இன்றைய நாளில் நம்மில் பலருக்கும் உள்ள ஒரே ஆசை நாம் கஷ்டப்பட்டாலும், நம் குழந்தைகளாவது நன்றாக இருக்க வேண்டும் என்பது தான். அவர்களுக்கு நல்ல கல்வி, திருமணம் என பல கனவுகள் நிறைவேற்ற வேண்டியிருக்கும்.
அதிலும் பெண் குழந்தைகள் என்றால் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
அந்த வகையில் பெண் குழந்தைகளின் வாழ்க்கையை வளமாக்க எல்ஐசி ஒரு பாலிசியை வைத்துள்ளது. அது எல்ஐசி கன்யாதான் பாலிசி. அதெல்லாம் சரி, இந்த பாலிசியை யாரெல்லாம் எடுத்துக் கொள்ளலாம். மற்ற விவரங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
வயது வரம்பு எவ்வளவு?
எல்ஐசியின் கன்யாதான் பாலிசியின் காலம் 13 - 25 ஆண்டுகளாகும். இந்த பாலிசியினை எடுத்த பின் குறைந்தது மூன்று வருடங்களுக்காவது, நீங்கள் பிரீமியம் செலுத்த வேண்டும். கடைசி மூன்று ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டியதில்லை. இந்த பாலிசியினை 1 வயது குழந்தைக்கு கூட எடுத்துக் கொள்ளலாம். எனினும் குழந்தையின் தந்தைக்கு வயது 18 - 50 வயது இருக்க வேண்டும்.
பிரீமியம் கூட்டவோ குறைக்கவோ முடியும்
இந்த பாலிசியில் குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் க்ளைம் செய்து கொள்ளலாம். அதிகபட்ச தொகை என எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. பாலிசி காலம் உங்களது பெண் குழந்தையின் வயதுக்கு ஏற்ப குறைத்துக் கொள்ளலாம். அதோடு இந்த திட்டத்தில் உங்களது வருமானத்திற்கு ஏற்ப பிரீமியத்தினை கூட்டவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ முடியும். சில பாலிசிகளில் ஆரம்பத்தில் என்ன பிரீமியம் செலுத்துகிறீர்களோ, இறுதிவரையில் அதனையே செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் கன்யாதான் திட்டத்தில் உங்கள் கையில் தொகை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதிகரித்தும் செலுத்தலாம். இது எதிர்காலத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
வரி விலக்கு உண்டு
பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஏற்றதொரு பாலிசி என்ற நிலையில், இந்த பாலிசி 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதே போல் மெச்சூரிட்டி அல்லது இறப்பின் மூலம் கிடைக்கும் க்ளைமுக்கும் பிரிவு 10 (10D)யின் கீழ் வரி விலக்கு பெற முடியும்.
க்ளைம் விகிதம்
பாலிசிதாரர், பாலிசி எடுத்த பிறகு எதிர்பாராத விதமாக இறந்துவிட்டால், குடும்பத்தினர் மீத பிரீமியத்தினை செலுத்த வேண்டியதில்லை. அதோடு ஒவ்வொரு வருடமும் எல்ஐசி குடும்பத்தினருக்கு 1 லட்சம் ரூபாயினை கொடுக்கும். மேலும் பாலிசி முடிந்த பின்னர் நாமினிக்கு 27 லட்சம் ரூபாய் கொடுக்கும். ஆக இந்த காப்பீட்டுக் கொள்கை பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு மிக ஏற்றது.
இறப்பு நன்மைகள்
காப்பீட்டாளர் இறந்தால், அவரது குடும்பத்திற்கு உடனடியாக 5 லட்சம் ரூபாய் கிடைக்கும். இறப்பு நன்மைகள் ஆண்டு தவணையில் செலுத்தப்படும். பாலிசிதாரர் ஒரு நாளைக்கு 75 ரூபாய் வீதம் செலுத்தியிருந்தால், பாலிசிதாரர் விபத்தில் இறந்தால் ஒவ்வொரு ஆண்டும் போனஸின் பயனை பெறலாம். அதோடு 10 லட்சம் ரூபாய் பெற முடியும். அதோடு 25 வருடங்கள் பிறகு மாதாந்திர பிரீமியம் செலுத்தியதற்கு பிறகு 14 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
எவ்வளவு நன்மை கிடைக்கும்?
இதே நீங்கள் மாதம் 251 ரூபாய், 25 வருடம் செலுத்தியிருந்தால், 25 வருடங்களுக்கு பிறகு 51 லட்சம் ரூபாய் க்ளைம் செய்து கொள்ள முடியும். உங்கள் பெண் குழந்தைகளுக்கு திருமணமே முடிந்தாலும் அதன் பிறகும் பிரீமியத்தினை செலுத்தலாம். நீங்கள் தினசரி 75 ரூபாய் செலுத்துகிறீர்கள் என்றால், உங்கள் குழந்தையின் திருமணத்திற்காக 11 லட்சம் ரூபாய் பெற முடியும்.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
எல்ஐசியின் இந்த கன்யாதான் பாலிசியினை எடுக்க ஆதார் கார்டு, வருமான ஆதாரம், போட்டோ அடையாள அட்டை, முகவரி சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, காசோலை அல்லது டிடி, பெண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ், நிரப்பப்பட்ட படிவம் உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படும்.
‘பிணையமாக வைத்து கடன் வாங்கலாமா?
எல்ஐசியின் இந்த கன்யாதான் பாலிசியினை பிணையமாக வைத்து கடன் பெற முடியும். எனினும் தொடர்ந்து மூன்று வருடங்கள் பிரீமியம் செலுத்தியிருந்தால் மட்டுமே கடன் பெற முடியும்.
இந்த பாலிசி எடுத்த 13 மாதங்களுக்குள் தற்கொலை செய்து கொண்டால் க்ளைம் செய்ய முடியாது.