டாடா, பிர்லா போன்ற பரம்பரை பணக்காரர்கள் மட்டுமே இந்திய வியாபாரங்களில் கோலோச்சி இருந்த காலம் அது. நம்மைப் போன்ற சராசரி பின் புலத்துடன், வெளிநாடுகளில் பெட்ரோல் கேன் டெலிவரி செய்யும் வேலை பார்த்து விட்டு, இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்தவர் தான் திருபாய் அம்பானி.
100 ஆண்டுகளில் டாடா பிர்லா போன்ற பரம்பரை பணக்காரர்கள் கட்டிய வியாபார சாம்ராஜ்யத்தை சுமார் 25 ஆண்டுகளில் கட்டி எழுப்பியவர். இந்திய இளம் சூடான ரத்தங்களை வியாபாரம் பக்கம் தட்டி திசை திருப்பியவர் திருபாய் அம்பானி.
இன்று பாலியஸ்டர் வியாபாரம் தொடங்கியதில் இருந்து இன்று ஜியோவை வைத்து மற்றவர்களை அலற விடுவது வரை எல்லாமே ரிலையன்ஸுக்கே உரித்தான தனி ஸ்டைல். 2002-ல் திருபாய் அம்பானி மறைவுக்கு பின், முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் பிருந்து வியாபாரம் செய்த கதை எல்லாம் நமக்கு நன்றாகவே தெரியும்.
கோடீஸ்வரர் வாய்ப்பு
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களையும் பணக்காரர்கள் ஆக்க, ஒரு பொன்னான வாய்ப்பு கொடுத்தது. அது எத்தனை பேர் பயன்படுத்திக் கொண்டோம். பயன்படுத்திக் கொண்டது இருக்கட்டும். எத்தனை பேருக்கு ரிலையன்ஸ் நிறுவனம் கொடுத்த அந்த பொன்னான வாய்ப்பு பற்றித் தெரியும்..?
என்ன வாய்ப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவன பங்குகள் தான் அந்த பலேடிய வாய்ப்பு. (பலேடியம் தங்கத்தை விட விலை உயர்ந்தது) பின்னோக்கிப் போனால், கடந்த ஜூலை 05, 2002-ல் இருந்து தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை விவரங்கள் நமக்கு கிடைக்கின்றன. ஆக ஜூலை 05, 2002 அன்று, ஒரு பங்கு விலை 53 ரூபாய்க்கு 10,000 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளை வாங்கி இருந்தால் இன்று நாமும் ஒரு கோடீஸ்வரன் ஆகி இருக்கலாம்.
என்ன லாபம்
10,000 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளை 53 ரூபாய்க்கு, ஜூலை 2002-ல் வாங்குகிறோம் என்றால், சுமாராக 5,30,000 ரூபாய் செலவாகி இருக்கும். அதை 1,564 ரூபாய்க்கு விற்று இருந்தால், இன்று நம் கையில் 1.51 கோடி ரூபாய் இருந்து இருக்கும். 2,850 சதவிகிதம் லாபம். நம்மில் எத்தனை பேர் செய்தோம். சரி இந்த வாய்ப்பை தவற விட்டவர்களுக்கு மற்றும் ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்தது.
2008 ரெசசன்
2008-ல் உலக பொருளாதார சிக்கல் காரணமாக, இந்தியாவில் பெரும்பாலான பங்கு விலை மண்ணைக் கவ்வின. அதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளும் ஒன்று. 2008-ம் ஆண்டு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 780 ரூபாய் என ஒரு பெரிய உச்சத்தைத் தொட்டது. அடுத்த சில வாரங்களில் 255 ரூபாயைத் தொட்டது. அப்போது வாங்கி இருந்தால் கூட 1,564 ரூபாய்க்கு விற்று 513% லாபம் பார்த்து இருக்கலாம்.
2012-ல் வாய்ப்பு
மீண்டும் 15 மே 2012-ல் ஒரு இறக்கத்தைத் தொட்டது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். அப்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை, 338 ரூபாயைத் தொட்டது. அப்போது வாங்கி, 1,564 ரூபாய்க்கு விற்று இருந்தால் கூட 362 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம். இந்த வாய்ப்பையும் தவற விட்டு விட்டீர்களா..? இதோ இன்னொரு வாய்ப்பு.
2015-ல் அந்த வாய்ப்பு
மீண்டும் சில பல காரணங்களால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலை, கடந்த 30 மார்ச் 2015 அன்று 405 ரூபாய்க்கு வந்தது. அன்று வாங்கி, 1,564 ரூபாய்க்கு விற்று இருந்தால் 286 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம். அதையும் செய்ய தவறி இருக்கிறோம், நம்மை கட்டமைத்த கடவுளே கூட மன்னித்து இன்னொரு வாய்ப்பு கொடுக்க மாட்டார். ஆனால் ரிலையன்ஸ் வாய்ப்பு கொடுத்தது. ஆம்.. இனியும் கொடுக்கும்.
2016-ல் நறுக்கென ஒரு வாய்ப்பு
இந்த நறுக் வாய்ப்புக்குக் காரணம் ஜியோ. எண்ணெய் நிறுவனமாகவே அடையாளப்படுத்தப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனம், தன்னை ஒரு டெலிகாம் நிறுவனமாக மாற்றிக் கொண்ட காலம் இது. இப்போதாவது உஷாராகி, இந்த நிறுவன பங்குகளை வாங்கி இருக்கலாம். ஜியோ தொடங்கப்பட்ட அடுத்த நாள், செப்டம்பர் 06, 2019 அன்று கண்ணை மூடிக் கொண்டு 510 ரூபாய்க்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்கிப் போட்டு இருக்கலாம். அதை 1,564 ரூபாய்க்கு விற்று இருந்தால் 206 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம்.
100% லாபம்
கடந்த 30 மார்ச் 2017-ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலை 634-க்கு வந்தது. அப்போது பங்குகளை வாங்கிக் குவித்து விட்டு, 1,564 ரூபாய்க்கு விற்று இருந்தால் கூட 146 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம். அட என்னங்க எல்லாத்துக்கு வருஷக் கணக்கா காத்திருக்கணுமா..? என்று கேட்கிறீர்களா..? இதோ மாதக் கணக்கிலும் முரட்டு லாபம் கொடுத்து இருக்கிறது ரிலையன்ஸ்.
சமீபத்தில்
மேலே சொன்னவைகளுக்கு எல்லாம் வருடக் கணக்கில் காத்திருக்க வேண்டும். இந்த 01 ஜனவரி 2019 அன்று வந்த விலைக்கு சுமாராக 1,121 ரூபாய்க்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்கி இருந்தால் இப்போது 39 % லாபம். அதே போல கடந்த 08 ஆகஸ்ட் 2019-ல் 1,151 ரூபாய்க்கு வாங்கி இருந்தால் 35 % லாபம். அவ்வளவு ஏன் கடந்த செப்டம்பர் 19, 2019 அன்று 1,178 ரூபாய்க்கு வாங்கி 1,564-க்கு விற்று இருந்தால் கூட 32 % லாபம் பார்த்து இருக்கலாம்.
முதலீடு செய்யுங்கள்
இத்தனை பொன்னான வாய்ப்புகளைக் கொடுத்த ரிலையன்ஸுக்கு நன்றி சொல்லக் கூடாதா..? இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த வாய்ப்புகளை தவற விட்டவர்கள், புலம்ப வேண்டாம்...! இது போல பங்குச் சந்தையில் நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டே தான் இருக்கும். அதை கண்டு பிடித்து முதலீடு செய்ய வேண்டியது மட்டுமே நம் வேலை.
வாழ்த்துக்கள்
இன்னும் நிறைய படியுங்கள். இன்னும் நல்ல தரமான பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கொடுத்தது போல லாபங்களைச் சம்பாதியுங்கள். பணம் பல பிரச்னைகளுக்கு அருமருந்து. எனவே மக்களே நல்ல பங்கை தேர்வு செய்து முதலீடு செய்யுங்கள்..! முரட்டு லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.