உலகின் முன்னணி நிறுவனங்களான கூகிள், ஆல்பபெட், பேஸ்புக், ஆப்பிள், அமேசான் பங்குகளின் வளர்ச்சியைப் பார்த்து வியக்காதவர்களே இல்லை என்ற நிலையில் இந்தப் பெரும் நிறுவனங்களில் முதலீடு செய்ய வாய்ப்புகளைத் தேடுவோருக்கும் விரும்புவோருக்கும் ஒரு புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்த டாப் நிறுவனங்களில் முதலீடு செய்யத் தடையாக இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை பங்குகளின் விலை தான். இந்தப் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் Sliced பங்குகளாக வாங்கும் சேவை இந்திய முதலீட்டாளர்களுக்கு லண்டனை சேர்ந்த ஒரு முதலீட்டு ஆலோசனை மற்றும் தரகு நிறுவனம் அளித்துள்ளது.
அதிக மதிப்புடைய பங்குகள்
வாரன் பபெட்-ன் Berkshire Hathaway நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 3,50,620 டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் டாலருக்கு 73 ரூபாய் வீதம் ஒரு பங்கின் விலை கிட்டதட்ட 2.6 கோடி ரூபாய், இதேபோல் ஜெப் பிசோஸ்-ன் அமேசான் பங்கு விலை 3,292 டாலர், கூகிள்-ன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1,893 டாலர். இதைச் சாமானிய இந்திய முதலீட்டாளரால் வாங்க முடியாது.
ஒரு டாலர் முதலீடு
இந்த நிலையில் இந்தப் பெரும் நிறுவனங்களில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக ஒரு பங்கை முழுமையாக வாங்க முடியாதவர்கள் ஒரு பங்கின், பகுதியை மட்டும் வாங்கும் சேவை வழங்கப்படுகிறது. இந்தச் சேவை மூலம் ஒருவர் வெறும் ஒரு டாலருக்கு கூடப் பெரும் நிறுவனப் பங்குகளைப் பெற முடியும்.
அமெரிக்காவில் பல பங்குச்சந்தை தரகு நிறுவனங்கள் இதுபோன்ற சேவையை வழங்கத் துவங்கியுள்ளது.
குளோபலைஸ் நிறுவனம்
இந்நிலையில் லண்டனை சேர்ந்த முதலீட்டு ஆலோசனை மற்றும் பங்குச்சந்தை தரகு நிறுவனமான Globalise, இந்திய முதலீட்டாளர்களுக்கெனப் பிரத்தியேகமாக அமெரிக்க நிறுவனப் பங்குகளை Sliced பங்குகளாக வாங்கும் சேவை அறிமுகம் செய்துள்ளது. இந்தச் சேவையைப் பயன்படுத்தி யார்வேண்டுமானும், எந்த நிறுவனத்திலும் குறைந்தபட்சம் 1 டாலர் முதலீட்டில் பங்குகளை வாங்க முடியும்.
விகாஸ் நந்தா
இந்த வர்த்தகத் தளத்தில் எந்தவிதமான குறைந்தபட்ச அளவீடும் இல்லை, நீங்கள் விரும்பிய தொகைக்குப் பங்குகளை வாங்க முடியும். இதனால் பெரும் மதிப்புடைய பங்குகளையும் எவ்விதமான தயக்கமும் இல்லாமல் எளிதாக வாங்கி லாபத்தை அடைய முடியும் என Globalise நிறுவனத்தின் விகாஸ் நந்தா தெரிவித்துள்ளார்.
2,50,000 டாலர்
மேலும் இந்தத் தளத்தில் இந்தியர்கள் ரிசர்வ் வங்கியின் liberalised remittance scheme (LRS) பிரிவின் கீழ் தனிநபர் ஒருவர் வருடத்திற்கு 2,50,000 டாலர் அளவிலான தொகைக்கு அதிகப்படியாக முதலீடு செய்து வர்த்தகம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.