இன்றைய சூழலில் கையில் பணத்தை வைத்துக்கொண்டு கார் வாங்குவது எல்லோருக்கும் சாத்தியமில்லை. அதற்கு ஏற்ப வங்கிகளும், வங்கி சாரா நிதி நிறுவனங்களும் கார் கடன்களை வழங்கி வருகின்றன. ஒருபுறம் டீலர்கள் குறைந்த EMI-ஐ கூறி ஆசை வார்த்தை காட்டுகின்றனர். மாதத் தவணை குறைவாக இருப்பதை சொன்னவுடன் சிலர் அதற்கு மயங்கி கடன் பெறுகின்றனர். ஆனால் இங்கு தான் பெரிய பிரச்சனையே இருக்கிறது.
ஈஎம்ஐ தொகை குறையும்போது ஒவ்வொரு மாதமும் பெரிதாக செலவு இருக்காது என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றலாம். ஆனால் நீங்கள் அதிக அளவில் வட்டி செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும். இந்திய ரிசர்வ் வங்கி விதிகளின்படி வங்கிகள் கடன் பெறும்போது அனைத்து கட்டண விவரங்களையும் கொண்ட "கீ ஃபேக்ட் ஸ்டேட்மென்ட்டை" கடன் பெறுபவருக்கு வழங்க வேண்டும்.

அதை படித்து தெரிந்து கொண்டாலே போதும். எந்தெந்த கட்டணங்கள் எப்போது விதிக்கப்படும் என்ற விவரங்கள் அனைத்தும் தெள்ளத்தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும். இந்த தகவல்களை எல்லாம் படித்த பிறகு தான் அக்ரிமெண்டில் கையெழுத்திட வேண்டும்.
ஈஎம்ஐ தொகையை மட்டும் பார்ப்பது சரிதானா?: உதாரணமாக நீங்கள் ரூ.15,000 ஈஎம்ஐ செலுத்த வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். இந்த தொகை ரூ.1 லட்சம் சம்பளம் பெறுபவர்களுக்கு எளிதாக தோன்றலாம். இங்கு மாத தவணையை விட அதை எத்தனை ஆண்டுகள் செலுத்துகிறீர்கள் என்பது தான் முக்கியம். 3 ஆண்டுகள் கடன் காலம் இருக்கும் பட்சத்தில் மாதத் தவனை சற்று அதிகமாக இருக்கும்.
அதுவே கடன் காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டித்தால் மாதத் தவணை குறையும். ஆனால் வட்டி தொகை அதிகரிக்கும். எனவே கடன் பெறும்போது ஈஎம்ஐ தொகையை மட்டும் பார்க்கக்கூடாது. வட்டியோடு சேர்த்து நீங்கள் எவ்வளவு செலுத்துகிறீர்கள் என்பதை கணக்கிட்டு அதன் பிறகு கடன் காலத்தைத் தீர்மானிக்க வேண்டும்.
முதலில் கிடைக்கும் லோன் ஆஃபரையே தேர்ந்தெடுப்பது: ஒரு சில நேரங்களில் கார் வாங்கும் ஆர்வத்தில் சிலர்.. டீலர்கள் சொல்லும் முதல் லோன் ஆஃபரையே ஏற்றுக்கொண்டு லோன் வாங்கி விடுவார்கள். அப்படி செய்யாமல் வங்கிகள் மற்றும் வாங்கி சாரா நிதி நிறுவனங்களில் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்த்து கடன் பெற வேண்டும்.
குறைந்த முன்பணம் செலுத்துதல்: கையில் பணம் இருந்தாலும் அதை மிச்சப்படுத்தி குறைந்த முன்பணம் செலுத்துவது அதிக கடனுக்கு வழி வகுக்கும். கடன் தொகை அதிகரிக்க அதிகரிக்க வட்டியும் அதிகமாகும். அதற்காக அவசரக் காலத்திற்கு சேமிப்பு வைத்திருந்தால் அதை கார் வாங்குவதற்கு அப்படியே காலி செய்து விடக்கூடாது. உங்கள் சேமிப்பையும் பத்திரமாக வைத்துக்கொண்டு.. அதே நேரத்தில் உங்களால் முடிந்த அளவு முன்பணமும் செலுத்த வேண்டும்.இது பிற்காலத்தில் வட்டி சுமையிலிருந்து உங்களை பாதுகாக்கும்.
மறைமுகக் கட்டணங்களைப் பார்க்காமல் விடுவது: கடன் பெறும்போது வட்டி விகிதம் எவ்வளவு?, ஈஎம்ஐ தொகை எவ்வளவு? என்பதை எல்லாம் பார்க்கும் நபர்கள் மறைமுக கட்டணம், அபராதத் தொகை, டாக்குமெண்டேஷன் கட்டணம், காப்பீடு தொடர்பான பிற செலவுகளை கவனிப்பதே இல்லை. அக்ரிமெண்டில் கையெழுத்து போடுவதற்கு முன்பு பிற கட்டணங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.
ஃப்ரீபேமெண்ட் வசதி இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்: கார் வாங்கிய பிறகு உங்களுடைய நிதி நிலை அதிகரிக்கலாம். சம்பள உயர்வு கிடைக்கலாம்.. சில நேரங்களில் போனஸ் கூட வரலாம். அந்த தொகையை உங்கள் கடனை அடைக்க பயன்படுத்தினால் வட்டி குறைவதோடு சீக்கிரம் ஈஎம்ஐ-யில் இருந்து விடுபடலாம். ஆனால் சில நிதி நிறுவனங்கள் முன்கூட்டியே பணம் செலுத்தி கடனை அடைப்பதற்கு போர்குளோசர் சார்ஜ் விதிக்கின்றன. உங்கள் வங்கியிலும் இதே போன்று கட்டணங்கள் இருக்கிறதா என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளுங்கள்.
என்னதான் ஆர்பிஐ விதிகளின்படி வங்கிகள் கீ ஃபேக்ட் ஸ்டேட்மென்ட்டை வழங்கினாலும் எந்தெந்த வங்கியில் எந்தெந்த கட்டண நடைமுறைகள் இருக்கிறது?, அதற்கு ஏற்ப உங்களுடைய சம்பளம் இருக்கிறதா?, கட்டணங்கள் உங்களுக்கு ஏதுவாக இருக்குமா? என்பதை கவனிக்க வேண்டியது உங்கள் கையில் தான் உள்ளது.


Click it and Unblock the Notifications
