிக்க வேண்டும் என்பதற்காக அரசு இத்தகைய வசதியை வழங்குகிறது. அதேபோல ஒருவரின் பெயரில் இருக்கும் கணக்கை விதிகளுக்குட்பட்டு மற்றொருவரின் பெயருக்கு மாற்றம் செய்யலா.ம் நீங்கள் நாமினியை நியமிக்க விரும்பினாலும் நியமிக்கலாம்.
ஆனால் இந்த திட்டத்திற்கு வரி உண்டு என்பதை கருத்தில் கொள்ளவும். ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு இதுபோன்ற அரசாங்கத் திட்டங்கள் ஏதுவாக இருக்கும். ஓய்வு பெற்றவர்கள் நீண்ட காலத்திற்கு பணத் தேவை இல்லாதவர்கள்.. அதே நேரத்தில் அதிக வருமானம் பார்க்க விரும்புபவர்களும் கேவிபி திட்டத்தை தேர்வு செய்யலாம். உங்கள் நிதி இலக்குகளுக்கு ஏற்ப முதலீடு செய்ய உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.


Click it and Unblock the Notifications
