இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (LIC) பெற்றோர்கள் தங்கள் மகள்களின் திருமணத்திற்குத் தேவையான நிதியை உருவாக்கவும், அவர்களை நிதியியல் ரீதியாக நிலைநிறுத்துவதற்கான வாய்ப்பை ஒரு சூப்பரான திட்டத்தின் வாயிலாக வழங்குகிறது.
பெண் குழந்தைகளுக்கான கல்விக்கு எப்படிச் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் பயன்படுகிறதோ, அதேபோல் பெண் பிள்ளைகளுக்குத் திருமணத்திற்கான நிதியை உருவாக்க வேண்டும் என்பதற்காகத் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட பாலிசி தான் எல்ஐசி கன்யாதான் - LIC Kanyadaan
இந்தத் திட்டத்தின் முக்கியமான குறிக்கோள் என்னவென்றால் குறைந்த வருமானம் கொண்ட பெற்றோர்கள் தங்கள் மகள்களின் திருமணத்திற்கான பணத்தை உருவாக்க உதவுவதே.
ஆண் பிள்ளை - பெண் பிள்ளை
இன்றைய காலகட்டத்தில் ஆண் பிள்ளையாக இருந்தாலும் சரி, பெண் பிள்ளையாக இருந்தாலும் சரி அனைத்து செலவுகளும் சமமாகவே உள்ளது. இதேபோல் ஆண் பிள்ளைகளுக்கு எந்த விதத்திலும் பெண் பிள்ளைகள் குறைந்தவர்கள் இல்லை என்பதே உண்மை.
பெண் வீட்டார்
ஆனால் இன்னும் திருமணம் என்ற ஒன்றில் மட்டும் 100-க்கு 98 இடத்தில் பெண் வீட்டாருக்கு அதிகப்படியான செலவுகள் உருவாகி வருகிறது. இந்த நிலை விரைவில் மாறுமா என்றால் அது மக்கள் கையில் தான் உள்ளது. ஆனால் பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் கட்டாயம் திருமணத்திற்கான நிதியை உருவாக்கிக்கொள்ளுவது இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பான செயல்.
பெற்றோர்கள்
இந்த வகையில் பெண் பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர் அனைவருக்கும் திருமணத்திற்கான நிதியைச் சேர்க்க எல்ஐசி கன்யாதான் பாலிசியில் தினமும் 130 ரூபாய் முதலீடு செய்தால் 27 லட்சத்தை உருவாக்க முடியும். தினமும் 130 ரூபாய் என்றால் ஆண்டுக்கு 47,450 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.
எல்ஐசி கன்யாதான் பாலிசி
தினமும் 130 ரூபாய் வீதம் அதாவது ஆண்டுக்கு 47,450 ரூபாய் தொகையை எல்ஐசி கன்யாதான் பாலிசி திட்டத்தில் முதலீடு செய்தால், எல்ஐசி முதலீட்டாளருக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு தோராயமாக 27 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதை வைத்துப் பெண் குழந்தையின் திருமணத்தை மிகவும் பிரம்மாண்டமான முறையில் செய்திட முடியும்.
அடிப்படைத் தகுதிகள்
எல்ஐசி கன்யாதான் பாலிசி திட்டத்தில் முதலீடு செய்வோர் குறைந்தபட்சம் 30 வயதை தாண்டி இருக்க வேண்டும், முதலீட்டாளரின் மகளுக்குக் குறைந்தபட்ச வயது ஒரு வயதை தாண்டியிருக்க வேண்டும் என்பது அடிப்படை தகுதிகளாக உள்ளது.
13 முதல் 25 ஆண்டுகள்
எல்ஐசி கன்யாதான் பாலிசியை 13 முதல் 25 ஆண்டுகளுக்கு வாங்கலாம். காப்பீடு காலம் வரை பணத்தைப் பாதுகாப்பதற்கான விருப்பத்தை வழங்குகிறது, அதே நேரத்தில் பல ஆபத்து காரணங்களுக்கும் இத்திட்டம் பலன் அளிக்கிறது குறிப்பிடத்தக்கது.
தந்தை இறப்பு
எல்ஐசி கன்யாதான் பாலிசி திட்டத்தில் பதிவு செய்த பிறகு பாலிசிதாரர் அதாவது தந்தை இறந்துவிட்டால், எல்ஐசி பிரீமியம் செலவை ஈடுசெய்யும். அதாவது பெண் குழந்தையின் 21 வயதுக்குப் பிறகு, பாலிசிதாரரின் மகளுக்குக் கிட்டத்தட்ட 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரீமியம் தொகையைப் பெறுவார்.
முதிர்வு காலம் 65 ஆண்டுகள்
இந்தப் பாலிசியின் குறைந்தபட்ச கால அளவு 13 ஆண்டுகள், முதிர்வு காலம் 65 ஆண்டுகள். பதிவு செய்தவர் தற்செயலாக இறந்துவிட்டால், பாலிசிதாரரின் குடும்பத்திற்கு எல்ஐசி கூடுதலாக ரூ.5 லட்சத்தைச் செலுத்தும்.
முதலீடு, முதிர்வு தொகை
உறுதியளிக்கப்பட்ட ரூ.5 லட்சம் தொகைக்குக் காப்பீடு (கவரேஜ்) வாங்கினால், ஒருவர் 22 ஆண்டுகளுக்குப் பிரீமியத்தைச் செலுத்த வேண்டும், 22 ஆண்டுக்கு பின்பு 13.37 லட்சம் கிடைக்கும். இதுவே ரூ.10 லட்சத்திற்குக் கவரேஜ் வாங்கினால், அவர்கள் 25 ஆண்டுகளுக்குப் பிரீமியம் செலுத்த வேண்டும். 25 ஆண்டுகளுக்குப் பின் பாலிசிதாரர் 26.75 லட்சம் ரூபாய் பெறுவார்.