கோடீஸ்வரனாக வேண்டும் என்கிற ஆசை இல்லாத இந்தியர்கள் உண்டா? பணம் இருந்தால் நம் நடை, உடை, பாவனை தொடங்கி உண்ணும் உணவு வரை எல்லாமே மாறுமே..!
அப்படிப்பட்ட பணத்தை சம்பாதிக்க அம்பானி நமக்கு ஒரு அரிய வாய்ப்பு கொடுத்தார் தெரியுமா..? அம்பானி நமக்கு வாய்ப்பு கொடுத்தாரா என்று கேட்கிறீர்களா. ஆம்
நம்மைப் போன்ற சாதாரண மக்களும் கோடீஸ்வரனாக வாய்ப்பு கொடுத்தார். அதைத் தான் இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.
சமீபத்தைய உச்சம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள், 19 ஜூன் 2020 அன்று தன் வாழ்நாள் உச்சமாக 1,788 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகி இருக்கிறது. 1,765 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. எனவே இந்திய பங்குச் சந்தையில் முதல் முறையாக, ஒரு பங்கின் சந்தை மதிப்பு 12 லட்சம் கோடி ரூபாயைத் தொடுவது இதுவே முதல் முறை. இப்படி பல விஷயங்களைச் செய்திருக்கும் ரிலையன்ஸ் பங்கு தான் நமக்கு கோடீஸ்வரனாக வாய்ப்பு கொடுத்து இருக்கிறது.
என்ன வாய்ப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவன பங்குகள் தான் அந்த சூப்பர் வாய்ப்பு. பின்னோக்கிப் போனால், கடந்த ஜூலை 05, 2002-ல் இருந்து தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை விவரங்கள் நமக்கு கிடைக்கின்றன. ஆக ஜூலை 05, 2002 அன்று, ஒரு பங்கு விலை 53 ரூபாய்க்கு 5,850 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளை சுமாராக 3,10,050 ரூபாய்க்கு வாங்கி இருந்தால் இன்று நாமும் ஒரு கோடீஸ்வரன் ஆகி இருக்கலாம்.
எப்படி கோடீஸ்வரன் ஆகி இருப்போம்
5,850 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளை 53 ரூபாய்க்கு, ஜூலை 2002-ல் வாங்குகிறோம் என்றால், சுமாராக 3,10,050 ரூபாய் செலவாகி இருக்கும். அதை 1,765 ரூபாய்க்கு 19 ஜூன் 2020 அன்று விற்று இருந்தால், இன்று நம் கையில் 1 கோடி ரூபாய் இருந்து இருக்கும். இது 3,230 சதவிகிதம் லாபம். நம்மில் எத்தனை பேர் செய்தோம். சரி இந்த வாய்ப்பை தவற விட்டவர்களுக்கு மற்றும் ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்தது.
நிதி நெருக்கடி 2008
2008-ல் உலக பொருளாதாரமே நிதிப் பிரச்சனையில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது. அதன் காரணமாக, இந்தியாவில் பெரும்பாலான பங்கு விலை மண்ணைக் கவ்வின. அதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளும் ஒன்று. 2008-ம் ஆண்டு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 780 ரூபாய் என ஒரு பெரிய உச்சத்தைத் தொட்டது. அடுத்த சில வாரங்களில் 255 ரூபாயைத் தொட்டது. அப்போது வாங்கி இருந்தால் கூட 1,765 ரூபாய்க்கு விற்று 592 % லாபம் பார்த்து இருக்கலாம்.
ஒரு செம வாய்ப்பு 2012
மீண்டும் 15 மே 2012-ல் ஒரு இறக்கத்தைத் தொட்டது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். அப்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை, 338 ரூபாயைத் தொட்டது. அப்போது வாங்கி, 1,765 ரூபாய்க்கு விற்று இருந்தால் கூட 422 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம். இந்த வாய்ப்பையும் தவற விட்டு விட்டீர்களா..? இதோ இன்னொரு அரிய வாய்ப்பு.
3 ஆண்டுகளுக்குப் பின் 2015-ல் ஒரு வாய்ப்பு
மீண்டும் சில பல காரணங்களால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலை, கடந்த 30 மார்ச் 2015 அன்று 405 ரூபாய்க்கு வந்தது. அன்று வாங்கி, 1,765 ரூபாய்க்கு விற்று இருந்தால் 335 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம். அதையும் செய்ய தவறி இருக்கிறோம், நம்மை கட்டமைத்த கடவுளே கூட மன்னித்து இன்னொரு வாய்ப்பு கொடுக்க மாட்டார். ஆனால் ரிலையன்ஸ் வாய்ப்பு கொடுத்தது. ஆம். இனியும் கொடுக்கும்.
ஜியோவின் தெறி வாய்ப்பு 2016
இந்த நறுக் வாய்ப்புக்குக் காரணம் ஜியோ. எண்ணெய் நிறுவனமாகவே அடையாளப்படுத்தப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனம், தன்னை ஒரு டெலிகாம் நிறுவனமாக மாற்றிக் கொண்ட காலம் இது. இப்போதாவது உஷாராகி, இந்த நிறுவன பங்குகளை வாங்கி இருக்கலாம். ஜியோ தொடங்கப்பட்ட அடுத்த நாள், செப்டம்பர் 06, 2019 அன்று கண்ணை மூடிக் கொண்டு 510 ரூபாய்க்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்கிப் போட்டு இருக்கலாம். அதை 1,765 ரூபாய்க்கு விற்று இருந்தால் 246 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம். ஜியோவுக்கு மனமாற நன்றி சொல்லி இருக்கலாம்.
மார்ச் 2017-ல் ஒரு சான்ஸ்
கடந்த 30 மார்ச் 2017-ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலை 634-க்கு வந்தது. அப்போது பங்குகளை வாங்கிக் குவித்து விட்டு, 1,765 ரூபாய்க்கு விற்று இருந்தால் கூட 178 சதவிகிதம் லாபம் பார்த்து இருக்கலாம். அட என்னங்க எல்லாத்துக்கு வருஷக் கணக்கா காத்திருக்கணுமா..? என்று கேட்கிறீர்களா..? இதோ மாதக் கணக்கிலும் முரட்டு லாபம் கொடுத்து இருக்கிறது ரிலையன்ஸ்.
2019-ல் கிடைத்த வாய்ப்புகள்
மேலே சொன்னவைகளுக்கு எல்லாம் வருடக் கணக்கில் காத்திருக்க வேண்டும். இந்த 01 ஜனவரி 2019 அன்று வந்த விலைக்கு சுமாராக 1,121 ரூபாய்க்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்கி இருந்தால் இப்போது 57 % லாபம். அதே போல கடந்த 08 ஆகஸ்ட் 2019-ல் 1,151 ரூபாய்க்கு வாங்கி இருந்தால் 53 % லாபம். அவ்வளவு ஏன் கடந்த செப்டம்பர் 19, 2019 அன்று 1,178 ரூபாய்க்கு வாங்கி 1,765-க்கு விற்று இருந்தால் கூட 49 % லாபம் பார்த்து இருக்கலாம்.
கொரோனா கொடுத்த வாய்ப்பு
கொரோனா வைரஸ் அதிகமாக பரவிக் கொண்டிருந்த ஜனவரி 2020 காலகட்டத்தில் இந்தியாவின் பல பங்குகள் மீண்டும் மண்ணைக் கவ்வின. 23 மார்ச் 2020 அன்று ரிலையன்ஸ் 884 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. அன்று வாங்கி, இன்று 1,765 ரூபாய்க்கு விற்று இருந்தால் 99 % லாபம் பார்த்து இருக்கலாம். அதுவும் 3 மாதங்களில் லாபம் பார்த்து இருக்கலாம்.
முதலீடு செய்யுங்கள்
இத்தனை பொன்னான வாய்ப்புகளைக் கொடுத்த ரிலையன்ஸுக்கு நன்றி. முகேஷ் அம்பானிக்கு நன்றி. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த வாய்ப்புகளை தவற விட்டவர்கள், புலம்ப வேண்டாம்..! இது போல பங்குச் சந்தையில் நல்ல வாய்ப்புகள் அவ்வப் போது வந்து கொண்டே தான் இருக்கும். அதை கண்டு பிடித்து முதலீடு செய்ய வேண்டியது மட்டுமே நம் வேலை.
வாழ்த்துக்கள்
அந்த வாய்ப்புகளைக் கண்டு பிடிக்க, இன்னும் நிறைய படியுங்கள். நல்ல பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கொடுத்தது போல லாபங்களைச் சம்பாதியுங்கள். பணம் பல பிரச்னைகளுக்கு அருமருந்து. எனவே மக்களே நல்ல பங்கை தேர்வு செய்து முதலீடு செய்யுங்கள்..! முரட்டு லாபம் பார்க்க எங்கள் தரப்பில் இருந்து வாழ்த்துக்கள்.