இன்றைய காலத்தில் பலருக்கும் உள்ள கேள்வி கடனா? அல்லது முதலீடுக்கு முன்னுரிமை கொடுக்கலாமா? ஏற்கனவே இருக்கும் கடனை முதலீட்டில் இருந்து எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.
ஆக முதலீட்டு ரீதியிலாக நீண்டகால நோக்கில் இருக்கும் முதலீட்டினை எடுத்து, கடனை அடைக்கலாமா? எது பாதுகாப்பானது? எது சரியானது என்பதை தான் இன்று நாம் பார்க்கவிருக்கிறோம்.
இந்தியாவில் இன்றைய காலகட்டத்தில் வீட்டுக் கடன் உள்பட பல கடனுக்கும் வட்டி விகிதம் என்பது வரலாறு காணாத அளவு சரிவில் உள்ளது. இது வீட்டுக் கடன் வாங்க சரியான நேரம் என ஏற்கனவே சில கட்டுரைகளில் பார்த்துள்ளோம்.
சிறிய ஒப்பீடு
இதே சமயம் வங்கி பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் குறைந்துள்ளது. இன்று சொல்லப்போனால் நீண்டகால நோக்கில் என்றாலும் கூட 5 - 6% என்ற நிலையில் தான் இருக்கின்றது. எனினும் சமீப வருடங்களாக மியூச்சுவல் ஃபண்டுகளில் வருமானம் என்பது, மிக நல்ல வருமானமாக இருந்து வருகின்றது.
வருமானம் அதிகம்
இதன் மூலம் வருமானம் சுமார் வருடத்திற்கு 10% என்று எடுத்துக் கொண்டாலும், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 7% என வைத்துக் கொள்ளலாம். ஆக கடனை விட முதலீட்டில் தான் வருமானம் அதிகம். எனவே நிதி ரீதியிலாக இரண்டையும் தொடரலாம் என்பது நிதி ஆலோசகர்களின் கருத்தாக உள்ளது. மேலும் கடன் உள்ளது என்றாலே நாமும் கொஞ்சம் உந்துதலாக வேலை செய்வோம். விரைவில் கடனை அடைக்க வேண்டும் என்ற உத்வேகம் இருக்கும்.
கடனுக்கான வட்டி குறைவு
மொத்தத்தில் கடனுக்கான வட்டி விகிதம் குறைவு. அதே வேளையில் உங்களது முதலீடை தொடர முடியும் என்ற நிலையில் அதனை தொடரலாம். ஏனெனில் கடனை விட மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீடுகளில் வருமானம் அதிகம். இது ஒரு முதலீட்டு ஒழுக்கத்தினை ஊக்குவிக்கும். எனினும் வயதானவர்கள் தங்களது ஓய்வூதியத்திற்கு பிறகு நிம்மதியாக இருக்கலாம் என நினைப்பவர்கள் கடனை அடைக்கலாம். முதலீட்டினை பற்றி பிறகு யோசிக்கலாம்.
இரண்டையும் தொடரலாம்
இதே 30 - 40 வயதில் உள்ளவர்கள் முதலீட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். ஏனெனில் ஒரு புறம் கடன் அடைப்பட்டுக் கொண்டே வரும். அதே சமயம் உங்களது சேமிப்பு பெருகி வரும். ஆக உங்களது வருமானம் அதிகரிக்கும்போது அவசர காலங்களில் அது உதவும். இது நிதி ரீதியாக உங்களுக்கு ஒரு பிளெக்ஸிபிளிட்டியை அதிகரிக்கும். மொத்தத்தில் உங்களுக்கு மேலும் ஒரு உத்வேகத்தினை அளிக்கும்.
மிக அவசியம்
ஆக இளைய தலைமுறையினர் உங்களது கடன் முதலீடு இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். இதில் இன்னும் வரிச்சலுகைகள் என்பதும் கூடுதலாக கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. ஆக லோனை தொடர்ந்து கொண்டு, எஸ்ஐபி என்ற முதலீடுகளை தொடர முடியும் பட்சத்தில் தொடரலாம்.
எனினும் வருமானம் கடனுக்கு தான் சரியாக இருக்கும்பட்சத்தில் அந்த கடனை அடைப்பது தான் புத்திசாலித்தனமாக இருக்கும்.
அவசியம்
மொத்தத்தில் ஒருவர் தனது இளமைக் காலத்தில் தங்களது வருமானத்தில் சிறு தொகையாவது ஒதுக்க வேண்டும். இது பின்னாளில் பெரும் அளவில் கைகொடுக்கும். அதே சமயம் கடன் இல்லாமல் வாழ வேண்டும் என்பது தான் பலரின் எண்ணமாக இருந்தாலும், சில கடன்களை வாங்காமல் தவிர்க்க முடியாது. உதாரணத்திற்கு வீட்டுக் கடன் என்பது அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.