நீங்கள் இன்சூரன்ஸ் பாலிசி போட்டிருந்தாலோ அல்லது அதனை பற்றி ஆன்லைனில் தேடியிருந்தாலோ, நிச்சயம் பாலிசி பஜார் பற்றி அறிந்திருக்க முடியும். ஏனெனில் இந்தியாவில் உள்ள பிரபலமான ஸ்டார்டப் நிறுவனங்களில் ஒன்று. ஆன்லைனில் இன்சூரன்ஸ் பாலிசி என்று தேடினாலே இன்று முதலாவதாக வந்து நிற்பது பாலிசிபஜார் தான்.
இது இன்று இன்சூரன்ஸ் துறையில் வெற்றிகரமான நிறுவனமாக வலம் வந்து கொண்டும் உள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பொது பங்கு வெளியீடு என்பது நிச்சயம் முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாகத் தான் இருக்கும்.
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் இன்சூரன்ஸ் நிறுவனமான பாலிசி பஜார், இந்த பங்கு வெளியீட்டின் மூலம் 4,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
எவ்வளவு பங்கு விற்பனை?
இந்த நிறுவனம் சுமார் 15 சதவீதம் பங்குகளை இதன் மூலம் விற்பனை செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பங்கு வெளியீட்டினை ஆறு வணிக வங்கிகள் நிர்வகிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கடந்த ஆண்டிலேயே இந்த நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், பாலிசி பஜார் நிறுவனம் ஒரு அதிரடி அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில் 2021ம் ஆண்டிற்குள் 250 மில்லியன் டாலர் திரட்ட திட்டமிட்டுள்ளதாக பாலிசி பஜார் நிறுவத்தின் இணை நிறுவனர் யாஷுஷ் தகியா கூறியிருந்தார்.
சர்வதேச முதலீடுகள்
இதனையடுத்து இந்த ஸ்டார்டப் நிறுவனம் 3.5 பில்லியன் டாலர் மதிப்பினை எட்ட வேண்டும் எனவும் திட்டமிட்டுள்ளதாக அப்போதே கூறியிருந்தது. பாலிசி பஜார் நிறுவனத்தில் ஏற்கனவே சாஃப்ட்பேங்க் குழுமம், டைகர் குளோபல், டென்சென்ட் ஹோல்டிங்ஸ் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இந்த நிலையில் தற்போது பங்கு சந்தையில் நுழைந்து நிதி திரட்டுவதன் மூலம் உலகம் முழுக்க தனது சேவையினை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஐபிஓ திட்டம்
பாலிசி பஜார் நிறுவனத்தினை இந்திய பங்கு சந்தைகள் மட்டும் அல்ல, அன்னிய பங்கு சந்தையிலும் பட்டியலிட திட்டமிட்டுள்ளதாக சமீபத்திக் வெளியான செய்திகள் கூறின.
இந்தியாவின் யுனிகார்ன் ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக ஸ்விக்கி, ஓலா, பேடிஎம், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்கள் இருக்கின்றன. எனினும் பாலிசி பஜார் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டால், யுனிகார்ன் நிறுவனங்களில் பங்குச் சந்தையில் இடம்பிடித்த முதல் நிறுவனம் என்ற பெயர் பாலிசி பஜாருக்கு கிடைக்கும்.
ஆன்லைனில் பாலிசி விற்பனை
தற்போது பாலிசி பஜார் மாதத்திற்கு ஒரு மில்லியன் பாலிசிகளை விற்க உதவுகிறது. இந்த நிலையில் இந்த பங்கு வெளியீடு மூலம் மேற்கொண்டு நிறுவத்தினை விரிவுபடுத்த முடியும் என்றும் நம்பப்படுகின்றது.
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டிஜிட்டல் மோகத்தினால் இதற்கும் வரும் காலத்தில் நல்ல வாய்ப்புகள் இருக்கலாம். ஆக இது முதலீட்டாளர்களுக்கு நல்லதொரு வாய்ப்பாகவே அமையும்.
வருவாய் அதிகரிக்கும்
இந்த பங்கு வெளியீடானது அடுத்த மாதத்தில் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நடப்பு நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் 1,100 கோடி ரூபாயாக அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே இன்சூரன்ஸ் பிரீமியம் வசூல் 6,000 கோடி ரூபாயாக இருக்கலாம் என்றும், இது 2020ம் ஆண்டில் 4,000 கோடி ரூபாயாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.