இன்றைய காலக்கட்டத்தில் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், அரசின் சில திட்டங்களுக்கு என்றுமே வரவேற்புண்டு. குறிப்பாக பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு பத்திரம், பிஎஃப், உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் நல்ல லாபகரமானதாக உள்ளது.
இவை பொதுவாக அரசின் கீழ் செயல்பட்டு வரும் அஞ்சலகம் மற்றும் இபிஎஃப்ஓ-வின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. ஆக லாபகரமானதாகவும், பாதுகாப்பானதாகவும் உள்ளன.
மேற்கண்ட இந்த திட்டங்களில் வட்டி விகிதம் என்ன? வரி சலுகை உண்டா? வேறு எந்த மாதிரியான திட்டங்கள் உண்டு என்பதை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம்.
வருங்கால வைப்பு நிதி
சம்பளதாரர்களுக்கு வருங்கால வைப்பு நிதி என்பது இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓய்வூதிய திட்டமிடலாகும்.
இது சிறந்த சேமிப்பு என்பதோடு, வரி சேமிப்புக்கும் உதவும் ஒரு சிறந்த திட்டமாக உள்ளது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி விதிகளின் படி, ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 12% மற்றும் அகவிலைப்படி ஆகியவை சேர்த்து ஊழியரின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் பங்களிப்பாக செலுத்தப்படுகிறது.
விபிஎஃப் திட்டம்
ஊழியரின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் உங்களின் பங்களிப்பு அதிகமாக வேண்டுமானால், நீங்கள் உங்களது விருப்பப்படி தன்னார்வ வருங்கால வைப்பு நிதியாக (VPF) பங்களிப்பு செய்யலாம்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு என்பது பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு ஓய்வுகாலத்தினை திட்டமிட ஒரு சிறந்த அம்சமாக உள்ளது. இந்த திட்டத்திற்கு இணைப்பாக, நிறுவனங்களுடன் இருக்கும் தன்னார்வ வருங்கால வைப்பு நிதி கணக்கு உள்ளது.
விபிஎஃப்புக்கு வரம்பு இல்லை
வழக்கமாக நமது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதியானது, இபிஎஃப் ஒரு வரம்புக்குள் உட்பட்டதாகவே இருக்கும். ஆனால் இத்தகைய வரம்பு என்பது விபிஎஃப் கணக்கிற்கு இல்லை.
இதன் மூலம் நீங்கள் அதிக தொகையினை ஓய்வுக்காலத்திற்கு சேமிக்க முடியும். ஆனால் விபிஎஃப் அதிகரித்தாலும், நிறுவனத்தின் பங்களிப்பு அதிகரிக்காது.
எவ்வளவு வட்டி?
மற்ற சேமிப்பு திட்டங்களோடு ஒப்பிடும்போது இது சிறந்த முதலீடு தான். ஏனெனில் இந்த இபிஎஃப்க்கு வட்டி விகிதம் 8.50% ஆகும். குறிப்பாக வங்கி டெபாசிட்டுகளோடு ஒப்பிடும்போது இதற்கான வட்டி விகிதம் மிக அதிகம் தான்.
இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகள் கூட எஃப்டிக்கு 3-6% வரையில் தான் வட்டியினை வழங்கி வருகின்றன.
வரி சலுகையும் உண்டு
நீங்கள் செலுத்தும் இபிஎஃப், விபிஎஃப் தொகைக்கும் பிரிவு 80சின் படி வரி சலுகை உண்டு. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உங்களது பிஎஃப் தொகைய வித்ட்ரா செய்தால் அதற்கு வரி உண்டு. அதாவது ஐந்தாண்டுகள் தொடர்ச்சியான சேவையை முடிக்கும் முன்பு நீங்கள் நிதிகளைத் திரும்ப பெற விரும்பினால், சேமித்த தொகை மற்றும் வட்டிக்கு வரி கட்ட வேண்டியிருக்கும்.
பொது வருங்கால வைப்பு நிதி
வருங்கால வைப்பு நிதி, விபிஎஃப் திட்டங்களில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டுமே இணைந்து பயன் பெற முடியும். ஆனால் அரசின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டமானது அனைவரும் இணைந்து கொள்ளலாம்.
நீண்டகால நோக்கங்களுக்காக, அதுவும் ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்ய நினைப்போருக்கு நிச்சயம், இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம் தான்.
பிபிஎஃப்-பில் வட்டி விகிதம்
ஏனெனில் முதலீட்டிற்கு பங்கம் இல்லாத ஒரு சிறந்த முதலீடு. இந்த திட்டமானது 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது. தற்போது வட்டி விகிதம் 7.1% ஆகும்.
முதிர்வு காலம் எப்போது?
அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் வருடத்திற்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் செலுத்திக் கொள்ளலாம், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம்.
உங்களது பிபிஎஃப் கணக்கு தொடங்கி முதிர்வு அடைந்துவிட்டால், 15 வருடத்தின் நிதியாண்டின் முடிவில் க்ளைம் செய்து கொள்ளலாம்.
உங்களது கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து 7வது நிதியாண்டில் உங்களது பிபிஎஃப் கணக்கில் இருந்து ஓரளவு தொகையினை பெறலாம். சில வங்கிகள் 5 ஆண்டுகளுக்கு பிறகும் பணம் எடுக்க அனுமதிக்கின்றன.
தேசிய ஓய்வூதிய திட்டம்
என்.பி.எஸ் எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டம் நாட்டில் உள்ள அனைத்து அஞ்சலகத்திலும் பெறக்கூடிய பாதுகாப்பான திட்டமாகும்.
இது ஒரு நிலையான வருமானத்தை தரக்கூடிய சிறு சேமிப்பு முதலீட்டு திட்டமாகும்.
NPS கணக்கில் இருந்து முதிர்வுக்கு முன்பே ஒரு தொகையை பெற முன்னதாக 1 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 2.5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கபட்டுள்ளது. இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் முதலீட்டை தேர்வு செய்ய வாய்ப்புண்டு. எனினும் பங்கு சந்தையில் அதிகபட்ச வரம்பு என்பது 75% மட்டுமே.
என்பிஎஸ் சலுகைகள்
TIER-1 ஓய்வூதிய திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர், கணக்கு முடிவு பெறும் வரையில் அல்லது ஒய்வு பெறும் வரையில் நிதியினை திரும்ப பெற முடியாது. எனினும் இந்த தேசிய ஓய்வூதிய திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளியேறும் போது மட்டுமே, இக்கணக்கினை முடித்து பணத்தை திரும்ப பெற முடியும். இதில் குறைந்தபட்சம் 6000 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.
TIER-2 ஒய்வூதிய திட்டத்தில் சேருபவர்கள், இந்த திட்டத்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் செலுத்திய பணத்தினை எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கணக்கினை முதல் வகையான கணக்கிற்கான கூடுதல் இணைப்புக் கணக்காகவும் எடுத்து கொள்ளலாம். சந்தாதாரர் டயர் 1ல் கணக்கு தொடங்கியிருந்தால் மட்டுமே, டயர் 2ல் கணக்கு திறக்க முடியும்.
NPS-ல் சலுகைகள்
NPS கணக்கில் இருந்து முதிர்வுக்கு முன்பே ஒரு தொகையை பெற முன்னதாக 1 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 2.5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கபட்டுள்ளது.
இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் முதலீட்டை தேர்வு செய்ய வாய்ப்புண்டு.
இந்த திட்டத்திலும் வரிச்சலுகையும் உண்டு.
எந்த திட்டம் சிறந்தது?
ஊழியர்களுக்கு மத்தியில் வருங்கால வைப்பு நிதி திட்டம் சிறந்ததாக பார்க்கப்பட்டாலும், ஊழியர்கள் அல்லாத மக்கள் என்றும் பார்க்கும்போது பொது வருங்கால வைப்பு நிதியும், தேசிய சேமிப்பு பத்திரத்திலும் இடையில் பணத்தினை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு மட்டுமே எடுக்க முடியும். பிஎஃப்னினை விட வட்டி குறைவு. எனினும் இதனை இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம்.