இன்றைய காலகட்டத்தில் நமது குழந்தைகளில் எதிர்காலத்திற்காக, நாம் சேர்க்கும் சேமிப்பு என்பது எவ்வளவு அத்தியாவசியமானது என்று இந்த லாக்டவுனில் பலரும் புரிந்திருப்போம்.
ஆக எதற்கு நாம் முக்கியத்துவம் தருகிறோமோ இல்லையோ? நமது குழந்தைகளின் எதிர்காலம் கருதி நாம் எடுக்க வேண்டிய முடிவுகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
ஏனெனில் ஒரு குழந்தைக்கு கோடிக் கணக்கில் சொத்து சேர்க்க வேண்டும் என்பதனை விட, சரியான கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம் என்று அனைத்தும் சரியாக நடந்தாலே போதும் என்பது தான் பல குடும்பங்கங்களில் உள்ள கனவு.
என்னவெல்லாம் பார்க்க போகிறோம்
அப்படி குழந்தைகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு, உங்கள் குழந்தைகளுக்காக எந்த மாதரியான திட்டங்களில் முதலீடு செய்யலாம். எதில் எவ்வளவு ரிஸ்க்? என்ன லாபம்? வரி வரம்பு என அனைத்தையும் நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திட்டங்களாக பார்த்து வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது எல்ஐசி- யின் ஜீவன் தருண் பாலிசி.
ஆடம்பர செலவு
ஒரு குழந்தை பிறந்தவுடன் புதிய ஆடை, குழந்தைக்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கிக் குவிக்கிறோம். ஆனால் அதே அவர்களது எதிர்காலத்திற்காக அந்தளவுக்கு ஆர்வம் காட்டுகிறோமா என்றால் நிச்சயம் இல்லை. அந்த குழந்தை வளர்ந்து பள்ளிக்கு செல்லும் போதோ அல்லது கல்லூரிக்கு செல்லும் போதோ தான் அதன் வலியை நாம் உணர்கிறோம்.
கடனை சுமத்துகிறோம்
குழந்தைகளுக்காக நிறைய சம்பாதிக்க வேண்டும். இவ்வளவு செய்ய வேண்டும் என நினைக்கும் நாம், அவர்களின் எதிர்காலத்திற்காக கடனை சுமத்தி வைக்கிறோம். இதுதான் இன்று பல குடும்பங்களில் நடக்கும் நிகழ்வும் கூட. ஆக இனியாவது நம் குழந்தைகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு சரியான திட்டமிடலுடன் செயல்படுவோம்.
குழந்தைகளுக்கான எல்ஐசி ஜீவன் தருண் திட்டம்
எல்ஐசி ஜீவன் தருண் திட்டம் ஒரு வரையறுக்கப்பட்ட பிரீமியத் திட்டமாகும். இது உங்கள் குழந்தைகளுக்கு சேமிப்பையும் பாதுகாப்பையும் கொடுக்கின்றது. இதன் மூலம் உங்கள் குழந்தையில் எதிர்கால தேவைகளான கல்வி, திருமணம் உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கும் இது உதவும். அதோடு இந்த திட்டம் ஆயுள் பாதுகாப்ப்பினையும் வழங்குகிறது.
வயது தகுதி
இந்த பாலிசியின் நுழைவு வயது 90 நாட்கள் முதல் 12 ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்ளலாம். இந்த பாலிசிக்கான பிரீமியத்தினை வருடாந்திரம், அரை ஆண்டுக்கான பிரிமீயம், மாதாந்திரம் என பிரித்தும் கட்டிக் கொள்ளலாம். இந்த பாலிசி 25 வயது நிறைவடையும் போது முதிர்வு அடையும். இதில் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 75,000 ரூபாயாகும். அதிகபட்ச உச்ச வரம்பு என்பது இல்லை.
கடன் வசதியும் உண்டு
அதோடு குழந்தையின் கல்விச் செலவு தொகைக்காக 20 - 24 வயது வரை 5, 10, 15% அளவில் தொகையினை திரும்ப பெற முடியும். குழந்தையின் 25 வயதில் மொத்த முதிர்வு தொகையை திரும்ப பெறலாம். குழந்தையின் எட்டு வயது முதல் அல்லது பாலிசி தொடங்கிய இரண்டு ஆண்டுகள் முடிவில் கடன் பெறும் வசதியும் உண்டு.
வரி சலுகை உண்டா?
எல்ஐசி ஜீவன் தருண் பாலிசியானது மற்ற பாலிசிகளை போலவே வரிகளில் சலுகையை அளிக்கிறது. பிரீமியத்திற்கு வருமான வரி பிரிவு 80சியின் கீழ் விலக்கு உண்டு. அட்ஹொடு பாலிசி காலத்தின் முதிர்வு தொகையும் வரி இல்லாமல் வழங்கப்படுகிறது. இது பிரிவு 10டியின் கீழ் தீர்மானிக்கப்படும்.
பாலிசி ஒப்படைவு சலுகைகள்
பாலிசியை விருப்பத்திற்கு ஏற்ப ஒப்படைப்பதற்காக வசதிகள் உள்ளது. பாலிசி தொடங்கியதில் இருந்து, ஒரு ஆண்டிற்குள் பாலிசியானது ஒப்படைக்காவிட்டால், பாலிசிதாரர் செலுத்திய ஒற்றை பிரீமியத்தில் 70% திரும்ப கிடைக்க வாய்ப்புண்டு. இதே ஒரு வருட நிறைவுக்கு பிறகு ஒப்படைத்தால் செலுத்தப்பட்ட பிரீமியத்தில் 90% கிடைக்கும். இதே ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு பாலிசியினை ஒப்படைத்தால், கூடுதலான போனஸ் வசதியும் உண்டு.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
எல்ஐசி ஜீவன் தருண் பாலிசியில் இணைய முகவரி சான்றிதழ், மருத்துவ சான்றிதழ், கேஓய்சி ஆவணங்கள் என அனைத்தும் தேவை. இது குறித்த முழு விவரங்களையும் அறிய லிங்கினை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் குழந்தைகளின் நீண்டகால எதிர்கால தேவை என்பதில் கருத்தில் கொண்டு, சரியான நிதி ஆலோசகரின் ஆலைசனையுடன் இதுபோன்ற திட்டங்களில் இணையலாம். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக ஏதேனும் திட்டத்தில் இணைந்துள்ளீர்களா? உங்களது கருத்துகளை பதிவிடுங்கள்.