இந்திய தபால் துறையில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களில், மிக முக்கியமான திட்டம் கிசான் விகாஸ் பத்திரம்.
சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் லாபகரமான மற்றும் பாதுகாப்பான ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
ஆக அரசின் திட்டம், அதுவும் பாதுகாப்பான, கணிசமான வருவாய் தரக்கூடிய திட்டம், இதனை விட வேறு என்ன வேண்டும் முதலீட்டாளர்களுக்கு, சரி வாருங்கள் இந்த திட்டத்தினை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.
எப்போது அறிமுகம்?
விவசாயிகள் வங்கிகளை அணுகுவதில் நீடித்து வந்த சிக்கலைப் போக்கும் வகையில், 1988ல் இந்திய அஞ்சலக துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த கிசான் விகாஸ் பத்திரம். எனினும் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கவே, பின்னர் பிரபலமான ஒரு சேமிப்பு திட்டமாக உருவெடுத்தது. ஆனால் இதில் சில மோசடிகள் நடைபெறுவதாக இந்த திட்டம் 2011ம் ஆண்டில் தடை செய்யப்பட்டு, பின்னர் 2014ம் ஆண்டில் மீண்டும் பல பாதுகாப்பு அம்சங்களுடன் மீண்டும் கொண்டு வரப்பட்டது.
குறைந்தபட்ச தொகை
இந்த திட்டத்தின் மூலம் சேமிக்க விரும்புவர்கள் குறைந்தபட்சம், ஆயிரம் ரூபாய் முதல் முதலீடு செய்து கொள்ளலாம். அதிகபட்ச முதலீடு என இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் 50,000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால், உங்களது பான் கார்டு கொடுக்கப்படலாம். இதே 10 லட்சம் மற்றும் அதற்கு மேல் நீங்கள் முதலீடு செய்யும் போது உங்களது வருமானத்திற்கான ஆவணத்தினை (சம்பளம் சர்டிபிகேட்) கொடுக்க வேண்டும். நீங்கள் முதலீடு செய்யும் தொகையானது 124 மாதங்கள், அதாவது 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் கழித்து நீங்கள் செய்யப்படும் தொகை இரட்டிப்பாகிறது.
வயது தகுதி என்ன?
18 வயது பூர்த்தியடைந்த எந்த ஒரு இந்தியக் குடிமகனும் இந்த திட்டத்தில் சேமிக்கத் தகுதி பெற்றவர்கள் தான். இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய வங்கிக் கணக்கு தேவையில்லை. ஒரு குழந்தை அல்லது முதியவர்களுடனும் இணைந்தும் முதலீடு செய்யலாம். அப்படி இணையும் போது குழந்தையின் வயது, பாதுகாவலரின் பெயர் அல்லது பெற்றோர் பெயரை மறக்காமல் கொடுக்க வேண்டும். இந்த பத்திரத்தினை அறக்கட்டளைகள் கூட வாங்கலாம், ஆனால் என் ஆர் ஐகள் வாங்க முடியாது.
விண்ணப்பிப்பது எப்படி?
கிசான் விகாஸ் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் சென்று, தங்களது அடையாள மற்றும் முகவரி ஆவணங்களைச் சமர்ப்பித்துச் சேமிப்பைத் துவங்கலாம்.
மைனர் பெண் அல்லது சிறுவர்களின் பெயரில், அவரது பெற்றோர் மற்றும் காப்பாளர்கள் முதலீடு செய்யலாம்.
பாஸ்புக் உண்டு
கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் இணைந்தவுடன் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் சென்று அதற்கான பாஸ்புக்கை முதலீட்டாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பதாரர் எதிர்பாராத வகையில், மரணமடையும் பட்சத்தில், அவரால் பரிந்துரைக்கப்பட்ட நாமினி அல்லது மற்றவர்கள், முதிர்ச்சித் தொகையைப் பெறுவதற்கான வசதியும் உண்டு.
இடையில் பணத்தினை எடுத்துக் கொள்ளலாமா?
முதலீட்டாளர்கள் விரும்பினால் இந்த சேமிப்புத் திட்டத்தை மற்றொருவரின் பெயருக்கு மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு.
ஒருவேளை முன்கூட்டியே பணத்தைப் பெற விரும்பினாலும் பெற்றுக்கொள்ளலாம். அதற்கு இந்த, திட்டத்தில் சேர்ந்து 30 மாதங்கள் நிறைவு பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம். அதோடு நீங்கள் பணத்தைப் பெறும் நாள் வரை வட்டி கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.
வரி விலக்கு கிடையாது
கிசான் விகாஸ் பத்ரம் திடத்தில் முதலீடு செய்பவர்களுக்குத் தங்களது பங்களிப்பு மற்றும் லாபம் என இரண்டுக்கும் வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதில்லை. எனினும் முதிர்வு காலத்திற்கு பிறகு எடுக்கும்போது டிடிஎஸ் விலக்கு அளிக்கப்படுகிறது.
கிசான் திட்டத்தின் பயன்கள் என்னென்ன?
இந்த திட்டத்தில் சந்தை ஏற்ற இறக்கத்தினை பொருட்படுத்தாமல் கணிமான லாபம் உண்டு. இந்த திட்டமானது விவசாய சமூகத்தினை நோக்கத்தினை கொண்டுள்ளதால், மழைக்காலங்களி சேமிக்கப ஊக்குவிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் உள்ள மற்றொரு பெரிய நன்மை என்னவெனில் முதலீட்டுக்கு எந்த பங்கமும் கிடையாது. மாறாக உங்களது வருமானமும் கிடைக்கும்.
கடன் பெற முடியுமா?
பொதுவாக பல சேமிப்பு திட்டங்களில் அதனை பிணையாக வைத்து கடன் பெற முடியும். அதனை போல கிசான் விகாஸ் பத்திரத்தினை வைத்தும் வாங்க முடியுமா என்றால், நிச்சயம் முடியும். அதோடு இவ்வாறு பிணையாக வைத்து வாங்கும் கடன் களுக்கு வட்டி விகிதமும் சற்று குறைவாக இருக்கும்.
வட்டி விகிதம் எவ்வளவு?
இந்த சேமிப்பு திட்டத்திற்கும் மற்ற சேமிப்பு திட்டங்களை போலவே அரசு காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதத்தினை மாற்றியமைக்கிறது. கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் வட்டி விகிதம் 6.6%. நடப்பு காலாண்டிற்கான வட்டி விகிதம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.