பொதுவாக இன்சூரன்ஸ் என்றாலே ஒதுங்கும் சிலரும், இந்த கொரோனா காலத்தில் இன்சூரன்ஸ் பற்றிய பயனை அறிந்திருப்பர். ஏனெனில் மனிதர்களின் வாழ்க்கையில் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. அப்படி நெருக்கடியான காலகட்டத்தில் உதவுவது இன்சூரன்ஸ் தான்.
இந்த இன்சூரன்ஸ்கள் ஹெல்த் இன்சூரன்ஸ், டிராவல் இன்சூரன்ஸ், வாகன இன்சூரன்ஸ், விபத்து காப்பீடு, வருவாய் ஈட்டும் வகையிலான காப்பீடு என பலவகையிலும் உள்ளன.
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது எல்ஐசி-யின் எல்ஐசி நிவேஷ் பிளஸ் என்ற காப்பீட்டுத் திட்டத்தை பற்றித் தான்.
எல்ஐசி நிவேஷ் பிளஸ் யூலிப் திட்டம்
இந்த எல்ஐசி நிவேஷ் பிளஸ் என்ற காப்பீட்டுத் திட்டம் ஒரு ஒற்றை பிரீமியம் தனிநபர் காப்பீட்டுத் திட்டமாகும். இது பாலிசிதாரர்களுக்கு பங்குச் சந்தையுடன் தொடர்புடைய முதலீட்டு வாய்ப்புகளிலிருந்து, வருவாய் ஈட்ட வழிவகை செய்கிறது. இத்திட்டத்தின் ஆரம்பத்திலேயே உறுதி செய்யப்பட்ட அடிப்படை தொகையை வாடிக்கையாளர்கள் தேர்வுசெய்ய முடியும்.
வயது வரம்பு என்ன?
இந்த பாலிசிக்கான நுழைவு வயது குறைந்தபட்ச வயது 90 நாட்கள், அதிகபட்ச வயது 35/70. எனினும் இத்திட்டத்துக்கான லாக் இன் வரம்பு 6 ஆண்டுகளாகும். இதே முதிர்வு வயது குறைந்தபட்சம் 18 வயதாகும். அதிகபட்ச வயது 50/85 வயதாகும். உங்களது பாலிசி காலம் 10 - 25 ஆண்டுகளாகும்.
குறைந்தபட்ச தொகை?
அதேபோல, குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 1 லட்சம் ரூபாயாகும். பாலிசி முடியும் வரை பாலிசிதாரர் உயிரோடு இருந்தால், அவருக்கு முதிர்வுத் தொகை முழுவதும் கிடைக்கும். அதேபோல வாடிக்கையாளர்கள் தங்களது பாலிசியைத் திரும்பப் பெற விரும்பினால் அதற்கான குறைந்தபட்ச காலம் 15 நாட்கள் ஆகும். நீங்கள் பாலிசியை நிறுவனத்திடமிருந்து நேரடியாக வாங்கினால் மட்டுமே 15 நாட்கள். இதே ஆன்லைனில் வாங்கினால் 30 நாட்கள்.
நாமினிக்கு கிடைக்குமா?
பாலிசி முதிர்ச்சியடையும் முன்பு பாலிசிதாரர் இறந்துவிட்டால் அவரால் பரிந்துரைக்கப்பட்டவருக்கு பாலிசி தொகை கிடைக்கும். ஒற்றை பிரீமியத்தின் 1.25 மடங்கு அல்லது 10 மடங்கு உறுதிபடுத்தப்பட்ட தொகை வாடிக்கையாளர்களுக்கு இத்திட்டத்தில் கிடைக்கும்.
இந்த சலுகை உண்டு?
பாலிசிதாரர்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலுத்தலாம். பாலிசி எடுக்கப்பட்டு 5 ஆண்டுகள் கழிந்த பின்னர் யூனிட் ஃபண்ட் வேல்யூ முறையில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட தொகையை திரும்பப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பாலிசியின் தொகையை ஆண்டுக்கு அதிகபட்சமாக நான்கு முறை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். ஆக இதன் மூலம் திரும்ப் பெறும் தொகையும் அதிகரிக்கும்.