இன்றைய சூழலில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஹோம் லோன் பர்சனல் லோன், கார் லோன் இப்படி ஏதாவது ஒரு லோனை வாங்கி விடுகின்றனர். லோன் வாங்குவதற்கு எப்படி வங்கிகள் விதிமுறைகளை வகுத்திருக்கிறதோ? அதேபோல திருப்பி செலுத்துவதற்கும் சில விதிமுறைகள் இருக்கிறது. அதை கண்டிப்பாக பின்பற்றியே ஆக வேண்டும். மீறும் பட்சத்தில் அபராதம் மற்றும் ஏல நடவடிக்கைகளுக்கு வழி வகுக்கலாம்.
இதில் மாத சம்பளக்காரர்கள் அதிகமாக பர்சனல் லோன் பெறுகின்றனர். வங்கிகளும் பரிவர்த்தனை விபரங்களை எல்லாம் கருத்தில் கொண்டு பர்சனல் லோன் வழங்கி வருகின்றன. இப்படி வாங்கும் சிலர் ஒரு சில EMI-களை தவற விட்டுவிடுகின்றனர். தவற விடுவதால் என்ன பிரச்சனை ஏற்படும் என்பதை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஒன்று அல்லது இரண்டு ஈஎம்ஐ தவறவிடுவது வழக்கமாக எல்லோருக்கும் நடக்கும் விஷயம். சில நேரங்களில் சம்பளம் தாமதமாக வரலாம் அல்லது உரிய நேரத்தில் வரவேண்டிய பணம் வராமல் போகலாம். ஆட்டோ பேமெண்ட் ஆப்ஷனை பயன்படுத்தி ஈஎம்ஐ செலுத்துபவர்கள் அந்த நேரத்தில் வங்கியில் பணம் போடாமல் இருந்திருக்கலாம். இப்படி பல காரணங்களால் ஈஎம்ஐ தேதியை தவற விட்டிருப்பார்கள். இந்த காரணங்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும்.. இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா?
அபராத கட்டணம்: வங்கிகள் அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்கள் என எதில் நீங்கள் பர்சனல் லோன் வாங்கி இருந்தாலும் சரி ஒரு ஈஎம்ஐ தவறவிட்டாலும் அதற்கு அபராதம், வட்டி மற்றும் தாமத கட்டணம் ஆகியவற்றையெல்லாம் சேர்த்து தான் செலுத்த வேண்டும். நிலுவையில் இருக்கும் தொகை வரைக்கும் சரியாக ஈஎம்ஐ செலுத்தவில்லை என்றால் அது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரையும் பாதிக்கும். இதனால் பிற்காலத்தில் கடன் வாங்க முடியாமல் போகலாம்.
1 ஈஎம்ஐ தானே அதை மறுமாதம் செலுத்திக் கொள்ளலாம் என்று நீங்கள் நினைப்பதால் பல பிரச்சனைகள் ஏற்படும். பெரும்பாலான வங்கிகள் உரிய தேதிக்குள் ஈஎம்ஐ செலுத்தவில்லை என்றால் அதற்கு தாமதக் கட்டணம் மற்றும் அபராதம் ஆகியவற்றை சேர்த்து விதிக்கின்றன. இந்த கட்டணம் நீங்கள் கடன் வாங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தை பொறுத்தது.
நீங்கள் கடன் பெறும்போது ஒரு அக்ரீமெண்டில் கையெழுத்துப் போட்டிருப்பீர்கள். அதில் ஈஎம்ஐ தவறவிட்டால் எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்ற விவரங்கள் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும்.
வங்கியின் அழைப்பை தவறாமல் எடுங்கள்: சில சூழ்நிலையின் காரணமாக நீங்கள் ஈஎம்ஐ செலுத்தாமல் இருக்கும் பட்சத்தில் வங்கியில் இருந்து தொடர்பு கொள்வார்கள் அல்லது எஸ்எம்எஸ் வரும். இப்படி உங்களுக்கும் அழைப்புகள் வந்தால்.. அதை தவிர்க்காமல் எடுத்து உங்களுடைய நிலைமையை கூறுங்கள்.
தவணையை தள்ளிப் போடாதீர்கள்: EMI-ஐ ஒரு மாதம் தவறவிட்டிருந்தாலும் பரவாயில்லை. உரிய தேதிக்குப் பிறகு இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் செலுத்த முயற்சி செய்யுங்கள். அதை அடுத்த மாத தவணையோடு சேர்த்து செலுத்துவது பிரச்சனையை ஏற்படுத்தும். மறு மாதம் நீங்கள் இரண்டு ஈஎம்ஐ-களை ஒரே நேரத்தில் செலுத்த வேண்டி வரும். இது உங்களுடைய மாதாந்திர பட்ஜெட்டில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
ஈஎம்ஐ தவறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?: முதலாவதாக ரிமைண்டர் அமைத்துக் கொள்ளலாம். பின்னர் ஆட்டோமேட்டிக் பேமெண்ட் ஆப்ஷனை ஆன் செய்திருந்தால் அந்த நேரத்தில் உங்கள் அக்கவுண்டில் பணம் இருக்கிறதா என்பதையும் ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளலாம். சில நேரங்களில் தொழில்நுட்ப கோளாறாலும் இந்த பிரச்சனை ஏற்படும்.
வங்கியின் அதிகாரப்பூர்வ ஆப்-பை அவ்வப்போது அப்டேட் செய்வார்கள். இதையும் கண்காணித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பழைய வெர்ஷனை பயன்படுத்தி வந்தால் அந்த நேரத்திலும் இது போன்ற பிரச்சினை ஏற்படும்.
எமர்ஜென்சி ஃபண்ட்: பெரும்பாலானோர் அவசர தேவைக்காக ஈஎம்ஐ தேதியை தவற விட்டுவிடுகின்றனர். இது நடக்காமல் இருக்க இரண்டு முதல் மூன்று மாத ஈஎம்ஐ தொகையை எமர்ஜென்சி ஃபண்டாக எடுத்து வைப்பது நல்லது!


Click it and Unblock the Notifications
