இன்றளவிலும் சம்பளதாரர்கள் மத்தியில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி என்பது மிக சிறந்த சேமிப்பு திட்டமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஊழியர்களின் ஓய்வுகாலத்திற்கு ஏற்ற ஒரு திட்டமாகவும் இருந்து வருகிறது.
ஏனெனில் ஒரு ஊழியரின் வருங்கால நலன் கருதி, ஊழியரும், நிறுவனமும் கணிசமான தொகையை, இந்த வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பங்களிப்பு செய்கின்றனர்.
அதோடு இந்த திட்டத்தில் வட்டி விகிதம் அதிகம். வரிச்சலுகையும் இருந்ததால் தான், இந்த திட்டம் பலரையும் கவர முக்கிய காரணமாக இருந்தது.
பிஎஃப் புதிய வரி
ஆனால் கடந்த பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 2021ல் பழைய விதிமுறைக்கு ஒரு முற்றுபுள்ளி வைத்தது மத்திய அரசு. அப்போது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ஒரு புதிய திருத்தத்தினை கொண்டு வந்தது. அது ஒரு ஆண்டில் ஒரு ஊழியரின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்யப்பட்டிருந்தால், அதற்கு வரி விதிக்கப்படும் என்பது தான்.
சேமிப்புகள் குறையலாம்
அரசு இந்த வரி விதிப்பின் மூலம் அதிக வருமானம் உடையவர்களுக்கு வரி சலுகைகள் கிடைப்பதை கட்டுப்படுத்துவது என்றாலும், பலரும் இந்த திட்டத்தில் வட்டி விகிதம் அதிகம் வரி சலுகையும் இருந்ததால் நல்ல முதலீட்டு திட்டமாகவும், சிறந்த சேமிப்பாகவும் பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அரசின் இந்த முடிவால் இதில் சேமிப்புகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரி உண்டா?
2.5 லட்சம் தொகைக்கு மேலான தொகையை, உங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கில் செலுத்தினால், 2021 - 22ம் நிதியாண்டில் தனி கணக்குகள் பராமரிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த மார்ச் 2021 வரையில் நீங்கள் செய்த எந்தவொரு பங்களிப்புக்கும் வரி விதிக்கப்பபடாததாக இருக்கும். எனினும் இது குறித்து தெளிவான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
தனி தனி கணக்கு
ஆனால் நடப்பு நிதியாண்டில் 2021 - 22 செலுத்தப்படும் தொகையில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்யப்பட்டால், அதற்கு வரி விதிக்கப்படும். இதற்கு இரு கணக்குகள் பராமரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த விதிமுறைகள் ஏப்ரல் 1, 202 முதல் நடைமுறைக்கு வரலாம் என CBDT சமீபத்தில் கூறியிருந்தது.
யார் யாருக்கு வரி?
எனினும் இந்த 2.5 லட்சம் ரூபாய் வரம்பானது தனியார் ஊழியர்களுக்கானது. அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு வருங்கால வைப்பு நிதி மற்றும் தன்னார்வ வைப்பு நிதி என இரண்டும் சேர்த்து 5 லட்சத்திற்கும் மேல் பங்களிப்பு இருந்தால் வரி விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி பல கேள்விகள்
எனினும் இந்த திட்டம் செயல்படுத்துவது கடினமான ஒன்று என பார்க்கப்படுகின்றது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. இதில் இன்னொரு கேள்வியும் எழுந்துள்ளது. இவ்வாறு 2.5 லட்சத்திற்கும் மேற்கொண்டு வரி செலுத்தும் போது, பணியாளர் தொடர்ந்து கிடைக்கும் வட்டி வருவாய்க்கு வரி செலுத்த வேண்டுமா? ஒய்வூதியத்தின்போதும் இது கணக்கிடபடுமா? என்று பல கேள்விகள் எழுந்து வருகின்றன.
ஊழியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்
பிஎஃப் தொகையானது அதிகரிக்க அதிகரிக்க வருமானம் அதிகரிக்கும். இதனால் செலுத்த வேண்டிய வரி விகிதமும் அதிகரிக்கும். எனினும் மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது இதில் வரியே செலுத்தினாலும், வட்டி அதிகம் என்பதால் லாபகரமானது தான் என இத்துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர். ஆக இதனை கருத்தில் கொண்டு ஊழியர்கள் செயல்படுவது நல்லது.
சிறு கணக்கீடு
பொதுவாக ஒரு தனியார் நிறுவனத்தின் பணிபுரியும் ஒரு ஊழியர், மாதத்திற்கு 20,833 ரூபாய்க்கு மேல் பி.எஃப். செலுத்துபவர் எனில் இதனால் பாதிக்கப்படலாம். இதனால் பாதிப்படைவார்கள். ஏனெனில் ஊழியரின் பங்களிப்பு ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாயை விட அதிகமாக இருக்கும். அதாவது 1,73,608 ரூபாய்க்கு மேல் அடிப்படை மாத சம்பளம் உள்ள அனைத்து நபர்களுக்கும் ஒரு வருடத்தில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பி.எஃப் பங்களிப்பு இருக்கும், எனவே அவர்கள் அந்த கூடுதல் தொகையில் சம்பாதித்த வட்டிக்கு வரி செலுத்துவார்கள்.
இதனையும் நினைவில் கொள்ளுங்கள்
அடிப்படை சம்பளம் மாதத்திற்கு 173,608-க்கும் குறைவாக இருந்தாலும், தன்னார்வ பி.எஃப் பங்களிப்பு செய்தால், அவர்களின் மொத்த பங்களிப்பு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் வரி விதிக்கப்படும் என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்வது நல்லது.