இந்தியாவின் பொதுத்துறையை சேர்ந்த மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி, தனி நபர் சேமிப்பை மையப்படுத்தும் விதமாக எல்ஐசி பீமா ஜோதி திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டம் பங்கு சந்தையுடன் தொடர்பு இல்லா ஒரு திட்டமாகும். குறிப்பாக தனி நபர் சேமிப்பினை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த திட்டம் உள்ளது.
இந்த பீமா ஜோதி திட்டத்தினை பற்றிய முழு விவரங்களையும் பார்க்கலாம் வாருங்கள்.
இது ஒரு சேமிப்பு திட்டம்
LIC-யின் பீமா ஜோதி திட்டம், சேமிப்பினை மையப்படுத்தும் ஒரு இன்சூரன்ஸ் திட்டமாகும். இந்த திட்டம் பங்கு சந்தையுடன் இணையாத ஒரு சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தில் இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமெனில், ஆண்டுக்கு 1000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்றால், அதற்காக ஆண்டுக்கு உங்களுக்கு 50 ரூபாய் பலனாக கிடைக்கும்.
எப்படி இந்த பாலிசியினை வாங்கலாம்?
எல் ஐ சியின் இந்த பீமா ஜோதி திட்டத்தினை ஆன்லைனிலும் வாங்கிக் கொள்ளலாம். அல்லது முகவர்கள் அல்லது இடைத்தரர்கள் மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகை வரம்பு 1 லட்சம் ரூபாயாகும். அதிகபட்சம் வரம்பு எதுவும் இல்லை. இந்த பாலிசியின் முதிர்வு கால வரம்பு 15 மற்றும் 20 வருடங்களாகும்.
வயது தகுதி
இந்த திட்டத்தில் நுழைவு வயது குறைந்தபட்ச வயது 90 நாட்களாகும். அதிகபட்சம் 60 வயது வரை இணைந்து கொள்ளலாம். அதே போல பிரீமியம் தொகையையும் மாத மாதம் அல்லது காலண்டுக்கு ஒரு முறை, அரையாண்டுக்கு ஒரு முறை என உங்களுக்கு ஏற்றவாறு செலுத்திக் கொள்ளலாம்.
முதிர்வு வயது என்ன?
இந்த பாலிசியின் முதிர்வு வயது குறைந்தபட்சம் 18 வயதாகும். இதே அதிகபட்ச வயது 75 ஆண்டுகளாகும். எனினும் அதிகபட்ச நுழைவு வயது 60 வயது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல பிரீமியம் செலுத்த 15 ஆண்டுகள் அல்லது 20 ஆண்டு காலம் வரையில் தேர்வு செய்யலாம்.
இறப்பு நன்மை உண்டு
இந்த பாலிசியில் பாலிசிதாரர் இறந்தால் இன்சூரன்ஸ் தொகையுடன் உறுதி தொகையும் சேர்த்து நாமினிக்கு கொடுக்கப்படும். இந்த திட்டத்திற்கு கடன் பெறும் வசதியும் உண்டு. இதற்காக குறைந்தபட்சம் இரு வருடங்கள் பிரீமியம் செலுத்தி இருக்க வேண்டும். மொத்தத்தில் சேமிப்பினை கருத்தில் கொண்டு நீண்டகால நோக்கில் முதலீடு செய்பவர்களுக்கு இது ஏற்ற திட்டமாகும்.