பேடிஎம் போஸ்ட்பெய்டு சேவை மூலம், பேடிஎம் அதன் வாடிக்கையாளர்களுக்கு உடனடி கடன் சேவையை வழங்குகின்றது.
இது டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் செய்து கொள்ளவும் உங்களை அனுமதிக்கிறது. இது தவிர இன்னும் பற்பல சலுகைகளையும் வழங்கி வருகின்றது.
எல்லாவற்றுக்கும் மேலாக குறிப்பிட்ட காலத்திற்கு வட்டி இல்லை என்பது, வாடிக்கையாளர்களுக்கு மிக சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அதனை பற்றித் தான் நாம் இன்று பார்க்கவிருக்கிறோம்.
பேடிஎம் போஸ்ட்பெய்டு மினி சேவை
பேடிஎம் தற்போது ஒரு புதிய சேவையினை கொண்டு வந்துள்ளது. அது பேடிஎம் சிறிய அளவிலான கடன்களுக்கு பேடிஎம் போஸ்ட்பெய்டு மினி என்ற சேவையினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 250 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கடனாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
போஸ்ட்பெய்ட் மினியில் பை நவ், பே லேட்டர்
பேடிஎம் போஸ்ட்பெய்டு மினி சேவைக்காக, பேடிஎம் ஆதித்யா பிர்லா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இது பை நவ், பே லேட்டர் திட்டத்தினை பெற்றுக் கொள்ள வழிவகுக்குகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில், பேடிஎம்மின் இந்த திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நெகிழ்வுதன்மையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டு செலவுக்கு உதவும்
இந்த திட்டம் சிறு சிறு வீட்டு செலவுகளை நிர்வகிக்க உதவும். இது வாடிக்கையாளர்களின் டிடிஹெச் ரீசார்ஜ், மொபைல் ரீசார்ஜ், கேஸ் சிலிண்டர் புக்கிங், மின்சார கட்டணம், தண்ணீர் கட்டணம் செலுத்தவும் உதவும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தாமலேயே, பல சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும். அதன் பிறகு கையில் இருக்கும்போது பணம் செலுத்திக் கொள்ளலாம்.
எவ்வளவு கடன்?
இதோடு பேடிஎம் நிறுவனம் போஸ்ட்பெய்ட் எனும் சேவையையும் வழங்கி வருகின்றது. இதன் மூலம் 60,000 ரூபாய் வரையிலும் கடன் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் பேடிஎம் மால் மூலமாகவும் ஷாப்பிங் செய்து கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.
நுகர்வினை அதிகரிக்கும்
பேடிஎம் லெண்டிங்கின் தலைமை நிர்வாக அதிகாரியான பவேஷ் குப்தா, நாங்கள் முதல் முறையாக கடன் வாங்குபவர்களுக்கு ஒரு சலுகை அறிமுகப்படுத்துகிறோம். இதன் மூலம் நுகர்வினை அதிகரிக்க முடியும். இது பொருளாதாரத்தில் வளர்ச்சியினை உந்தும். மேலும் வாடிக்கையாளர்கள் இதன் மூலம் சரியான நேரத்தில் தங்களது பில்களை செலுத்த முடியும்.
வட்டியில்லை
பேடிஎம்மின் இந்த சலுகைக்கு 30 நாட்கள் அவகாசத்திற்கு வட்டிவிகிதம் 0% ஆகும். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த சேவைக்கு ஆண்டு கட்டணம் என்பது கிடையாது. ஆக பேடிஎம்மின் இந்த சேவையின் மூலம், வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்ட பொருட்களை வாங்கிக் கொண்டு, பின்னர் பணம் செலுத்திக் கொள்ளலாம்.
எங்கெங்கு சேவை?
பேடிஎம்மின் இந்த சலுகையானது, தற்போது நாட்டில் கர்நாடகா, கேரளா, தமிழ் நாடு, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 200 மாவட்டங்களில் தனது சேவையினை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது தவிர இன்னும் கேஷ்பேக் சலுகை என பல வாய்ப்புகளையும் பேடிஎம் வழங்கி வருகின்றது.