எந்த முதலீடாக இருந்தாலும், சரி ஒரு துறையை நன்கு அறிந்திருப்பது நிச்சயம் பலமாக இருக்கலாம். ஆனால் அதே காரணத்திற்காக அந்தத் துறையில் மட்டுமே முழு பணத்தையும் முதலீடு செய்வது பாதுகாப்பான முடிவு அல்ல என நிதி ஆலோசகர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
அந்த வகையில் பங்குச்சந்தையில் சில முதலீட்டாளர்கள் சமீப காலமாக துறை சார்ந்த முதலீடுகளை அதிகம் தேடி செல்கின்றனர். உதாரணமாக பார்மா, தகவல் தொழில்நுட்பம் (IT), வங்கி மற்றும் ஆட்டோமொபைல் போன்ற துறை சார்ந்த (Sectoral) மியூச்சுவல் ஃபண்டுகளில் பெரும் தொகையை முதலீடு செய்து வருகின்றனர். Sectoral Fund என்பது பொதுவாக ஒரு துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் மியூச்சவல் பண்ட் அல்லது ஈடிஎப்.

துறை சார்ந்த (Sectoral) மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது சற்று ரிஸ்க் அதிகமானவை, இது நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்புடையதாக இருக்காது என தான் சாரதி யஷ்னா புவானியா கூறுகிறார். ஏன் தெரியுமா..?
இத்தகைய ஃபண்டுகள் வாங்கிவிட்டு பல ஆண்டுகள் மறந்துவிடும் வகையான முதலீடு இல்லை. சந்தைச் சுழற்சிக்கு ஏற்ப தொடர்ந்து கண்காணித்து, சரியான நேரத்தில் வெளியேறும் திறன் இருந்தால் மட்டுமே துறைவாரியாந முதலீட்டில் நுழைய வேண்டும் என கூறுகிறார்.
IT துறை சரிவு... முதலீட்டாளர்களுக்கு பாடம்
2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நிஃப்டி IT குறியீடு சுமார் 31 சதவீதம் சரிந்துள்ளது. அவுட்சோர்சிங் சேவை முறை மீது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுத்தும் தாக்கம் குறித்த அச்சம் காரணமாக, IT பங்குகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன.
இதன் விளைவாக, இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட முன்னணி IT நிறுவனங்களின் பங்குகள் அதன் உச்ச நிலையிலிருந்து 35 சதவீதத்துக்கும் மேல் சரிந்துள்ளன. கடந்த ஆண்டு வரை பாதுகாப்பான முதலீடாகக் கருதப்பட்ட அதே துறை, இன்று அதிக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருவது முதலீட்டாளர்களுக்கு முக்கிய உதாரணமாக உள்ளது. இதன் பின்பு இத்துறை உயருமா என்ற கேள்வியும் முக்கியுமானதாக உள்ளது.
பார்மா துறை கொடுத்த ஆச்சரியம்
மறுபுறம், 2021-ல் கடுமையான சரிவை சந்தித்த பார்மாதுறை, கடந்த ஓராண்டில் 13 சதவீதத்துக்கும் அதிக வருமானத்தை வழங்கியுள்ளது. இதன் மூலம் ஒரு துறை தொடர்ந்து முன்னணியில் இருக்கும் என்ற நம்பிக்கை எப்போதும் சரியாக இருக்காது என்பதை இது காட்டுகிறது.
ஒரு துறை சரிவிலிருந்து மீளும் நேரத்திலும், மற்றொரு துறை உச்சத்திலிருந்து கீழிறங்கும் சூழலும் பங்குச் சந்தையில் இயல்பான நடைமுறை தான். இதில் நாம் எப்போது நுழைய வேண்டும் எப்போது வெளியேற வேண்டும் என்ற புரிதல் இருந்தால் மட்டுமே லாபம் பார்க்க முடியும். ஒரு சிறிய பிரச்சனை ஒட்டுமொத்த துறையை கீழே தள்ளிவிடும்.
முதலீட்டில் பல்வகைப்படுத்தல் ஏன் அவசியம்?
எனவே 100 சதவீத தொகையையும் செக்டோரல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதை விட, 70 சதவீதத்தை பல்வேரு ஈக்விட்டியிலும், மீதமுள்ள 30 சதவீதத்தை கடன் (Debt) சார்ந்த முதலீடுகளிலும் ஒதுக்குவது நீண்டகால இலக்குகளுக்கு ஏற்றதாக இருக்கும் என்று யஷ்னா தனது லின்கிடுஇன் பதிவில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications