இந்தியாவின் மிகப்பெரிய பங்குச்சந்தையான நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (NSE) அதாவது தேசிய பங்குச்சந்தையில் சாதாரண மக்களும் ஒரு முதலீட்டாளர் ஆக முடியும். இந்தியாவில் பங்குச்சந்தை முதலீடுகள் வளர வளர உங்களின் பணமும் வளர்ச்சி அடையும். அதற்கு பிரகாசமான ஒரு வாய்ப்பு வந்துள்ளது.
தேசிய பங்குச்சந்தை ஐபிஓ வெளியிட்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட ஆர்வமாக உள்ளது. ஐபிஓ வெளியிடுவதன் மூலம் சாமானிய மக்களும் இதில் முதலீட்டாளராக முடியும். ஐபிஓ வெளியிடுவதற்கான ஆரம்பக்கட்ட ஆவணமான DRHP (Draft Red Herring Prospectus) அறிக்கையை தேசிய பங்குச்சந்தை அமைப்பு செபியிடம் அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்துள்ளது. இது இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐபிஓ-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஐபிஓ மூலம் சுமார் 30,000 கோடி ரூபாய் திரட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வெற்றிகரமாக முடிந்தால், கடந்த 2024 அக்டோபரில் வந்த ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் ஐபிஓ வெளியீட்டு மதிப்பான 27,859 கோடி ரூபாய் சாதனையை இது முறியடித்து, இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ என்ற சாதனையைப் படைக்கும்.
இந்த ஐபிஓ 'Offer for Sale' முறையில் மட்டுமே வருகிறது. அதாவது, என்எஸ்இ (NSE) நிறுவனம் புதிய பங்குகளை வெளியிடாது. தற்போதைய பங்குதாரர்கள் மட்டுமே தங்களின் பங்குகளை (சுமார் 14.89 கோடி பங்குகள், அதாவது 6% பங்குகள்) பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். இதனால் கிடைக்கும் பணம் முழுவதும் பங்குகளை விற்கும் நிறுவனங்களுக்கே செல்லும், NSE-க்கு நிதி எதுவும் கிடைக்காது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அதிகபட்சமாக 2.47 கோடி பங்குகளையும், எம்எஸ் ஸ்டிரேட்டஜிக் (மொரிஷியஸ்) நிறுவனம் 1.60 கோடி பங்குகளையும் விற்பனை செய்கின்றன. இது தவிர எல்ஐசி (LIC), கனடா பென்ஷன் பிளான் மற்றும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களும் தங்களது பங்குகளை விற்கின்றன.
செபியின் (SEBI) விதிமுறைப்படி, ஒரு பங்குச்சந்தை தனது சொந்த சந்தையில் பட்டியலிட முடியாது. எனவே, என்எஸ்இ (NSE) பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் (BSE) மட்டுமே பட்டியலிடப்படும். சந்தை நிபுணர்களின் கணிப்புப்படி, என்எஸ்இ நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பு Grey Market சந்தையில் 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது தான் DRHP தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செபி இந்த ஆவணங்களை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்த பிறகு தான் ஐபிஓ வெளியீட்டு தேதி, பங்கின் விலை மற்றும் ஒரு லாட்டிற்கான பங்குகளின் எண்ணிக்கை ஆகியவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். எனினும், 2026 இறுதிக்குள் இந்த ஐபிஓ முழுமையாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஓ தேதிகள் மற்றும் அதிகாரப்பூர்வ விலை வரம்பு அறிவிக்கப்பட்ட பிறகே இதற்கான அதிகாரப்பூர்வ ஜிஎம்பி (GMP) நிலவரம் தெரியவரும். தற்போதைய அன்லிஸ்ட்டெட் சந்தையில் இதன் பங்குகள் 1,950 முதல் 2,050 ரூபாய் என்ற விலைக்குள் வர்த்தகமாகி வருகின்றன.
தேசிய பங்குச்சந்தை நிறுவனம் ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ் (Equity Derivatives) வர்த்தகத்தில் உலகளவில் முதலிடத்தில் உள்ள மிகப்பெரிய சந்தையாகும். கடந்த நிதியாண்டில் (FY26) இந்நிறுவனம் 10,302 கோடி ரூபாய் நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. மக்கள் புதிதாக டீமேட் கணக்கு தொடங்கி பங்குச்சந்தை வர்த்தகத்தில் நுழையும் போதெல்லாம் இதன் மதிப்பு அதிகரிக்கும். பங்குச்சந்தை வளர்ச்சி அடையும் போதெல்லாம் இதன் பங்கு மதிப்பும் பல மடங்கு உயரும் என்பதால் அதிக போட்டி கொண்ட ஒரு ஐபிஓ-ஆக இது இருக்கும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

