பொதுவாக வங்கி பிக்சட் டெபாசிட் என்பது மிக பாதுகாப்பான நிலையான வருமானம் தரக்கூடிய திட்டமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இன்று நாம் பார்க்கக் கூடிய திட்டம் வங்கி பிக்சட் டெபாசிட்டினை போலவே பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதே சமயம் வட்டி அதிகமாக இருக்க வேண்டும். வரி சலுகை வேண்டும். நம்பிக்கையான திட்டமாகவும் இருக்க வேண்டும். அதே நேரம் சந்தை அபாயமும் இருக்கக் கூடாது. அப்படி எந்த திட்டம் உள்ளது.
அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது அஞ்சலகத்தின் கிசான் விகாஸ் பத்திரம் மற்றும் தேசிய சேமிப்பு பத்திர திட்டம், டைம் டெபாசிட் பற்றி தான். இதில் எது பெஸ்ட். எதில் வட்டி அதிகம்? யாருக்கு எது ஏற்றது?
எதில் முதலீடு செய்யலாம்? எது லாபகரமானது?வாருங்கள் பார்க்கலாம்.
கிசான் விகாஸ் பத்திரம் (KVP)
அஞ்சலகத்தில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களில், மிக முக்கியமான சேமிப்பு திட்டம் தான் கிசான் விகாஸ் பத்திரம் என்ற கேவிபி . இந்த திட்டத்தில் தற்போதைய நிலவரப்படி வட்டி விகிதம் 6.9% வழங்கப்படுகிறது. இது சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் லாபகரமான மற்றும் பாதுகாப்பான ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதமானது முன்னணி வங்கிகளில் வழங்கப்படும் வட்டியை விட அதிகம்.
KVP - எத்தனை ஆண்டுகளில் இருமடங்கு?
இந்த திட்டத்தின் மூலம் முதலீடு செய்ய விரும்புவர்கள் குறைந்தபட்சம், 1000 ரூபாய் முதல் முதலீடு செய்து கொள்ளலாம். அதிகபட்ச முதலீடு என எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை. நீங்கள் முதலீடு செய்யும் தொகையானது 124 மாதங்கள் கழித்து இரட்டிப்பாகிறது.
KVP - வரிச் சலுகை கிடையாது
இந்த கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்குத் தங்களது பங்களிப்பு மற்றும் லாபம் என இரண்டுக்குமே, மற்ற முதலீட்டு திட்டங்களை போல் வரி சலுகை அளிக்கப்படுவதில்லை. எனினும் முதிர்வு காலத்திற்கு பிறகு எடுக்கும்போது டிடிஎஸ் விலக்கு அளிக்கப்படுகிறது. ஆக வரிச் சலுகைக்காக முதலீடு செய்பவர்கள் இதனை கவனித்து முதலீடு செய்வது நல்லது. இதன் முதிர்வு காலம் என்பது 118 மாதங்களாக உள்ளது. எனினும் இது நிர்ணயம் செய்யப்படவில்லை.
தேசிய சேமிப்பு பத்திரம் (NSC)
தேசிய சேமிப்பு பத்திர திட்டம்(National Savings Certificate), அஞ்சலகத்தின் பிரபலமான திட்டங்களில் ஒன்றாகும். இது ஒரு நிலையான வருமானத்தை தரக்கூடிய சிறு முதலீட்டு திட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் பாதுகாப்பான, ரிஸ்க் குறைந்த ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. குறைந்தபட்ச முதலீடாக 1,000 ரூபாயும், அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு ஏதும் இல்லை. இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகாலம் ஆகும்.
NSC - வரிச் சலுகையுண்டு
தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவர், அதற்கான வரி சலுகையை, வருமான வரிச்சட்டம் 80சி பிரிவின் கீழ் சலுகை பெறலாம். தற்போதைய நிலவரப்படி இந்த திட்டத்தில் வட்டி விகிதம் 6.8% ஆகும். இந்த திட்டத்தில் 1000 ரூபாய் முதலீடு செய்துள்ளீர்கள் எனில், 5 வருடம் கழித்து, உங்களது முதலீடு 1389.49 ரூபாயாக அதிகரிக்கும். இந்த திட்டத்தில் 10 ஆண்டுகளில் உங்களது முதலீடு இரட்டிப்பாகும்.
டைம் டெபாசிட் (TD)
வங்கிகளை போலவே அஞ்சலகத்தின் டைம் டெபாசிட் திட்டதிலும் 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான திட்டங்கள் உள்ளன. இதிலும் வரிச்சலுகை 80சி பிரிவின் கீழ் வரிச்சலுகை கிடைக்கிறது. இதில் அதிகபட்சமாக வட்டி விகிதம் அதிகபட்சமாக 6.7% வழங்கப்படுகிறது. இதில் குறைந்தபட்சம் 1000 ரூபாயில் இருந்து முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு என்பது இல்லை.
எது சிறந்தது?
மேற்கண்ட மூன்று திட்டங்களிலும் வட்டி விகிதம், வங்கி வட்டியை விட அதிகம். எனினும் கிசான் விகாஸ் பத்திரத்தில் அதிகபட்சமாக 6.9% ஆக கிடைக்கிறது. ஆனால் இதில் வரிச்சலுகை கிடைக்கிறது. மற்ற இரண்டு திட்டங்களிலும் அதிகபட்சமாக வட்டி விகிதம் 6.8% தான். எனினும் இதில் இரண்டிலும் வரிச்சலுகை உண்டு. எப்படியிருப்பினும் இந்த 3 திட்டங்களுமே வங்கி வட்டியை விட அதிகம்.