இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-யில் மார்ச் 2021ல் பாலிசி விற்பனை யாரும் எதிர்பார்காத வகையில் சுமார் 299 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் குறிப்பாக மார்ச் மாதத்தில் அதிகளவிலான பாலிசிகள் விற்பனையில் செய்யப்பட்டு உள்ளது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பயத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். இதேவேளையில் நிதியாண்டின் இறுதியில் வருமான வரியை சேமிக்க அதிகளவிலானோர் எல்ஐசி பாலிசிகளை தேர்வு செய்திருக்கலாம்.
இந்நிலையில் எல்ஐசி நிறுவனம் மார்ச் 2020 முதல் மார்ச் 2021 வரையிலான காலகட்டத்தில் சுமார் 2.1 கோடி பாலிசிகளை விற்பனை செய்துள்ளது. இதில் 47 லட்சம் பாலிசிகள் மார்ச் 2021 ஒரு மாதத்தில் மட்டும் விற்பனை செய்து அசத்தியுள்ளது.
299 சதவீதம் உயர்வு
2020 மார்ச் மாதத்தில் கொரோனா தொற்றுக் காரணமாக எல்ஐசி மிகவும் மோசமான வர்த்தகத்தைப் பெற்ற நிலையில் 2021 மார்ச் மாதத்தில் கடந்த ஆண்டை விடவும் 299 சதவீத அதிகப் பாலிசிகளை விற்பனை செய்துள்ளது.
2020 வர்த்தகப் பாதிப்பு
2021ஆம் நிதியாண்டில் கொரோனா தொற்று காரணத்தால் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. ஆனால் 2வது அரையாண்டில் சிறப்பான வர்த்தகத்தைப் பெற்று அசத்தியுள்ளது எல்ஐசி நிறுவனம்.
ப்ரீமியம் வசூலில் சாதனை
இதேபோல் ப்ரீமியம் வசூல் அளவீட்டிலும் 2021ஆம் நிதியாண்டில் சாதனை படைத்துள்ளது. மார்ச் 31 உடன் முடிந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 56,406 கோடி ரூபாய் அளவிலான ப்ரீமியம் தொகையை வசூல் செய்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. இது 2020ஆம் நிதியாண்டை விடவும் 10.1 சதவீதம் அதிகமாகும்.
75 சதவீத வர்த்தக ஆதிக்கம்
மேலும் மொத்த இன்சூரன்ஸ் சந்தையில் வர்த்தகத்தில் எல்ஜிசி மார்ச் மாதம் 81 சதவீத வர்த்தகத்தையும், 2021 நிதியாண்டில் 75 சதவீத வர்த்தகத்தையும் கைப்பற்றி இந்திய இன்சூரன்ஸ் துறையில் ஆதிக்கம் செலுத்துகிறது.