கடந்த சில ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது என்பதும் ஆண்டுக்காண்டு மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்யும் தொகையும் அதிகரித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
முதலீட்டிற்கு எந்தவிதமான அச்சமும் இன்றி அதே நேரத்தில் 10 முதல் 12 சதவீத வட்டி வருமானம் தரும் முதலீடு என மியூச்சுவல் பண்டு என்று பலர் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
ஆனால் அதே நேரத்தில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது சில தவறுகளை செய்யக்கூடாது என முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள் இந்த 4 தவறுகளை செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அது குறித்து தற்போது பார்ப்போம்.
1. முதலீட்டில் அவசரம் காட்ட கூடாது
மற்றவர்களின் கருத்தை கேட்டு முதலீட்டு முடிவுகளை எடுக்கக் கூடாது. மற்றவர்களின் ஆலோசனையின் பேரில் முதலீடு செய்வது எப்போதுமே தவறாக இருக்கும். முதலீடு விஷயத்தில் அவசரம் என்பது கூடவே கூடாது. எனவே பரஸ்பர நிதிகளைப் பற்றி முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெற்று சரியான மியூச்சுவல் ஃபண்டை தேர்வு செய்ய வேண்டும்
2. விதிமுறைகளை மனதில் கொள்ளுங்கள்
மல்டி கேப், லார்ஜ் கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் போன்ற மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான வழிகள் உள்ளன. சமீப காலங்களில், முதலீட்டாளர்கள் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் முதலீடுகளிலிருந்து அதிக வருமானத்தைப் பெற்றுள்ளனர். ஆனால் இது ஒவ்வொரு முறையும் நடக்கும் என்று கூற முடியாது. எனவே மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு விதிமுறைகளை மனதில் வைத்து கொண்டு நமக்கு பொருத்தமானது எது என்பதை தேர்வு செய்து முதலீடு செய்ய வேண்டும்
3. இடையில் நிறுத்தவே கூடாது
பங்குச்சந்தை என்றாலே ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் அதை பற்றி நீங்கள் கவலையடைய தேவையில்லை. பல சமயங்களில் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையின் மந்தநிலைக்கு பயந்து தங்கள் முதலீடுகளை நிறுத்திவிடுகிறார்கள் அல்லது திரும்ப பெற்றுவிடுகிறார்கள். இந்த தவறை நீங்கள் செய்யவே கூடாது. ஒருவர் எப்பொழுதும் நீண்டகாலமாக சிந்திக்க வேண்டும். நீண்ட கால முதலீட்டை சந்தை அபாயங்கள் எந்தவிதத்திலும் பாதிக்காது.
4. எப்போது முதலீடு செய்ய வேண்டும்?
பங்குச்சந்தை அதிக ஏற்றம் காணும்போது முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். பங்குச்சந்தை அதிக ஏற்றத்தில் இருக்கும்போது என்.ஏ.வி விலையும் அதிகமாக இருக்கும். இது முதலீட்டுக்கு நல்லதல்ல. ஏனெனில் பங்குச் சந்தை கடுமையாக உயரும் போது சில வாரங்களில் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ஏற்ற காலத்தில் முதலீடு செய்வதை தவிர்த்து பங்குச்சந்தை இறங்கும்போது முதலீடு செய்ய வேண்டும். ஆனால் இது குறுகிய காலத்திற்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.