இன்சூரன்ஸ் நிறுவனங்களை போன்றே அஞ்சலகமும் பல இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்கி வருகின்றது.
அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் அரசு ஊழியர்கள், நகர்ப்புற, கிராமப்புற மக்களுக்கு பயனளிக்கக் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.
இதில் இரண்டு வகையான திட்டங்கள் உள்ளன. ஒன்று, அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (PLI). இரண்டாவது, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (RPLI).
யார் யார் எடுக்கலாம்?
முதல் திட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவியுடன் செயல்பட்டு வரும் நிறுவனங்களின் ஊழியர்கள், அனைத்து தனியார் கல்வி நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என பலரும் இணையலாம். இரண்டாவது திட்டத்தில் கிராமப் பகுதிகளில் வசிக்கும் அனைவரும் இந்த பாலிசியினை பாலிசி எடுத்துக் கொள்ளலாம்.
நிதி ரீதியாக பாதுகாப்பு
பொதுவாக இன்சூரன்ஸ் திட்டங்கள் எதிர்பாராத விதமாக ஏற்படும் இழப்புகளில் இருந்து, குடும்பத்தினருக்கு நிதி ரீதியாக பாதுகாப்பு அளிக்கிறது. இப்படி பாதுகாப்பு அளிக்கும் திட்டங்கள் அரசின் திட்டமாக இருந்தால், இன்னும் பாதுகாப்பானது தானே. அதுவும் கூடுதலாக வரிச்சலுகையுடன் கிடைக்கும் என்றால் இன்னும் நல்லது தானே. அந்த வகையில் நாம் இன்று சில அஞ்சலக இன்சூரன்ஸ் திட்டங்களை பற்றி பார்க்கவிருக்கிறோம்.
வயது வரம்பு
இந்திய அஞ்சலகம் மக்களின் நலனுக்காக, கிராம சுரக்ஷா அல்லது முழு ஆயுள் காப்பீடு (Gram Suraksha or Whole Life Assurance) என்று அழைக்கப்படும் ஒரு திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்ச வயது 19, அதிகபட்ச வயது 55 ஆகும்.
குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 10,000 ரூபாய், அதிகபட்ச காப்பீட்டுத் தொகை10 லட்சம் ரூபாய் ஆகும்.
கடன் வசதி உண்டா?
இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் 4 வருட முதலீட்டிற்கு பிறகு கடன் பெற்றுக் கொள்ளும் வசதி உண்டு. 5 வருடங்களுக்கு முன்னதாக பாலிசியை சரண்டர் செய்தால் போனஸ் கிடைக்காது. இந்தத் திட்டத்தில் தனிநபருக்கு பிரீமியம் செலுத்தும் சில விருப்பங்கள் உண்டு. அவை 55 ஆண்டுகள், 58 ஆண்டுகள் மற்றும் 60 ஆண்டுகள்.
எவ்வளவு பிரீமியம்
ஒரு நபர் 19 வயதில் 10 லட்சம் தொகைக்கான கிராம சுரக்ஷா காப்பீட்டை வாங்கினால், 55 வருடங்களுக்கான மாதாந்திர பிரீமியம் 1515 ரூபாயாக இருக்கும். இதே 58 வருடங்களுக்கு எனில் 1463 ரூபாயாக இருக்கும். அதுவே, 60 வருடங்களுக்கு 1141 ரூபாயாக இருக்கும்.
முதிர்வு தொகை எவ்வளவு கிடைக்கும்?
இந்த அஞ்சலக திட்டத்தில் 55 ஆண்டுகள் திட்டத்திற்கு முதிர்வுத் தொகை 31.60 லட்சம் ரூபாயாக இருக்கும்.
இதே 58 வருட திட்டத்தில் முதிர்வு தொகை 33.40 லட்சம் ரூபாயாக இருக்கும்.
இதே 60 ஆண்டுகளுக்கு முதிர்வு தொகை 34.60 லட்சம் ரூபாயாக இருக்கும்.
நாமினி வசதி உண்டு?
இந்த பாலிசியில் நாமினி வசதியும் உண்டு. ஒரு வாடிக்கையாளர் தங்கள் மின்னஞ்சல் ஐடி அல்லது மொபைல் எண்ணைப் புதுப்பிக்க விரும்பினால், அவர்கள் அருகில் உள்ள தபால் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ள?
அதே போல இந்த இன்சூரன்ஸ் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் 1800 180 5232/155232 என்ற டோல் ப்ரீ எண்ணை அழைக்கலாம்,
அப்படியும் இல்லாவிட்டால் http://www.postallifeinsurance.gov.in/ என்ற இணையதளத்தில் முழு விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
எண்டோவ்மென்ட் பாலிசி(Santosh)
இந்த திட்டம் தவிர அஞ்சலகத்தில் இன்னும் சில பிரபலமான திட்டங்களும் உள்ளன. அதில் ஒன்று எண்டோவ்மென்ட் பாலிசி (Santosh).
இந்த பாலிசியினை பொறுத்தவரையில் பாலசிதாரர் முன்னரே தீர்மானிக்கப்பட்ட வயதை முதிர்ச்சியை அடையும் வரை, அதாவது 35,40,45,50,55,58 மற்றும் 60 வயதை எட்டும் வரை, உத்திரவாத தொகை மற்றும் போனஸ் ஆகியவற்றிற்கு உத்தரவாதம் கிடைக்கிறது.
ஒரு வேளை பாலிசிதாரர் இறந்துவிட்டால், நாமினிக்கோ அல்லது சட்டபூர்வ வாரிசுகளுக்கே போனஸூடன் முழு தொகையும் உறுதி செய்யப்படும்.
எண்டோவ்மென்ட் பாலிசியில் லோன் வசதி
எண்டோவ்மென்ட் பாலிசியில் 19 - 55 வரையிலானவர்கள் இணைந்து கொள்ளலாம். இதில் குறைந்தபட்ச கவரேஜ் தொகை 20,000 ரூபாய் ஆகும்.
அதிகபட்சம் 50 லட்சம் ரூபாய் வரையிலும் க்ளைம் செய்ய முடியும்.
இந்த பாலிசி போட்ட மூன்று வருடத்திற்கு பிறகு லோன் வாங்கிக் கொள்ள முடியும்.
3 வருடத்திற்கு பின்னர் சரண்டர் செய்தும் கொள்ளலாம். இந்த பாலிசியிலும் போனஸ் வசதி உண்டு.
முன்கூட்டியே முடிவுற்ற ஆயுள் காப்பீடு (Sumangal)
இது ஒரு மணி பேக் திட்டம். இதில் 50 லட்சம் ரூபாய் வரை உறுதி தொகை செய்யப்படுகிறது.
இந்த பாலிசி அவ்வப்போது வருமானம் தேவைப்படுபவர்களுக்கு ஏற்ற ஒரு பாலிசி.
சர்வைவல் சலுகைகள் காப்பீட்டாளருக்கு அவ்வப்போது வழங்கப்படுகின்றன.
பாலிசி காலம் 15 வருடங்கள் மற்றும் 20 ஆண்டுகளாகும்.
நன்மைகள் எப்போது?
இதில் 15 ஆண்டுக் காலப் பாலிசிக்கு, 6 ஆண்டுகள் (20%), 9 ஆண்டுகள் (20%), 12 ஆண்டுகள் (20%) மற்றும் 15 ஆண்டுகள் (40% மற்றும் பெறப்பட்ட போனஸ்) ஆகியவற்றிற்குப் பிறகு நன்மைகள் வழங்கப்படுகின்றன.
இதே 20 ஆண்டுக் காலப் பாலிசிக்கு, 8 ஆண்டுகள் (20%), 12 ஆண்டுகள் (20%), 16 ஆண்டுகள் (20%) மற்றும் 20 ஆண்டுகள் (40% மற்றும் பெறப்பட்ட போனஸ்) ஆகியவற்றின் பின்னர் நன்மைகள் வழங்கப்படுகின்றன.
கூட்டு ஆயுள் காப்பீடு (Yugal Suraksha)
இது ஓரு கூட்டு ஆயுள் காப்பீட்டு திட்டமாகும். இதில் மனைவி பிஎல்ஐ பாலிசிகளுக்கு தகுதியுடையவராக இருக்க வேண்டும். இதில் இருவருக்கும் போனஸ் மற்றும் உறுதிபடுத்தப்பட்ட தொகை கிடைக்கும்.
இந்த திட்டத்திலும் குறைந்தபட்சம் 20,000 ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரையில் உறுதிபடுத்தப்பட்ட தொகை இருக்கும்.
இந்த பாலிசியில் 21 -45 வயது வரையில் உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம்.
இந்த பாலிசிக்கும் மூன்று வருடம் கழித்து லோன் பெற்றுக் கொள்ள முடியும்.
குழந்தைகளுக்கான பாலிசி (Bal Jeevan Bima)
பாலிசிதாரரின் குழந்தைகளுக்கு காப்புறுதி காப்பீடு வழங்குவதற்காக இந்த திட்டம் உள்ளது.
இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு இரு குழந்தைகள் மட்டுமே பாலிசி எடுக்க தகுதியுடையவர்கள்.
குழந்தைகளின் வயது 5 - 20 வயது இருக்க வேண்டும்.
இதில் அதிகபட்ச தொகை மொத்தமாக 3 லட்சம் அல்லது குறைவாக உள்ள பிரதான பாலிசிதாரரின் உத்தரவாதத்திற்கு சமமானதாகும். முக்கியமாக பாலிசிதாரர் (குழந்தைகளின் பெற்றோர் ) 45 வயதை அடைந்திருக்கக் கூடாது.
இந்த திட்டத்தில் பாலிசிதாரர் இறந்துவிட்டால், பிரீமியம் செலுத்தவேண்டியதில்லை.
பெற்றோருக்கான பாலிசி காலவரை முடிந்த பின் குழந்தைக்குச் பெறப்பட்ட போனஸ் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தொகை வழங்கப்பட வேண்டும்.