காலம் மாறிக்கிட்டே இருக்கு. முன்பெல்லாம் இருந்த கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையோ அல்லது குடும்ப வாழ்க்கை முறையோ இப்போதெல்லாம் இல்லை. ஆக ஓய்வுக்காலத்திற்கு பிறகு உங்களது வாழ்க்கையை சுகமாக கழிக்க உதவும் திட்டம் தான் தேசிய ஓய்வூதிய திட்டம்.
இன்றைய சேமிப்பு நாளைய வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.
இப்படி இரு அம்சத்தினையும் சேர்த்து வழங்கும் ஒரு திட்டம், அதுவும் அரசின் திட்டம் என்றால், வேண்டாம் என்றா சொல்ல முடியும். நிச்சயம் இல்லை. சரி அது என்ன திட்டம். எப்படி அந்த திட்டத்தில் இணைவது? எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், மற்ற விவரங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.
தேசிய ஓய்வூதிய திட்டம் தொடக்கம்
கடந்த 2004ம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்காக தேசிய ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் இது பின்னர் 2009க்கு பிறகு தனியார் ஊழியர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள், இல்லதரசிகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. இந்த திட்டமானது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
யாரெல்லாம் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்
வயதானவர்கள் பொருளாதார பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதோடு மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்துடனும் இந்த திட்டம் வந்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தனி நபர்கள், ஏழை மக்கள் என அனைவருமே, அரசின் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும். அதற்கான வழிமுறைகளும் இதில் உள்ளது.
வயது தகுதி என்ன?
18 வயது முதல் 60 வரையிலானவர்கள் யார் வேண்டுமானலும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இதில் உள்ள ஒரே ஒரு நிபந்தனை என்னவெனில், வாடிக்கையாளர் கேஒய்சி விதிமுறைகளை அறிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் அரசின் இந்த தேசிய சேமிப்பு திட்டத்தில் இணைந்து பயன் பெற்றுக் கொள்ளலாம்.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
பொதுவாக எந்தவொரு சேமிப்பு திட்டங்களிலும் இணைய தேவைப்படும் ஆவணங்கள் தான் இந்த திட்டத்திலும் தேவை.
குறிப்பாக முகவரிச் சான்று, அடையாளச் சான்றிதழ், பிறந்த தேதிக்கான சரியான ஆவணம் உளளிட்டவை தேவைப்படும். இந்த ஆவணங்களை முன்னிலை முனையம் என்று அழைக்கப்படும் POPs கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்.
எப்படி இந்த திட்டத்தில் இணைவது?
பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கி வருகின்றன. இது குறித்தான முழு விவரங்களை அறிய முதலீட்டாளர்கள் https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த இணையத்தின் மூலம் அரசின் இன்னொரு திட்டமான அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தினையும் அறிந்து கொள்ளலாம்.
அருகில் உள்ள POPs எப்படி தெரிந்து கொள்வது?
சரி வங்கிகள், நிதி நிறுவனங்கள் POPs ஆக செயல்படுகின்றன. ஆனால் எந்தெந்த வங்கிகள் POPs ஆக செயல்படுகின்றன. இதனை https://www.npscra.nsdl.co.in/pop-sp.php என்ற லிங்கினை கிளிக் செய்து உள்ளே சென்றால் அங்கு கொடுக்கப்பட்டுள்ள காலத்தினை கிளிக் செய்ய வேண்டும். அதில் நீங்கள் எந்த மாநிலத்தினை சேர்ந்தவர் என்பதை குறிப்பிட வேண்டும். இதன் பின்னர் எந்த மாவட்டத்தினை சேர்ந்தவர் என்பதையும் குறிப்பிட்டு கிளிக் செய்தால், உங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து POPs முகவரிகளும் வருகின்றன. ஆக அவற்றில் எது உங்களுக்கு தோதுவானதோ? அதனை தேர்வு செய்து கொள்ளலாம்.
உங்களது பிரான் எண் என்ன?
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணையும் ஒவ்வொரு சந்தாதாரருக்கும் 12 இலக்க எண் வழங்கப்படும். அது பிரான் எண் (PRAN) என்று அழைக்கப்படும். அல்லது ஓய்வூதிய கணக்கு எண் என்று அழைக்கப்படும். இந்த ஓய்வூதிய கணக்கு எண் ஒருவருக்கு ஒரு எண் மட்டுமே பதிவு செய்ய முடியும்.
TIER-1 - குறைந்தபட்சம் எவ்வளவு செலுத்த முடியும்?
இந்த ஓய்வூதிய திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர், கணக்கு முடிவு பெறும் வரையில் அல்லது ஓய்வு பெறும் வரையில் நிதியினை திரும்ப பெற முடியாது. எனினும் இந்த தேசிய ஓய்வூதிய திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளியேற்றும் போது மட்டுமே, இக்கணக்கினை முடித்து பணத்தை திரும்ப பெற முடியும். இந்த கணக்கில் சேர்ந்துள்ள வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 6000 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். அவ்வாறு செலுத்தாவிடில் இந்த கணக்கு முடக்கப்படும்.
TIER-2 திட்டத்தில் எவ்வளவு செலுத்தலாம்?
இந்த இரண்டாவது ஓய்வூதிய திட்டத்தில் சேருபவர்கள், இந்த திட்டத்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் செலுத்திய பணத்தினை எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கணக்கினை முதல் வகையான கணக்கிற்கான கூடுதல் இணைப்புக் கணக்காகவும் எடுத்து கொள்ளலாம். சந்தாதாரர் டயர் 1ல் கணக்கு தொடங்கியிருந்தால் மட்டுமே, டயர் 2ல் கணக்கு திறக்க முடியும். இந்த கணக்கில் நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் 2000 ரூபாய் பங்களிப்பாக செலுத்த வேண்டும்.
NPS திட்டத்தினை மாற்றிக் கொள்ள முடியுமா?
இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தினை இந்தியாவின் எந்தவொரு பகுதியில் இருந்தும் இயக்கிக் கொள்ள முடியும், ஆரம்பத்தில் தனியார் வங்கியில் நீங்கள் இந்த கணக்கினை தொடங்கினீர்கள் என்றால், பின்னர் பொதுத்துறை வங்கிக்கும் மாற்றிக் கொள்ளலாம். அதே போல மாநிலத் துறையில் இருந்து, மத்திய அரசு துறைக்கு மாறினாலும் இதில் எந்த பிரச்சனையும் இல்லை.
வருடாந்திர சேவை வழக்குனர்கள்
இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இணையும் சந்தாதாரர்களின் பங்களிப்பு நிதியை மேலாண்மை செய்யும் சேவை வழங்குனர்களாக, தற்போதைக்கு கீழ்கண்ட நிறுவனங்கள் உள்ளன.
Life Insurance Corporation of India
SBI Life Insurance
ICICI Prudential Life Insurance
Bajaj Allianz Life Insurance
Star Union Dai-ichi Life Insurance
Reliance Life Insurance
HDFC Standard Life Insurance